கத்தோலிக்க செபமாலை
கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். பாரம்பரியப்படி செபமாலையில் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களின் 15 மறையுண்மைகளை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தார். 2002ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒளியின் மறைபொருள்கள் என்னும் பெயரில் இயேசுவின் பணி வாழ்வை சிந்திக்கும் 5 புதிய மறையுண்மைகளை சேர்த்தார்.
செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன. செபமாலையின் ஆங்கிலச் சொல்லான ரோசரி (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது.
வரலாறு
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை "இயேசு கற்பித்த இறைவேண்டலாகிய" பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மரியே (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள்.
இன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது.
13ம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார்.
செபிக்கும் முறை
- முதலில் சிலுவை அடையாளத்துடன் செபமாலை தொடங்கும்.
- சிலுவையைப் பிடித்தவாறே விசுவாச அறிக்கை சொல்லப்படும்.
- பெரிய மணியில் கிறித்து கற்பித்த செபம் (பரலோகத்தில்...) செபிக்கப்படும்.
- மூன்று சிறிய மணிகளில் மங்கள வார்த்தை செபம் (அருள் நிறைந்த...) சொல்லப்படும்.
- பெரிய மணியில் திரித்துவப் புகழ் (தந்தைக்கும், மகனுக்கும்...) கூறப்படும்.
- அதன்பின் அன்றைய கிழமைக்கு ஏற்ற மறைபொருள்களின் மறையுண்மைகள் தியானித்து செபிக்கப்படும்.
- முதல் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
- ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
- இரண்டாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
- ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
- மூன்றாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
- ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
- நான்காம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
- ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
- ஐந்தாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
- ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
- செபமாலையைத் தொடர்ந்து பல செபங்கள், மன்றாட்டுமாலை, விவிலிய வாசகம் ஆகியவை இடம்பெறும்.
- இறுதியில் சிலுவை அடையாளத்துடன் செபம் முடியும்.
குறிப்பு: செபமாலையில் பயன்படுத்தப்படும் "ஓ என் இயேசுவே!..." செபம் பாத்திமா அன்னை கற்றுக்கொடுத்தது ஆகும்.
“ | ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும். | ” |
செபமாலை மறைபொருள்கள்
- மகிழ்ச்சி மறைபொருள்கள்
- கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது. (லூக்கா 1:30,38 - வரம்:தாழ்ச்சி)
- மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது. (லூக் 1:41-42 - வரம்:பிறரன்பு)
- இயேசுவின் பிறப்பு. (லூக் 2:6-7 - வரம்: எளிமை)
- இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது. (லூக் 2:22 - வரம்:பணிவு)
- காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது. (லூக் 2:49-50 - வரம்:அவரை எந்நாளும் தேடி நிற்க)
- ஒளியின் மறைபொருள்
- இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு 3:16-17 - வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)
- கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. (யோவான் 2:11 - வரம்:நம்பிக்கை)
- இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது. (மாற்கு 1:14-15 - வரம்:மனம்மாற்றம்)
- இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு 9:3,7 - வரம்:புனிதம்)
- இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது. (மத்தேயு 26:26-28 - வரம்:ஆராதணை)
- துயர மறைபொருள்கள்
- இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (மத்தேயு 26:42 - வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)
- இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது. (மாற்கு 15:15 - வரம்:புலன்களை அடக்கி வாழ)
- இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 - வரம்: ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)
- இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17 - வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)
- இயேசு சிலுவையில் அறையப்பட்டது. (யோவான் 19:30 - வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்)
- மகிமை மறைபொருள்கள்
- இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6 - வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)
- இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51 - வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)
- தூய ஆவியாரின் வருகை. (திருப்பாடல் 2:4 - வரம்: ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற)
- இறையன்னையின் விண்ணேற்பு. (திருவெளிப்பாடு 12:1 - வரம்:நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற)
- இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 - வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)
தியானிக்கும் கிழமைகள்
செபமாலையின் வெவ்வேறு மறைபொருள்களை தியானிக்கும் கிழமைகள் பின்வருமாறு:
கிழமை | ஒளியின் மறைபொருளோடு | ஒளியின் மறைபொருள் இல்லாமல் |
---|---|---|
ஞாயிற்றுக்கிழமை | மகிமை மறைபொருள்கள் |
திருவருகைக் காலம் & கிறிஸ்து பிறப்புக் காலம்: மகிழ்ச்சி மறைபொருள்கள் |
திங்கட்கிழமை | மகிழ்ச்சி மறைபொருள்கள் | மகிழ்ச்சி மறைபொருள்கள் |
செவ்வாய்க்கிழமை | துயர மறைபொருள்கள் | துயர மறைபொருள்கள் |
புதன்கிழமை | மகிமை மறைபொருள்கள் | மகிமை மறைபொருள்கள் |
வியாழக்கிழமை | ஒளியின் மறைபொருள்கள் | மகிழ்ச்சி மறைபொருள்கள் |
வெள்ளிக்கிழமை | துயர மறைபொருள்கள் | துயர மறைபொருள்கள் |
சனிக்கிழமை | மகிழ்ச்சி மறைபொருள்கள் | மகிமை மறைபொருள்கள் |
செபமாலை வடிவங்கள்
செபமாலை செபிக்க பயன்படுத்தப்படும் செபமாலை அருட்கருவிகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவற்றில் சில கீழேத் தரப்படுகின்றன.
- 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செபமாலை.
- 53 மணி கொண்ட கயிறு செபமாலை.
- 53 மணி கொண்ட சங்கிலி செபமாலை.
- பத்து மணி கொண்ட செபமாலை.
- மோதிர செபமாலை -யின் ஒரு வடிவம்.
- மோதிர செபமாலை -யின் மறு வடிவம்.
இவற்றையும் பார்க்கவும்
- கிறித்தவ இறைவேண்டல்கள்