ஆழ்கடல் விண்மீன் நீயே!

ஆழ்கடல் விண்மீன் நீயே! (இலத்தீன்: Ave Maris Stella, ஆங்கிலம்:Hail Star of the Sea) என்பது திருப்புகழ்மாலையின் மாலை மன்றாட்டில் தூய கன்னி மரியாவைக் குறித்து பாடப்படும் பாடலாகும். நடுக் காலத்தில் மிகவும் புகழ் பெறத்துவங்கிய இப்பாடலுக்கு பலர் இசையமைத்துள்ளனர்.

தூய கன்னி மரியா

இப்பாடலை யார் இயற்றினார் என்பது குறித்து ஒத்த கருத்தில்லை. சிலர் கிலார்வாக்ஸ் நகர புனித பெர்ணார்டு (Bernard of Clairvaux) என்றும் வேறு சிலர் புனித வெனான்தியுஸ் (Saint Venantius Fortunatus) என்றும் கூறுவர்.[1]

இப்பாடல் மரியாவுக்கு அர்ப்பணமுறை என்னும் புனித லூயிஸ் தெ மான்ஃபோடினால் துவங்கப்பட்ட பக்திமுயற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பாடல் வரிகள்

கிரகோரியன் முறைமைப்படி Ave Maris Stella என்னும் இப்பாடலின் துவக்க வரியின் இசையமைப்பு
ஆழ்கடல் விண்மீன் நீயே வாழ்க!
தாழ்ந்து இறைவனை ஈன்றாய், வாழ்க!
ஆயினும் கன்னியாய் நிலைத்து, விண்ணின்
வாயிலும் ஆயினாய் வியத்தகு வகையில்
வானவர் கபிரியேல் வாக்கை ஏற்றாய்;
ஊனம் விளைத்து அமைதியைக் குலைத்த
ஏவையின் பெயரை மாற்றி அமைத்தாய்;
மூவா அமைதி நிலைக்க அருள்வாய்.
அன்னை எமக்கு நீயெனக் காட்டு,
உன்மகனாக எமக்காய் பிறந்த
நன்மகன் இயேசு எம்செபம் எல்லாம்
உன்வழி ஏற்பார், நல்வழி பிறக்க
தன்னிகர் இல்லாக் கன்னியே வாழ்க,
உன்னத சாந்தம் உடையோய், வாழ்க;
எண்ணிலா எம்பாவம் பொறுத்து, எமக்கு
விண்ணகத் தூய்மையும் சாந்தமும் அருள்க.
தூயநல் வாழ்வை எமக்குத் தருவாய்,
தீயவை அழித்து வழிநடத் திடுவாய்;
சேயர்உன் சேயாம் இயேசுவைக்கண்டு
ஓயா தென்றும் இன்புறச் செய்வாய்.
தந்தை, திருமகன், தூய ஆவியும்,
எந்தை இறைவன், மும்மையில் ஒருவர்;
தந்தோம் அவர்க்குத் தாள்பணிந் தின்று
வந்தனை, வணக்கம், வாழ்த்துடன் புகழும் - ஆமென்.

மேற்கோள்கள்

  1.   "Ave Maris Stella". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.