தமிழிசை
தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாக தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன; வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
ஆதாரங்கள்

வாய்மொழி இலக்கியங்கள், எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், தமிழிசை ஆய்வுகள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. சங்க நூல்களான தொல்காப்பியம், கூத்தநூல், பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன..[1] பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைநுணுக்கம், பஞ்ச மரபு போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.
சங்கம் மருபிய நூலான சிலப்பதிகாரம் தமிழிசை பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற மணிமேகலை, திருமந்திரம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய காரைக்கால் அம்மையார் அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.
பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலான நாயன்மார்களினது தேவாரங்களும், பன்னி௫ ஆழ்வார்களினது நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற திவாகரம், பிங்கலம் போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. பட்டினத்தார், இடைக் காட்டுச்சித்தர் ஆகியோரும் இக் காலத்தவரே.
பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றினார். இதில் உள்ள இசைத்தாளங்கள் தனித்தன்மை பெற்றவை. குமரகுருபரர், முத்துத் தாண்டவர் ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள்.
வரலாறு
தமிழர் |
---|
![]() |
முதன்மைக் கட்டுரை: தமிழிசை வரலாறு
தமிழிசை வரலாற்றை ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
- சங்க காலம் (கிமு 500+ - கிபி 300)
- சமணர் காலம் (கிபி 300 - கிபி 600)
- பக்தி காலம்
- இடைக் காலம்
- தற்காலம்
சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. இதை சங்க இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து சமணர் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தினர். சமணர் இசையை எதிர்த்தனர். அதனால் இசை நலிவுற்றது. இது தமிழிசையின் முதல் இருண்டகாலமாகக் கூறப்படுகிறது.[2] ஏறக்குறைய கிபி 7 ம் நூற்றாண்டில் தமிழ்ப் பக்தி இயக்கம் வீச்சுக் கொண்டது. சைவமும் வைணவமும் செல்வாக்குப் பெற்றன. நாயன்மார்களின் தேவாரங்கள் ஊடாகவும், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது.
கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.[3] இதைத் தொடர்ந்து லுங்கு விசய நகர அரசர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, தமிழிசை இயக்கம் தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.
19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் போன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலை 1917 இல் வெளியிட்டார். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இது ஒரு முல நூலாக உள்ளது.[4]
சுரம்
தமிழிசையில் அடிப்படை ஒலி நிலைகளை சுரம் என்று வழங்கப்பட்டது.
பண்
தமிழிசையின் அடிப்படை வடிவங்களை பண் என்று வழங்கப்பட்டது. 'பாலை யாழ்', 'குறிஞ்சி யாழ்', 'மருத யாழ்', 'நெய்தல் யாழ்' என்பன முதன்மையான பண்கள் ஆகும். மொத்தம் 103 பண்கள் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கான குறிப்புகளும் இயற்றப்பட்டுள்ளன. பண்ணை விரிவாக்கி பாடுதலுக்கு 'ஆளத்தி' என வழங்கப்பட்டது.
மண்டிலம்
பாடல்கள் மூன்று மண்டிலங்களான (ஸ்தாயி) மெலிவு, சமண் மற்றும் வலிவு ஆகியவற்றில் இசைக்கப்பட்டது.
தமிழர் அன்றாட வாழ்வில் பாட்டு
"தமிழர்கள் வாழ்க்கையில் தாயின் வயிற்றில் கருக்கொண்டதுமே நலுங்குப் பாடல், மண்ணில் உதித்ததுமே குழந்தைக்குத் தாலாட்டுப் பாடல், சிறுவர்களுக்குத் நிலாப்பாடல், (பாரதியின் பாப்பா பாடல்), இளைய வயதில் வீரப்பாடல் மற்றும் காதல் பாடல், திருமணத்தில் திருமணப் பாட்டு, உயிர் துறந்தபின் ஒப்பாரிப் பாட்டு என மனித வாழ்க்கையின் அனைத்துப் பருவங்களிலும் தமிழ்ப் பாடல்கள் உள்ளன."[5]
தமிழிசை வாணர்கள்
முதன்மைக் கட்டுரை: தமிழிசை வாணர்கள்
இசைக் கருவிகள்
முதன்மைக் கட்டுரை: தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம்
தமிழிசைக்கு வந்த சோதனைகள்
தமிழர், இசையிலும், இயலிலும், நாடகவியலிலும் மேம்பட்டு விளங்கி வந்தனர். சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், ஆளத்தி அமைப்பு போன்ற எத்தனையோ இசைநூல்களும், கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம் விளக்கத்தார் கூத்து, நாட்டியவிளக்கம் ஆகிய நாடக நூல்களும் அழிந்து போயின. சைவ சமயத்தை பரப்பிய தமிழிசை நூல்கள் சமணர்களால் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் எதிர்கொள்ளப்பட்டன.
தமிழிசை நூற்கள்
- பெருநாரை
- பெருங்குருகு
- பேரிசை
- சிற்றிசை
- இசைமரபு
- இசைநுணுக்கம்
- சிலப்பதிகாரம்
தமிழிசை ஆய்வுகள்
- 1732 - சதுரகராதி - வீரமாமுனிவர் - "பாலை, பாவகை, பண்முறை, பண்கள் பாடக் கூடிய நேரம், பண்களுக்குரிய தேவதைகள், 32 பண்களின் பெயர்கள், தாளம், சந்தம் எனப்படும் வண்ணம், யாழ்ப் பெயர்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன"[6]
- 1907 - ராவ் சாஹேப் ஆபிரகாம் பண்டிதர் - கருணாமிர்த சாகரத் திரட்டு
- பெ. தூரன் -
- 1940 - செல்வி ஜசக் - பழந்தமிழிசை (ஆய்வேடு)
- 1947 - விபுலாநந்தர் - யாழ் நூல்
- க. வெள்ளை வாணர் - இசைத்தமிழ்
- கு. கோதண்டபாணியார் - பழந்தமிழிசை
- அ. இராகவன் - இசையும் யாழும்
- வீ. பா. கா சுந்தரம் - பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்
- 2006 - மார்கரெட் பாஸ்டின் - இன்னிசை யாழ்
மேற்கோள்கள்
- பி. டி. செல்லத்துரை. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம். பக்கம்: 194.
- "தமிழகத்தின் இசை மரபைப்பற்றிய விவாதத்தில் இரண்டு ‘இருண்ட’ காலகட்டங்கள் பேசப்படுகின்றன. முதல் காலகட்டம் களப்பிரர்களுடையது. தமிழிசையா - ஜெயமோகன்
- தமிழிசையா - ஜெயமோகன்
- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் - ஜெயமோகன்
- மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 133
- மார்கரெட் பாஸ்டின். (2006). இன்னிசை யாழ். திருச்சி: கம்பானியன் விளம்பர சேவை.
உசாத்துணைகள்
- அ. சண்முகதாஸ். (1998). தமிழின் பா வடிவங்கள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்