ஒத்ராந்தோ மறைசாட்சிகள்
ஒத்ராந்தோ மறைசாட்சிகள் அல்லது ஒத்ராந்தோவின் புனித மறைசாட்சிகள் என்பவர்கள் இத்தாலியின் தென்பகுதியில் உள்ள ஒத்ராந்தோ என்னும் துறைமுக நகரம் துருக்கியர்களின் கப்பற்படையால் வீழ்த்தப்பட்டபின், இசுலாமை ஏற்க மறுத்ததால் ஆகஸ்ட் 14, 1480 அன்று ஜிதிக் அகமது பாஷா என்னும் துருக்கியப் படைத்தலைவரின் தலைமையின் கீழ் கொல்லப்பட்ட 813 பேர் ஆவர். அதே நாளில் கொல்லப்பட்டவர்கள் பலர் படை வீரர்களாகவும், காவலாளிகளாகவும் இருந்தாலும், கிறித்தவ மறையைக் கைவிட மறுத்ததற்காகக் கொல்லப்பட்ட 813 பேர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

அந்தோனியோ பிரிமால்தோ மற்றும் தோழர்கள் ஒத்ராந்தோ மறைசாட்சிகள் | |
---|---|
![]() ஒத்ராந்தோ மறைமாவட்ட முதன்மைக் கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஒத்ராந்தோ மறைசாட்சிகள் சிலரின் மண்டை ஓடுகள் | |
மறைசாட்சி | |
இறப்பு | ஆகத்து 14, 1480 மினெர்வா குன்று, ஒத்ராந்தோ, நோப்பில்ஸ் (இப்போது இத்தாலி) |
ஏற்கும் சபை/சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | பதினான்காம் கிளமெண்ட்-ஆல் 14 டிசம்பர் 1771 |
புனிதர் பட்டம் | திருத்தந்தை பிரான்சிசு-ஆல் 12 மே 2013இல், புனித பேதுரு சதுக்கம், புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் |
முக்கிய திருத்தலங்கள் | ஒத்ராந்தோ மறைமாவட்டத் தலைமைக் கோவில் |
திருவிழா | 14 ஆகத்து |
சித்தரிக்கப்படும் வகை | மண்டையோடுகள், தலை வெட்டப்படுவது போல |
பாதுகாவல் | ஒத்ராந்தோ உயர் உயர்மறைமாவட்டம், நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படுவோர் |
வரலாறு
துருக்கியர்களால் ஒத்ராந்தோ கோட்டை கைப்பற்றப்பட்டபின் ஒத்ராந்தோவின் வயதுமுதிர்ந்த பேராயர் ஸ்தேஃபெனோ அக்ரீக்கொலி, அவரது மறைமாவட்டத் தலைமைக் கோவிலிலேயே கொல்லப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்டது. அதை ஒரு கோலில் ஏற்றி, நகரத்தின் தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டுசென்று அவமதித்தனர். ஆயர் ஸ்டீபன் பென்டினெல்லி வாளால் வெட்டப்பட்டு துண்டுதுண்டாக்கப்பட்டார். படைத்தலைவர் பிரான்செஸ்கோ சுரெலோ இரம்பத்தால் உயிரோடு துண்டுதுண்டாக்கப்பட்டு இறந்தார்.
பின்னர் அந்த நகரில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கைது செய்த துருக்கியர், அவர்கள் இசுலாமை தழுவினால் உயிரோடு விடுவிக்க ஆணையிட்டனர். ஆனால் கைதானவர்கள் அந்தோனியோ பிரிமால்தோ[1] என்னும் வயது முதிர்ந்த தையற்காரரை துருக்கியரிடம் அனுப்பி தாங்கள் கிறிஸ்துவுக்காக ஆயிரம் முறையேனும் இறக்கத்தயாராக உள்ளதாக அறிவித்ததால், அவர்கள் அனைவரையும் மினெர்வா குன்றுக்குக் கூட்டிச்சென்று தலை வெட்டிக் கொன்றனர்.[2]
புனிதர் பட்டமளிப்பு
கிறித்தவ மறைக்காகக் கொல்லப்பட்ட இந்த நபர்களுக்கு மக்கள் வணக்கம் செலுத்தத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து 14 டிசம்பர் 1771 அன்று திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட் அந்த வணக்கத்துக்கு அங்கீகாரம் அளித்து, இவர்களுக்கு அருளாளர் பட்டம் (முத்திப்பேறு பட்டம் வழங்கினார். 2007, சூலை 6ஆம் நாள் இவர்களின் இறப்பை கத்தோலிக்க மறைக்கு எதிரான வெறுப்பால் அவர்கள்மீது திணிக்கப்பட்ட மறைசாட்சியமாக பதினாறாம் பெனடிக்ட் ஏற்று அறிக்கையிட்டார்.
20 டிசம்பர் 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், அருட்சகோதரி ஃப்ரான்செஸ்கா லெவோத் என்பவர் முத். அந்தோனியோ பிரிமால்தோ மற்றும் தோழர்களின் பரிந்துரையால் குணமடைந்ததை ஏற்று புனிதர் பட்டம் அளிக்க அனுமதி அளித்தார்.
இவர்களுக்கும் ஒத்ராந்தோ முற்றுகையின்போது கிறித்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டோருக்கும் திருத்தந்தை பிரான்சிசு 12 மே 2013 அன்று புனிதர் பட்டம் அளித்தார்.
மேற்கோள்கள்
- Blessed Antony Primaldo at saints.sqpn.com
- Bunson, Matthew. "How the 800 Martyrs of Otranto Saved Rome". Catholic Answers. பார்த்த நாள் 11 February 2012.