தஞ்சாவூர் வரதராஜப்பெருமாள் கோயில்

தஞ்சாவூர் வரதராஜ பெருமாள் கோயில் என்ற நிலையில் இரு கோயில்கள் உள்ளன. ஒரு கோயில் கீழ ராஜ வீதியில் உள்ளது. மற்றொரு கோயில் தஞ்சாவூரின் மையப்பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில் தெருவிலும் அமைந்துள்ளது.[1]

கீழ வீதியிலுள்ள கோயிலின் ராஜகோபுரம்
வரதராஜ பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோயில் குடமுழுக்கு (ஆகஸ்டு 20,2015)

கீழ ராஜ வீதி

இக்கோயில் இரண்டாம் சரபோஜி மன்னரால் திருப்பணி செய்யப்பெற்றது. [2] ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் மற்றும் கருடாழ்வாரைக் காணலாம். வலப்புறம் நாகர், இடப்புறம் விநாயகர் உள்ளனர். கருவறையின் முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் காணப்படுகின்றனர். இடப்புறம் அம்மன் சன்னதி முன்புறம் இரு துவாரபாலகிகள் உள்ளனர். இக்கோயிலில் காணப்படும் இரு சன்னதிகளுக்கும் தனித்தனி வாயில்கள் உள்ளன. இரு சிறிய ராஜகோபுரங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளன. பெருமாள் சன்னதியிலிருந்து தாயார் சன்னதிக்கும், தாயார் சன்னதியிலிருந்து பெருமாள் சன்னதிக்கும் செல்லலாம்.

மூலவர்

கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப்பெருமாள் உள்ளார்.

நவநீத சேவை

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [3] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [4]

வரதராஜ பெருமாள் கோயில் தெரு

விமானம்

முன் வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன்மண்டபம், கருவறை, விமானம் போன்றவை இக்கோயிலில் உள்ளன. முன்மண்டபத்தில் பெருமாளின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன.கருவறைக் கோஷ்டத்தில் விநாயகர், நரசிம்மர், விஷ்ணு துர்க்கை உள்ளனர். கருவறையின் பின்புறம் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் துளசி மாடம் உள்ளது.இக்கோயிலின் இக்கோயிலின் குடமுழுக்கு ஆகஸ்டு 20, 2015 அன்று நடைபெற்றது. [1]

மூலவர்

கருவறையில் வரதராஜ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் உள்ளார். மூவரும் நின்ற கோலத்தில் உள்ளனர்.

மேற்கோள்

  1. வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு, தினத்தந்தி, 21 ஆகஸ்டு 2015
  2. குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, பக்.162
  3. தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016
  4. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.