சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில்
சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
இக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை அருகே ரயில் நிலைய சாலை அருகே 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. [2] இத்தலத்தை சூலமங்கை என்றும் அழைப்பர்.
இறைவன்
தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். [2]
சப்தஸ்தானத் தலம்
சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில் கௌமாரி வழிபட்ட தலமாகும். [2] இப்பகுதியில் சப்தஸ்தானத் தலமாகக் கருதப்படும் கீழ்க்கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இவை சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இப்பகுப்பில் அடங்கும் கோயில்களில் உள்ள இறைவனும், இறைவியும் கீழ்க்கண்டவர் ஆவர்.
- திருச்சக்கராப்பள்ளி - சக்கரவாகேசுவரர், தேவநாயகி
- அரியமங்கை - ஹரிமுக்தீஸ்வரர், ஞானாம்பிகை
- சூலமங்கை - கிருத்திவாகேஸ்வரர், அலங்காரவல்லி
- நந்திமங்கை - ஜம்புகேஸ்வரர்,அகிலாண்டேஸ்வரி
- பசுமங்கை - பசுபதீஸ்வரர், பால்வளைநாயகி
- தாழமங்கை - சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி
- புள்ளமங்கை - ஆலங்துறைநாதர், சௌந்தரநாயகி
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014