வழிநூல்

தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இலக்கண நூல்கள் வகைப்படுத்திப் பார்க்கின்றன.

தொல்காப்பியப் பார்வை

தொல்காப்பியம் நூல்களை முதல்நூல், வழிநூல் என இரண்டாக வகைப்படுத்துகிறது. [1]

வழிநூல் முதல்நூலின் வழியே தோன்றும் நூல் என்கிறது. [2]

தொல்காப்பியம் வழிநூலை

  1. முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
  2. முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
  3. முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
  4. முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்

என மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது. [3] [4]

நன்னூல் பார்வை

நன்னூல் நூலை மூன்று வகைப்படுத்துகிறது.

  1. முதல்நூல்,
  2. வழிநூல்,
  3. சார்புநூல்

என்பன அவையாகும். [5]

  • வழிநூல் - முதல்நூலின் கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் சில வேறுபாடுகளைக் கூட்டிக் கூறுவது வழிநூல். [6]
  • சார்பு-நூல் என்னும் புடைநூல் - முதல்நூலில் ஒரு பகுதியையும், வழிநூலின் ஒரு பகுதியையும் ஏற்றுக்கொண்டு, அவர்களோடு மாறுபட்டுக் கூறும் நூல் புடைநூல் எனப்படும். [7]

அடிக்குறிப்பு

  1. மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
    உரை படு நூல்தாம் இரு வகை இயல
    முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  2. வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும். (தொல்காப்பியம் 3-641)
  3. வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் (தொல்காப்பியம் 3-642)
  4. தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
    அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே.(தொல்காப்பியம் 3-643)
  5. முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் (நன்னூல் 5)
  6. முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்துப்
    பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
    அழியா மரபினது வழிநூல் ஆகும் (நன்னூல் 7)
  7. இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
    திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும் (நன்னூல் 8)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.