கழற்குடத்தின் இயல்பு

கழற்குடத்தின் இயல்பு என்பது கற்பித்தல் செய்யும் ஆசிரியனுக்கு கழற்பெய் குடத்தின் இயல்பு இருக்கக்கூடாது என்பதைக் கூறும் நன்னூல் விளக்கமாகும்.

வழவழப்பான கழற்சிக்காய்கள் குடத்திற்குள் இடப்பட்டதும் முன்னும் பின்னுமாக அவை குடத்திற்குள் நிரம்பிவிடும். பின்னர் அவை குடத்திற்குள் இருந்து வெளிப்படும் போது ஒரு வரிசை முறையின்றி முன்னால் இட்டது பின்னாலும் பின்னால் இட்டது முன்னாலும் என மாறிமாறி வெளிப்படும். இதுவே கழற்பெய் குடத்தின் இயல்பு ஆகும்.

அதுபோல, ஆசிரியராகத் தகாதவர் தாம் கற்றுக்கொண்ட முறைப்படியன்றி முன்னால் கூறவேண்டியதைப் பின்னரும் பின்னர் கூறவேண்டியதை முன்னருமாக முறைமாறி மாணாக்கருக்குக் கற்பிக்கும் இயல்புடையவராய் இருப்பார். இங்ஙனம் கல்வி கற்பிப்பது முறையன்று. அவ்வாறு கற்பிக்கப்பட்டால் மாணவர் தெளிவற்றுக் காணப்படுவர்.எனவே கழற்பெய் குடத்தைப் போன்று இருப்பவர் நல்லாசிரியர் ஆகார்.[1]

அடிக்குறிப்புகள்

  1. . பெயதமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
    செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. - நன்னூல் 32

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.