இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1969

இந்தியக் குடியரசின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1969 ல் நடைபெற்றது. சில மாதங்களாகத் தற்காலிகத் குடியரசுத் தலைவராக இருந்த வி. வி. கிரி, இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1969

ஆகஸ்ட் 16, 1969
 
வேட்பாளர் வி. வி. கிரி நீலம் சஞ்சீவ ரெட்டி
கட்சி சுயேட்சை சுயேட்சை
சொந்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேசம்
தேர்வு வாக்குகள் 4,20,077 4,05,427

முந்தைய குடியரசுத் தலைவர்

முகமது ஹிதயத்துல்லா
கட்சி சார்பற்றவர்

குடியரசுத் தலைவர் -தெரிவு

வி. வி. கிரி
காங்கிரசு

பின்புலம்

ஆகஸ்ட் 16, 1969 இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் சாகிர் உசேன் பதிவியிலிருக்கும் போதே மே 3, 1969ல் மரணமடைந்தார். இந்திய தேசிய காங்கிரசின் வி. வி. கிரி இடைக்காலக் குடியரசுத் தலைவராக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்டார். காங்கிரசு சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று குழப்பம் எழுந்தது. தலித் தலைவர் ஜகஜீவன் ராம் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று இந்திரா காந்தி விரும்பினார். இதனை காங்கிரசின் மூத்த தலைவர்கள் (காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா தலைமையிலான சிண்டிகேட்) விரும்பவில்லை. எனவே போட்டியாக நீலம் சஞ்சீவ ரெட்டியை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திரா கிரியினை ரெட்டிக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடச் செய்தார். கிரி தேர்தலில் போட்டியிட தற்காலிக குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முகமது இதயத்துல்லா தற்காலிகக் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

காங்கிரசின் குறடா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தாலும், கட்சி உறுப்பினர்கள் தங்கள் மன்சாட்சி சொல்லும்படி (கிரிக்கு) வாக்களிக்க வேண்டுமென்று இந்திரா அறிவித்தார். முன்னாள் நிதி அமைச்சர் சி. டி. தேஷ்முக்கினை தங்கள் வேட்பாளராக அறிவித்திருந்த பாரதீய ஜன சங்கம், சுதந்திராக் கட்சி முதலான் எதிர்க்கட்சிகள், காங்கிரசுள் நிகழும் பூசலை பயன்படுத்திக் கொள்ள ரெட்டிக்கு ஆதரவளித்தன. திமுக, அகாலி தளம் போன்ற மாநில கட்சிகளும் பல மாநிலங்களில் காங்கிரசில் இருந்து பிரிந்து கட்சி தொடங்கியிருந்தவர்களும் கிரிக்கு ஆதரவளித்தனர். இம்மூன்று வேட்பாளர்களைத் தவிர பல சுயேட்சைகளும் சிறு கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.

இத்தேர்தல் காங்கிசுக்குள் நடந்து கொண்டிருந்த பலப்பரீட்சையினை முடிவு செய்யும் ஒன்றாக அமைந்தது. ஒரே கட்சி இரு வேறு வேட்பாளர்களை நிறுத்தியதால், கட்சியின் உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பாளர்கள் என்ற குழப்பம் நிலவியது. உறுப்பினர்கள் யாருக்க்கு வாக்களிக்கிறார்கள் என்று தெர்தல் முகவர்கள் கணிக்காமல் இருக்கும் வண்ணம் (பிற்காலத்தில் அவ்வுறுப்பினர் மீது உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இதனை காரணம காட்டலாம்), வாக்குச் சீட்டுகளின் பிற்பகுதியில் அச்சடிக்கப்பட்டிருந்த எண்கள் வண்ணக் காகிதத் துண்டுகளை ஒட்டி மறைக்கப்பட்டன. வாக்குகள் எண்ணும் இடத்தில் வாக்குச்சீட்டுகள் பல முறை குலுககி இடம்மாற்றப்பட்டன. மிகுந்த பரபரப்புடன் நடந்த இத்தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது மாநிலத் தலைநகரங்களில் வாக்களிக்காமல் தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காங்கிரசின் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுள் பெரும்பாலானோர் சிண்டிகேட் ஆதரவாளர்களாக இருந்தனர். அவர்க்ளின் நிர்பந்தமின்றி இந்திராவின் வேட்பாளருக்கு வாக்களிக்கவும், கட்சிக் குறடாவின் (சிண்டிகேட் ஆதரவு) உத்தரவுக்கு எதிராக வாக்களிக்க உதவவும் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாடுகளைச் செய்து நடுநிலையின்றி செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடுமையான போட்டி நிலவிய இத்தேர்தலில், முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லை. கிரி 48% வாக்குகளும் ரெட்டி 37% முதல் தெரிவு (first preference) வாக்குகளும் பெற்றனர். இதனால் தேர்தல் விதிகளின் படி தெர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல்த் தெரிவாகத் தேர்ந்தெடுதிருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டன. இவ்வாறு பல சுற்றுகள் முடிந்த பின்னர் இறுதிச் சுற்றில் கிரி 50.9% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இது இந்திரா காந்தி, மூத்த தலைவர்கள் மோதலில் இந்திராவுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டது. இத்தேர்தல் முடிந்து சில மாதங்களுக்குள் காங்கிரசு உட்கட்சிப் பூசல் முற்றி கட்சி பிளவுபட்டது.

முடிவுகள்

ஆதாரம்:[1][2]

வேட்பாளர் பெற்ற வாக்குகள் (முதல் சுற்று) பெற்ற வாக்குகள் (இறுதிச் சுற்று)
வி. வி. கிரி 401,515 420,077
நீலம் சஞ்சீவ ரெட்டி 313,548 405,427
சி. டி. தேஷ்முக் 112,769
சந்திர தத் சேனானி 5,814
ஃபர்சரண் கவுர் 940
ராஜா போஜ் பாண்டுரங் நாதுஜி 831
பாபு லால் மாக் 576
சவுதிரி ஹரி ராம் 125
சர்மா மனோவிகாரி அனிருத் 125
குபி ராம் 94
பாக்மால்
கிருஷ்ண குமார் சாட்டர்ஜி
சந்தோஷ் சிங் கச்வாஹா
ராம்துலார் திரிபதி சகோர்
ரமன்லால் புருசோத்தம் வியாஸ்
மொத்தம் 836,337 825,504

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.