தலித்

இந்திய மற்றும் தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் பட்டியலின மக்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஓடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே வட இந்தியாவில் அழைத்து வந்தனர். இந்த சமுதாயங்கள் பல கால தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்.

தலித் என்று அழைத்துக் கொள்ளும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் மக்கள் தொகை

தலித் என்று அழைத்துக்கொள்ளப்படும் பட்டியலின ஜாதிகளின் மக்கள் தொகை இந்திய அரசு தளத்தில் உள்ள 2011 தகவலின்படி16.2% ஆகும். தமிழ்நாட்டளவில் இந்த சதவீதம் 2011 கணக்கெடுப்பின்படி 7.2% ஆகும். தமிழக அளவில் பட்டியலின ஜாதிகளாக வருபவை அரசு அட்டவணைப்படி 87[1] ஜாதிகளாக உள்ளது.

தலித் பண்பாட்டு அமைப்பு

"இந்திய தலித்துக்களின் பண்பாட்டு அமைப்பானது இந்தியாவின் ஆதிக்க பண்பாட்டின் சமூக ஒழுங்கமைப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் மறுமதிபீடு செய்வதும் இல்லை. மாறாக அது அவ்வாதிக்கப் பண்பாட்டுனைப் போன்றதொரு அமைப்பொழுங்கைத் தனது பண்பாட்டுக்குள்ளும் தொடர்ந்து மறுபடைப்புச் செய்து கொண்டிருக்கின்றது" [2]

தலித்துகள் மீதான தாக்குதல்களும் , நீதிமன்ற தீர்ப்புகளும்

இந்தியா

  1. வெண்மணி கிராமத்தில் 44 தலித் விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான கோபால கிருஷ்ண நாயுடு உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இத்தகைய பெரிய மனிதர்கள் உயிரோடு எரிப்பது போன்ற செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று நீதி மன்றம் கூறியது .[3]
  2. திண்ணியம் என்ற கிராமத்தில் தலித் ஒருவரின் வாயில் மலத்தை திணித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட வெறியர் விடுவிக்கப்பட்டார். முதல் தகவலறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு உயர் அதிகாரியின் அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டது.[4]
  3. பீகார் மாநிலம் பதானிதோலா என்ற இடத்தில் 1996ம் ஆண்டு 21 தலித்துகள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த அரா மாவட்டத்தின் அமர்வு நீதிமன்றம் 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது .ரண்வீர் சேனா 1996ல் தலித் மக்களை கொன்றுகுவித்த அமைப்பாகும். படுகொலை செய்யப்பட்ட தலித்துகளில் குழந்தைகள், பெண்களும் அடங்குவர். 10 வயது குழந்தையைக் கொன்றதாகக் குற்றம்சாட் டப்பட்ட அஜாய்சிங், 3 வயது குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சிங் ஆகியோரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தப் படுகொலையை நேரில் கண்டவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில்தான் அமர்வு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியது. ஆனால் சாட்சியத்தில் தெளிவில்லை என்று கூறி பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது. சாட்சிகள் குற்றம் இழைத்த அனைவரின் பெயரையும் கூறி அடையாளம் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பாட்னா உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.[5]
  4. தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவானூர் என்ற தன் சொந்த ஊர் கோவிலில் சாமி கும்பிட்டதற்காக அந்த ஊர் மக்களே தலித் சிறுவனை அடித்து வன்கொடுமை செய்தனர்.[6]
  5. மும்பையில் உள்ள அகமது நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகார் ஷெஜ்வல் என்ற 21 வயது இளைஞன் மே 16 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு அம்பேத்கரின் பாடலை செல்போனில் வைத்திருந்ததற்காக கொலை செய்யப்பட்டான்.[7]
  6. கர்நாடக மாநிலத்தில் கஷன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொலேநார்சிபூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யச்சென்ற பெண்களை உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் சிலர் அபராதம் விதித்தனர்.[8]
  7. 17 சனவரி 2016 அன்று தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தின் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவன் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு (ஏபிவிபி) மாணவர்களின் தாக்குதலால் தூக்கிலிட்டு மரணம் அடைந்தான். இந்த மாணவனின் தந்தை தனது மகன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்உடைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றும் அவனது தாயார் தான் பட்டியலின ஜாதியைச் சேர்ந்தவர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து படித்துவந்த இடையில் தான் பட்டியலின ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொண்டான் என்றும் அவரது தந்தையால் தெரிவிக்கப்பட்டது.[9]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் தலித்துகள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.[10]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.tnpsc.gov.in/communities-list.html
  2. மொஃபாத், 1979:3 - ச. பிலவேந்திரன் அவர்களின் தமிழ்ச் சொல்லாடலும் மானிடவியல் விவாதங்களும்
  3. "அநீதி". தீக்கதிர் (18 ஏப்ரல் 2012). பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
  4. S. Dorairaj (Volume 26 - Issue 24 :: Nov. 21-Dec. 04, 2009). "Unwilling to act Governments across the country have shown a remarkable reluctance to use the S.C./S.T. Act to protect Dalits from upper-caste violence.". Frontline. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
  5. Shoumojit Banerjee (17 ஏப்ரல் 2012). "All accused in 1996 Bihar Dalit carnage acquitted". தி இந்து. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
  6. கிருஷ்ணகிரியில் தலித் சிறுவன் மீது வன்கொடுமை: 6 பேர் கைது
  7. ரிங்டோனில் அம்பேத்கர் பாட்டு: தலித் இளைஞர் கொலையில் 4 பேர் சிக்கினர் தினகரன் மே 24 2015
  8. நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம் தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015
  9. ஆராய்ச்சி மாணவர் தற்கொலை: ஹைதராபாத் மத்திய பல்கலை. சர்ச்சையும் பின்னணியும் தி இந்து தமிழ் 18 சனவரி 2016
  10. தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்களாக இருப்பது ஏன்?

துணை நூல்கள்

  • சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.