அரசினர் கலைக்கல்லூரி, கும்பகோணம்
அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம் முன்னதாக அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1854ஆம் ஆண்டில் மாகாண பள்ளியாக தொடங்கப்பட்டது.[1] இது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் செயற்பட்டுவந்த பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.[2] தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டு வருகிறது. முனைவர் சி. சீதாராமன் தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[4]
கும்பகோணம் கலைக் கல்லூரி | |
வகை | அரசினர் கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | அக்டோபர் 19, 1854 |
சார்பு | தன்னாட்சி கல்லூரி |
முதல்வர் | சி. சீதாராமன் |
அமைவிடம் | கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, ![]() 10.970819°N 79.381515°E |
இணையத்தளம் | www.gacakmu.in/ |

வரலாறு


1854ஆம் ஆண்டில் அக்டோபர் அன்று கும்பகோணத்தில் ஒரு மாகாணப் பள்ளியாக நிறுவப்பட்டது.[2] பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர், மற்றும் டி. கோபால் ராவ் ஆகிய கல்வியாளர்கள் முயற்சியால் 1867இல் அரசினர் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது.[2][5][6] 1881ஆம் ஆண்டில், இது ஒரு முழுமையான கல்லூரியாக மாற்றப்பட்டது. 1877இல் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக மாற்றம் பெற்றது.[7] பின்னர் 1881இல் உயர்நிலைப்பள்ளி படிப்புகள் நிறுத்தப்பட்டன.[5]
முதுநிலை பட்டப் படிப்புகள் 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. தற்போது உள்ள கல்லூரி கட்டிடங்கள் 1871 மற்றும் 1875ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டவை. 1987ஆம் முதல் தன்னாட்சிக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது.
சிறப்புகள்
- வி. எஸ். சீனிவாச சாஸ்திரி, பி. எஸ். சிவசாமி ஐயர், கணித மேதை இராமானுசன் ஆகியோர் இக்கல்லூரியில் பயின்ற, குறிப்பிடத்தக்க மாணவர்களில் சிலராவர்.
- தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் இக்கல்லூரியில் செயல்படும் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
வழங்கும் படிப்புகள்
இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கலைப்பெட்டகம்
இக்கல்லூரியில் காணப்படுகின்ற பல கட்டடங்கள் மிகப்பழமையானவையாகவும், கலை நயத்தோடும் அமைந்துள்ளன. மணிக்கூண்டு அமைந்துள்ள கட்டடம் வெளிநாட்டுப் பாணியும், நம் நாட்டுப் பாணியும் கொண்ட நிலையில் காணப்படுகிறது. நுழைவாயிலின் அருகே மணிக்கூண்டு அமைந்துள்ள பகுதியின் தரைத்தளத்தில் காணப்படுகின்ற தூண்களில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. குறுக்கே காணப்படுகின்ற பலகைகளிலும் சிற்பங்கள் உள்ளன. மர உத்தரங்கள் சீராக வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மரச்சிற்பங்களைக் காணும்போது கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், அய்யம்பேட்டை அருகேயுள்ள புள்ளமங்கை கோயிலிலும் கோஷ்டத்தைச் சுற்றி அமைந்துள்ள நுட்பமான, சிறிய அளவிலான சிற்பங்கள் நினைவிற்கு வந்துவிடும். அங்கு அவை கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு இவை மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் லிங்கத்திருமேனியைப் பூசிக்கும் பிரம்மா, பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாள், மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற லிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்படும் சிவபெருமான் உள்ளிட்ட பல சிற்பங்கள் காணப்படுகின்றன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி
- AlexD. D. Craik (2008). Mr Hopkins' Men: Cambridge Reform and British Mathematics in the 19th Century. Springer. பக். 260. ISBN 978-1-84800-132-9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84800-132-0.
- பாரதிதாசன் பல்கலைக்கழக தன்னாட்சி கல்லூரிகள்
- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி முதல்வர்
- AlexD. D. Craik (2008). Mr Hopkins' Men: Cambridge Reform and British Mathematics in the 19th Century. Springer. பக். 261. ISBN 978-1-84800-132-9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84800-132-0.
- The University of Madras Calendar. University of Madras. 1933. பக். 157.
- Imperial Gazetteer of India, pp 21
வெளியிணைப்புகள்
மரச்சிற்பங்கள் படத்தொகுப்பு
- தூணில் நான்கு புறமும் சிற்பங்கள்
- லிங்கத்தை பூசிக்கும் பிரம்மா
- பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமாள்
- வரிசையாக மரத்தூண்கள்
- மார்க்கண்டேயரைக் காப்பாற்ற வெளிப்படும் சிவன்
- நின்ற நிலையில் இறைவனின் திருமேனி
- குறுக்குப் பலகையில் சிற்பம்