அனுராதபுரம்
அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.
அனுராதபுரம் | |
---|---|
நகரம் | |
![]() குட்டம் பொகுண | |
நாடு | ![]() |
இலங்கையின் மாகாணங்கள் | வடமத்திய மாகாணம் |
இலங்கையின் மாவட்டங்கள் | அனுராதபுர மாவட்டம் |
ஆரம்பிக்கப்பட்டது | கி.மு. நான்காம் நூற்றாண்டு |
அரசு | |
• வகை | மாநகர சபை |
பரப்பளவு | |
• நகரம் | 2 |
• நிலம் | 2 |
• நீர் | 199 |
• நகர்ப்புறம் | 14 |
மக்கள்தொகை (2004) | |
• நகரம் | 782 |
• அடர்த்தி | 5 |
நேர வலயம் | Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30) |
Postal code | 50000 |

மக்கள்தொகையியல்
இனம் | மக்கள்தொகை | % |
---|---|---|
சிங்களவர் | 51,775 | 91.42 |
இலங்கைச் சோனகர் | 3,825 | 6.75 |
இலங்கைத் தமிழர் | 850 | 1.50 |
மலையகத் தமிழர் | 45 | 0.08 |
ஏனையோர் (பரங்கியர், மலாயர் உட்பட) | 137 | 0.24 |
மொத்தம் | 56,632 | 100 |
மூலம்: www.statistics.gov.lk - கணக்கெடுப்பு ஆண்டு 2001
ஸ்ரீ மகா போதி
இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.

நீர்ப்பாசனம்
இந்த நகரைச் சுற்றி, 5 பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மிகப் பழைய காலம் முதலே இருந்து வருகின்றன. அனுராதபுரத்திலே வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத்தேவைகளுக்காக, சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளங்கள் பயன்பட்டன. சுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக அதனைச் சுற்றிப் பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன.
மீள் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக் கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், வழிபாட்டிடங்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், வைத்தியசாலைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.
அனுராதபுரத்திலுள்ள அழிபாடுகள்
- ஸ்ரீ மகாபோதி
- ருவான்வெலிசாய
- தூபாராமய
- லோவமகாபாய
- அபயகிரி விகாரை
- ஜேதவனாராமய
- மிரிசவெட்டி தாதுகோபுரம்
- லங்காராமய
- இசுருமுனிய
- மகுல் உயன
- வெஸ்ஸகிரி
- ரத்ன பிரசாதய
- இராணி மாளிகை
- தக்கிண தாதுகோபுரம்
- செல சைத்திய
- நாக விகாரை
- கிரிபத் வெஹெர
- குட்டம் பொக்குண
- சமாதி சிலை
- தொலுவில சிலை