எல்லாளன் நடவடிக்கை 2007

எல்லாளன் நடவடிக்கை[1] என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும்[2] இலங்கை வான்படையினர் 13 பேரும் இராணுவத்தினரில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டனர்.[3] மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்.[3]

எல்லாளன் நடவடிக்கை
நான்காவது ஈழப் போர்
காலம் 2007 அக்டோபர் 22
இடம் அனுராதபுரம் வான்படைத் தளம், இலங்கை
அணிகள்
இலங்கை வான்படை தமிழ்ப் புலிகள்
தலைவர்கள்
குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க லெப். கேணல் இளங்கோ
குழுவினர்
தளத்திலிருந்த வான்படையினர் 21 சிறப்புக் கரும்புலிகள்
இழப்புக்கள்
14 பேர் பலி
8 விமானங்கள் அழிவு
21 பேர் பலி

நடவடிக்கை

புலிகள் வில்பத்து சரணாலயத்துக்கூடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஊடுருவி அங்கிருந்து காடுகள் வழியாக அனுராதபுர வான்படைத்தளத்துக்கு அருகிலிருக்கும் நுவரவாவிக்கு வந்தடைததாக கருதப்படுகிறது. அக்டோபர் 22 வான்படைத் தளத்துக்கு அருகாமையில் காட்டில் தலைத் துண்டிக்கப் பட்டநிலையில் காணபட்டவரை தங்களைக் கண்டமையால் புலிகள் கொலைச் செய்திருக்கலாம் என இலங்கை காவல்துறையினர் கருதுகின்றனர்.[4] இவ் விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலித் தாக்குதல் அணியினர் வான்படைத் தளத்துக்கருகில் உள்ள தென்னந்தோப்பில், கிளிநொச்சியிலிருந்து வரவேண்டிய கட்டளைக்காக காத்திருந்தனர். இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர்.[5][6]

உட்புகுதல்

2007 அக்டோபர் 21 இரவு சிரச தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி நடப் பெற்றுக் கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் பெருந்தெருவைக் கடந்து தளத்தின் வடக்குப் பகுதியை அடைந்தது. முன்காலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலி, இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் சமாந்தரமாக தளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது கம்பி வேலி, இவையிரண்டுக்கும் இடையில் செயற்படா நிலையில் இருந்த மின்வேலி என்பவற்றை வெட்டி தளத்தினுள் உட்புகுந்தனர்.[5][6]

நிலையெடுத்தல்

உள்நுழைந்த அணியினர் தாமிருந்த நிலைக்கும் வானூர்தி ஓடுபாதைக்கும் இடையில், முதல் நிலை பதுங்கு குழிகளுக்கு குறுக்காக புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். பாதையின் இருபுறமும் பதுங்கு குழிகளை நோக்கி மிதிவெடிகள் நிலைக்குத்தாக புதைக்கப்பட்டிருந்தன. சத்தவெடிகளை அகற்றியவுடன் விடுதலைப் புலிகளின் அணியினர் முதல் நிலை பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி ஊர்ந்து செல்ல தொடங்கினர். இரண்டாவது குழுவினர் அணையின் மற்றைய முனையை அடைந்து முதன் நிரை பதுங்கு குழிகளில் இரண்டு பதுங்கு குழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். 3 விடுதலைப் புலிகள் மாத்திரம் நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவற்காக பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர். எவ்வாறெனினும் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை.[5][6]

14 பேரைக் கொண்ட முதலாவது அணியின் பணிஉலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதாகும். இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது. முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது. இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்த 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி துப்பாகி சூட்டை நடத்தி முதல் நிரல் பதுங்கு குழிகளில் காவலுக்கு இருந்த வான்படையினரை கொன்றப் பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர். துப்பாக்கிச் சூடு தொடங்கிய நேரம் அக்டோபர் 22 முன்காலை 3:20 மணியாகும். துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.[5][6]

தாக்குதல்

தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டமையால் வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. கோபுரத்திற்கு அருகில் இருந்த 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை சில நிமிட கடும் தாக்குதலுக்கு பின்னர் புலிகள் வசமானது.[7] வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத் தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து முன்காலை 4:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு சிறு ரக விமானங்கள் தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசித் தாக்கினர்.[1]

இவ்விமானங்கள் வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள இந்தியாவால் வழங்கப்பட்ட ராடார்களின் இணங்கானப்பட்டது.[8] வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்திகள் அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு கிடைத்த தகவலின் படி ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 வகை உலங்குவானூர்தியில் புறப்பட்டனர்.[5][6] இவ்வுலங்குவானூர்தி அனுராதபுரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் மிகிந்தலைக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியது. இதன்போது இதில் பயணம் செய்த 4 வான்படை வீரர்களும் இறந்தனர். இவ்வானுர்தி வவுனியா வான் படைத்தளத்தை அண்டிய பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மிகிந்தலையில் வீழ்ந்து நொறுங்கியதாக வவுனியா வான்படைத்தள வீரர்களை மேற்கோள் காட்டி டெயிலி மிரர் பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.[9] எவ்வாரெனினும், இவ்வானூர்தி இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் வானூர்தி என எண்ணி சுட்டு வீழ்த்தப்படவில்லை என் இலங்கை அரசின் பேச்சாளர் மறுத்துள்ளார்.[10] மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். இதனிடையே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று இலங்கை இராணுவத்தின் ராடார் ஏல்லைக்கு வெளியே சென்று திரையில் இருந்து மறைந்து விட்டன.[5][6]

வானூர்திகள் அழிப்பு

வான்படைத் தளத்தின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை தம்வசப்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள் அதைக் கொண்டு வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கியும், உலங்கு வானுர்திகள் நோக்கியும், அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.[5][6]

கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த நிலையில் சமர் தொடர்ந்தது.பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் புலிகள் அணி மீது தாக்குதலைத் தொடுத்து, தாக்குதலில் காலை 11:00 மணியளவில் 21 சிறப்புக் கரும்புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்ட நிலையில், மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் 6 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்க செய்து தற்கொலைச் செய்திருப்பது தெரிய வந்தது.[5][6]

புலிகள் வெளியேற்றம்

இலங்கையின் முக்கிய இராணுவ ஆய்வாளரான இக்பால் அத்தாசின் நிரலை தாங்கி வரும் சண்டே டைம்ஸ் பத்தி்ரிகை புலிகளின் தாக்குதல் அணியில் 27 வீரர்கள் காணப்பட்டதாகவும் மிகுதி 6 பேர் சுமார் காலை 5 மணியளவில் தளத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் வெளியேறிச் சென்றவர்களை அயலில் வசிக்கும் கிராமத்தவர்கள் கண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.[6]

நடவடிக்கையின் பின்புலம்

அனுராதபுரம் வான்படைத்தளம்

இலங்கையில் உள்ள 13 வான் தளங்களில் அனுராதபுர வான்படைத்தளம் நவீன வசதிகள் பொருந்திய ஒரு முக்கிய இராணுவ வான்படைத் தளமாகும்.[11] வட கிழக்குக்கு அருகாமையிலும் அதேவேளை சிங்கள் உள் நிலப்பரப்பிலும் அமைந்துள்ளதால் வடகிழக்கில் இருக்கும் இராணுவத்துக்கும், இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆள் ஆயுத வழங்கல்களுக்கு இந்த தளம் முக்கியமானதாகும். இந்த தளம் மீதான தாக்குதலின் பின்பு, இந்த தளம் தற்காலிகமாக செயலிழந்துள்ளது.

எல்லாளன் - பெயர் தெரிவு

எல்லாளன் 205 கி.மு இருந்து 161 கி.மு வரை அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்த தகவலை சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக பொதுவாக சிங்கள பௌத்தச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. இந்தப் பெயரின் தெரிவு தற்கால நிகழ்வை ஒரு வரலாற்று பின்னணியுடன் தொடர்பு படுத்த முனைவதோடு மட்டுமல்லாமல், சிங்கள ஆட்சியாளர்கள் மீதானா புலிகளின் விமர்சனமான "மகாவம்ச சிந்தனைக்கு" தொடர்பாகவும் இந்தப் பெயர் தெரியப்பட்டிருக்கலாம்.

விளைவுகள்

இத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்களை முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.[12] மேலும் இத்தாக்குதலில் இலங்கை வான்படையின் 12 முதல் 18 வரையிலான வானூர்திகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சீனத் தயாரிப்பான இலங்கை வான்படையினர் கே-8 பயிற்சி வானூர்தி மற்றும் கடல்சார் நடவடிக்கைக்கான வேவு வானூர்தி ஆகியனவும் இத்தாக்குதலில் அழிக்கப்பட் டிருக்களாம் என்றும் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.[12]

தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இவ்விருவழித் தாக்குதலில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 8 விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டதாக வீரகேசரிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார்.[7] பயிற்சி விமானம் ஒன்று, எம்.ஐ. 24 வகை உலங்கு வானூர்திகள் இரண்டு, பி.டி. 6 வகை விமானம் ஒன்று, பெல் 212 வகை உலங்கு வானூர்தி ஒன்று, உளவு விமானம் ஒன்று, சி.டி.எச். 748 ரக விமானம் ஒன்று, மற்றும் வகை அறியப்படாத இன்னுமொரு விமானம் ஒன்றும் தாக்கியழிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் கோரினார்கள்.[1][2][7]

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிவிக்கும் வார இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் அக்டோபர் 22,2007 அன்று நடைபெற்ற போது இலங்கை வான்படைப் பேச்சாளர் அஜன்த சில்வா படையினரின் பதில் தாக்குதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், செவ்வி கொடுக்கப்படு நேரம் வரை விடுதலைப் புலிகளின் 20 சடலங்களைப் படையினர் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். புலிகளின் இத்தாக்குதலின் போது விமானத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஐ. 24 ரக விமானங்கள் இரண்டுக்கும் கே. 8 ரக ஜெட் பயிற்சி விமானத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் இதன்போது தளத்தில் இருந்த 5 விமானப்படை வீரர்கள் பலியாகியும், 18 வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.[13]

அழிக்கப்பட்ட அல்லது சிதைவுகுற்ற வானூர்திகள் விபரம்

முற்றாக அழிக்கப்பட்ட வானூர்திகள்எண்ணிக்கை
பீச்கிராவ்ட் - 200 ரக வேவு வானூர்தி 1
ஆளில்லா வேவு விமானமும் 2
எம்.ஐ.-24 ரக யுத்த உலங்குவானூர்தி 1
எம்.ஐ.-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி 1
கே-8 ரக அதிவேக யுத்த பயிற்சி விமானங்கள் 1
பிரி-6 ரக சண்டைப் பயிற்சி விமானங்கள் 4
பாரிய சிதைவுக்கு உட்பட்ட வானூர்திகள் எண்ணிக்கை
ஆளில்லா வேவு விமானமும் 1
மில் எம்.ஐ.-24 ரக யுத்த உலங்குவானூர்தி 1
கே-8 ரக அதிவேக யுத்த பயிற்சி விமானங்கள் 5
பிரி-6 ரக சண்டைப் பயிற்சி விமானங்கள் 3
சியா மாசெட்டி ரக குண்டு வீச்சு விமானங்கள் 4

மூலம்:சண்டே டைமஸ் [6]

சேத விபரங்களை இலங்கை அரசு ஒத்துக்கொள்கிறது

புலிகள் தொடக்கம் முதலே 8 வான் ஊர்திகள் முற்றாக அழிக்கப்பட்டதாக தெரிவித்தாலும், அந்த செய்தியை இராணுவம் ஆரம்பத்தில் மறுத்தது. பின்னர் இலங்கை பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க இலங்கை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை யொன்றின் மூலம் தளத்தில் 7 வானூர்திகளும் மிகிந்தலையில் விழுந்து நொருங்கிய வானூர்தியையு சேர்த்து மொத்தம் 8 வான் ஊரிதிகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்தியை ஒத்துக் கொண்டார்.[14] உண்மையான இழப்புகளை தொடக்கத்தில் குறைத்து அல்லது மறைத்து வெளியிட்டமை இலங்கை இராணுவத்தினதும் அரசினதும் நம்பகத்தன்மையை மேலும் பாதித்துள்ளதாக இதைப் பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு சுட்டியுள்ளது.[15]

எல்லாளன் நடவடிக்கையின் போது மொத்தம் 10 வானூர்திகள் முற்றாக அழைக்கப்பட்டதாகவும் 16 வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் நவம்பர் 7, 2007 இல் இடம்பெற்ற விசாரணைகளில் அநுராதபுரம் காவற்துறைத் தலைமையகத்தினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன் கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் பலத்த சேதத்துக்குள்ளாயின என்றும் தெரிவித்தனர்[16]

பொதுமக்களுக்கு பாதிப்பு இன்மை

உள்ளக சிங்கள நிலப்பரப்பில் இடம்பெற்ற புலிகளின் இந்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. புலிகள் விமானங்களைப் பயன்படுத்தி குண்டு வீசிய பொழுதும், அவை துல்லியமாகப் படை இலக்குகளைத் தாக்கியது. கடந்த சில வருடங்களாக புலிகள் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை இயன்றளவு தவிர்த்து வருவதற்கு இந்த ஒழுக்கமான படை நடவடிக்கை நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த அவதானிப்பை வெளி நாட்டு ஊடகங்களும், தீவர சிங்கள இராணுவ சார்பு ஊடகங்களும் சுட்டியதும் இங்கு குறிக்கத்தக்கது. இராணுவ விமான குண்டுவீச்சுகளின் போதும் படைநடவடிக்கைகளின் போதும் பொதுமங்கள் பெரும் பாதிப்பு உள்ளாவதும், இடம்பெயர்வதும் இங்கு குறிக்கத்தக்கது.

இலங்கை அரசின் மீதான பொருளாதார பாதிப்புகள்

படைத் துறை ஆய்வாளர், இக்பால் அத்தாசின் கருத்துப்படி, இல்ங்கை பன்னாட்டு விமானங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை கருதாத விடத்து 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக வான்படைத்தளத்தில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்களை விட அனுராதபுரத் தளத்தில் ஏற்பட்ட இழப்புகள் அதிகமானதாகும்.[6]

இந்தத் தாக்குதலில் இழக்கப்பட்ட வான் ஊர்திகள் 40 மில்லியனுக்கு மேலான அமெரிக்க டொலர் பெறுமதி மிக்கவை. இலங்கை மொத்த இராணுவ செலவுகளில் இது ஒரு சிறு விழுக்காடு எனினும், இலங்கை இராணுவம் இந்த தாக்குதலின் பின்பு அதை நிவர்த்தி செய்வதற்கும், இத்தாக்குதல் மூலம் வெளிவந்த பாதுகாப்பு ஓட்டைகளை (எ.கா: புலிகளின் தொடர் வான்வெளி தாக்குதல் திறன்) அடைப்பதற்கு தேவைப்படக்கூடிய பொருளாதார ஆயுத வளங்கள் கரிசமானதாக இருக்கும்.

இலங்கையின் சிங்கள உட்பகுதியில் அமைந்த, உல்லாசப் பயணிகள் தொடர்பாகவும் முக்கியத்துவம் பெற்ற அனுராதபுரத்தில் அமைந்த ஒரு இராணுவ இலக்கை தாக்கியதன் மூலம் இலங்கை அரசின் உல்லாச தொழிற்துறையைத் இந்த தாக்குதல் பாதிக்கும். புலிகள் நேரடியாக பொருளாதார இலக்குகளைத் சமீபகாலமாக தாக்கவில்லையாகினும், இலங்கை அரசின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்ததக்க இராணுவ இலக்குளை தெரிந்தெடுத்து தாக்குதலில் தொடர்ச்சியாக எல்லாளன் நடவடிக்கையையும் பார்க்கலாம்.

புலிகள் மீதான விமர்சனங்கள்

இந்த நடவடிக்கை தொடர்பாக புலிகளை விமர்சித்து எஸ். மனோரஞ்சன் எழுதிய மாவீரர் வேள்விக்கு வளர்த்த வான் கரும்புலிக் கடாக்களும், அநுராதபுரத் தாக்குதலும், தமிழரும் என்ற கட்டுரையில் பின்வரும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சுருக்கமாகக் கூறினால் வெளிநாடுகளில் வாழும் ஆன்மாவையிழந்த தமிழர்களின் கேவலமான குஷிக்காகவும், வருடா வருடம் கார்த்திகை மாதத்தில் தேசியத் தலைவரின் மனநோய் உச்சமடைவதால் அவரின் மனநிலை சாந்தமடைந்து அவர் வெற்றிப் பெருமிதத்துடன் வெற்றியுரை நிகழ்த்துவதற்காகவுமே அநியாயமாக அந்த 21இளம் உயிர்கள் கொலைக்களத்திற்கு பலியாடுகளாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

—எஸ். மனோரஞ்சன், தேனி இணையத்தளம், [17]

எதிர் நடவடிக்கைகள்

தாக்குதலின் பங்கெடுத்த விடுதலைப் புலிகளின் மென்ரக விமானங்கள் தரையிரங்கிய இடங்கள் இனங்கானப்பட்டு குறித்த இலக்குகள் மீது அக்டோபர் 22,2007 காலை 5.30 மணியளவிலிருந்தே இலங்கை விமானப் படையின் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன என இலங்கை வான்படைப் பேச்சாளர் அஜந்த சில்வா தெரிவித்தார்.[13] இலங்கையில் வெளியாகும் நாளேடான தினக்குரல் இதன் போது வன்னியில் தாக்குதல் நடத்தப்படவில்லையென்றும் ஆறு மிக் மற்றும் கிபிர் வகை விமானங்கள் வன்னிக்குச் சென்று பராவெளிச்சக் குண்டுகளை வீசி புலிகளின் வீமானங்களை தேடியாதாக செய்தி வெளியிட்டது.[18]

மேலும் அனுராதபுர நகருக்கு ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிளேயே இருக்குமாறு கேட்கப்பட்டனர். பின்னர் நடந்த தேடுதல்களின் போது 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல் துறையினர் அறிவித்தனர்.[18][19]

இத்தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தியதாக "இந்தியா டெய்லி" என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் புலிகளின் வானுர்திகளுக்கு எதிராக ராடார் துணை ஏவுகணை ஈடுபடுத்த விரும்புவதாகவும் அதற்கு முன்னர் தெற்காசிய நாடுகள் பலவற்றுடன் இலங்கை அரசு ஆலோசனை நடத்துகிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[20]

அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்பின் படி வானூர்தி ஓட்டப்பாதைகளைக் கொண்ட வான் படைத்தளங்களின் பாதுகாப்பு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவம், வான்படை, கடற்படை, காவல்துறை என்பவற்றுக்கு கட்டளையிடும் தகுதிபெற்ற "பிராந்திய கட்டளை அதிகாரி" என்ற புதிய பதவியை ஏற்படுத்தி அனுராதபுர பிராந்திய கட்டளை அதிகாரியாக முன்னாள் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்னவை நியமித்தார்.[21]

இறந்த புலிகளை நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்து செல்லல்

எல்லாளன் நடவடிக்கையின் போது தம்மால் கைப்பற்றப்பட்ட இறந்த 20 புலிகளின் உடல்களையும் நிர்வாணமாக ஊர்வலமாக உழவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்ட ஒரு திறந்த பெட்டியில் அனுராதபுரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக எடுத்து செல்லப்பட்டது.[22] இது அடிப்படை மனிதாபினத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக அமைவது மட்டுமல்லாமல், போர் நடிவடிக்கையில் பேணப்படும் போரில் இறந்தவர் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தத்துக்கும் எதிரானது எனக் குற்றஞ் சாட்டியுள்ளனர்.[22] இது தொடர்பாக விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர்.[23] இப்படி நடைபெறவில்லை என்று இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவித்த போதும், Lanka Dissent[24], தமிழ்நெற்[25], பதிவு[26] ஆகிய இணையத்தளங்கள் படங்களுடன் இந்த செயற்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளன. இலங்கை அரசு இப்பங்கள் உண்மையான படங்கள் கிடையாது எனவும் இலங்கை இராணுவத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும் தெரிவித்துள்ளது.[22] தொடக்கத்தில் இறந்த புலிகளின் உடல்களை சர்வதேச நெஞ்சிலுவைச் சங்கம் ஊடாக புலிகளுக்கு ஒப்படைக்க ஒப்புக்கொண்ட இலங்கை அரசு,[19] பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.[27]. இறந்த கரும்புலிகளின் சடலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றின் உத்தரவின் பேரிலே தாங்கள் புதைத்து விட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.[28]. எனினும் அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி மரணமடைந்த கரும்புலிகளின் உடல்களை புதைக்குமாறு உத்தரவிடவில்லை என்று அனுராதபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.[29].

நினைவஞ்சலிகள்

புலிகளின் அஞ்சலி நிகழ்வுகள்

அக்டோபர் 25 வியாழக்கிழமையன்று புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பெருநிலப்பரப்பில் தாக்குதலில் பலியான 21 சிறப்புக் கரும்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழுவுகள் பல ஒழுங்கு செய்யப்பட்டன.[30] [31] இவ்வாறான நிகழ்வுகள் ஒன்றின் போது வேலுப்பிள்ளை பிரபாகரன் பலியான புலிகளின் படங்களுக்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார்.[32][33][34]

தாக்குதலில் பங்கேற்ற 21 சிறப்புக் கரும்புலிகளின் பெயர்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.[35][36] அவை பின்வரும் அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன.

இயக்கப் பெயர்சொந்த இடம்இயற்பெயர்
லெப்.கேணல் வீமன்திருகோணமலைகோபாலபிள்ளை பிரதீபன்
லெப். கேணல் இளங்கோயாழ்ப்பாண மாவட்டம்இராசதுரை பகீரதன்
லெப். கேணல் மதிவதனன்யாழ்ப்பாண மாவட்டம்பாலசுப்பிரமணியம் தயாசீலன்
கப்டன் தர்மினிகிளிநொச்சிகணேஸ் நிர்மலா
கப்டன் புரட்சியாழ்ப்பாண மாவட்டம்செல்வராசா தனுசன்
மேஜர் சுகன்யாழ்ப்பாணம்கதிரவன் ஜீவகாந்தன்
மேஜர் இளம்புலியாழ்ப்பாணம்துரைரட்ணம் கலைராஜ்
மேஜர் காவலன்பூநகரி, கிளிநொச்சிசண்முகம் சத்தியன்
கப்டன் கருவேந்தன்கிளிநொச்சிமயில்வாகனம் சதீஸ்குமார்
கப்டன் புகழ்மணியாழ்ப்பாணம்தர்மலிங்கம் புவனேஸ்வரன்
மேஜர் எழில்இன்பன்யாழ்ப்பாணம்விமலநாதன் பிரபாகரன்
இயக்கப் பெயர்சொந்த இடம்இயற்பெயர்
கப்டன் புலிமன்னனயாழ்ப்பாணம்கணபதி நந்தகுமார்
கப்டன் அன்புக்கதிர்முல்லைத்தீவுவில்சன் திலீப்குமார்
கப்டன் சுபேசன்மன்னார்நாகராசா மகாராஜ்
கப்டன் செந்தூரன்யாழ்ப்பாணம்கணேசநாதன் தினேஸ்
லெப். அருண்யாழ்ப்பாணம்பத்மநாதன் திவாகரன்
கப்டன் பஞ்சசீலன்மட்டக்களப்புசிவானந்தம் கஜேந்திரன
மேஜர் கனிக்கீதன்மட்டக்களப்புஇராசன் கந்தசாமி
கப்டன் ஈகப்பிரியாயாழ்ப்பாணம்கந்தையா கீதாஞ்சலி
கப்டன் அருள்மலர்யாழ்ப்பாணம்சேவியர் உதயா
கப்டன் ஈழத்தேவன்யாழ்ப்பாணம்தங்கராசா மோசிகரன்
மூலம்:[35][36]

இலங்கைப் படையினரின் இறுதி நிகழ்வுகள்

இந்த நடவடிக்கையில் பலியான பதின்நான்கு வான்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடல்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்பு சொந்த ஊர்களுக்கு எடுத்துசெல்லப்பட்டு அவர்களின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் இறுதி மரியாதைகள் ஒக்டோபர் 24, 2007 அன்று நடைபெறவுள்ளன. இந்த நட டிக்கையில் இறந்த இலங்கைப் படையினரின் விபரங்கள் பின்வருமாறு.[37]

  • Wing Commander Amila Mohotti
  • Squadron Leader Ruwan Wijeratne
  • Flight Lieutenant A.B.M.Silva
  • Flying Officer S.R.Siyambalapitiya
  • Warrant Officer KPS Dayaratne
  • Corporal M.P.W. Deegalla
  • Corporal W.M.Warnakulasuriya
  • Corporal .M.W.Dissanayake
  • Corporal E.P.N. Dayaratne
  • Corporal Preethikumara
  • Lance Corporal H.E.N.D.Fernando
  • Lance Corporal Gunawardane of the Air Force
  • Lance Corporal R.J.S. Ratnayake of Gajaba Regiment
  • Airman Sergeant Asvedduma

விடுதலைப் புலிகள் கௌரவிப்பு

எல்லாளன் நடவடிக்கையின் போது சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான விருதுகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வழங்கி மதிப்பளித்துள்ளார். வன்னியில் நவம்பர் 1, 2007 இல் தளபதிகள், போராளிகள், மத்தியில் இந்நிகழ்வு நடைபெற்றது. தனியாள் போர்த்திறன் செயல்களுக்கான தமிழீழ மறமாணி விருது, குழுப்போர்த்திறன் செயல்களுக்கான தமிழீழ மறவர் விருது தனியொருவரின் துறைசார் அருஞ்செயல்களுக்கான தமிழீழ ஒளிஞாயிறு விருது ஆகியன வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகரத் தாக்குதல் பறப்புக்களை மேற்கொண்ட தமிழீழ வானோடிக்கு நீலப் புலி விருது வழங்கப்பட்டுள்ளது.[38][39]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. தமிழ்நெட் (அக்டோபர் 22,2007). "Tigers claim Anuradhapura air base attack success, say 8 aircrafts destroyed" (html). தமிழ்நெட். பார்த்த நாள் அக்டோபர் 23,2007.
  2. புதினம் தாயக செய்தியாளர் (அக்டோபர் 23,2007). "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த பேராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள்" (html). புதினம் இணையம். பார்த்த நாள் அக்டோபர் 23,2007.
  3. Sirilal, Ranga; Shihar Aneez (அக்டோபர் 22,2007). "Sri Lanka Tiger rebel planes bomb air force base" (html). ரொயிடர்ஸ் (Reuters). பார்த்த நாள் அக்டோபர் 23,2007.
  4. Bandara, Athula (அக்டோபர் 25,2007). "Did he stumble on Tigers?" (asp). டெயிலி மிரர். பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  5. Jayasiri, Sunil (அக்டோபர் 26,2007). "Anuradhapura Air Base attack: The full story" (asp). டெயிலி மிரர். பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  6. அத்தாஸ், இக்பால் (அக்டோபர் 28,2007). "Pre-dawn pounce" (html). சண்டே டைம்ஸ். பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  7. வீரகேசரி நாளேடு (அக்டோபர் 23,2007). "விமான எதிர்ப்பு கருவிகளை கைப்பற்றிய பின்னரேவிமானக் குண்டு வீச்சினை மேற்கொண்டோம்" (html). வீரகேசரி. பார்த்த நாள் அக்டோபர் 23,2007.
  8. வீரகேசரி நாளேடு (அக்டோபர் 27,2007). "வான் பாதுகாப்பு கட்டமைப்பு 70 வீதம் பூர்த்தி தாக்குதல்கள் நடத்தும் திறன் குறையவில்லை". வீரகேசரி. பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  9. டெயிலீ மிரர் (அக்டோபர் 24,2007). "The last words of the pilot". டெயிலி மிரர். பார்த்த நாள் அக்டோபர் 24,2007.
  10. "Rebels attack Sri Lanka air base". பிபிசி (அக்டோபர் 22,2007). பார்த்த நாள் அக்டோபர் 24,2007.
  11. Airports in Sri Lanka
  12. Balachandran, PK (அக்டோபர் 22,2007). "LTTE planes bomb Sri Lankan airbase" (html). இந்துஸ்தான் டைம்ஸ். பார்த்த நாள் அக்டோபர் 23,2007.
  13. "பதில் தாக்குதலின் போது பொதுமக்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படாதவாறு படையினர் செயற்பட்டனர்" (html). இலங்கை அரசின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகம் (அக்டோபர் 22,2007). பார்த்த நாள் அக்டோபர் 23,2007.
  14. Kumarasinghe, Uditha; Rajmi Manatunga,மற்றும் Irangika Range (அக்டோபர் 25, 2007). "Only seven aircraft destroyed in Monday's attack - PM". Dailynews. The Associated Newspapers of Ceylon Ltd.. பார்த்த நாள் அக்டோபர் 29, 2007.
  15. பிபிசி; Rajmi Manatunga,மற்றும் Irangika Range (அக்டோபர் 24, 2007). "'Eight Lankan planes' destroyed". பிபிசி. பார்த்த நாள் அக்டோபர் 29, 2007.
  16. டெய்லி மிரர்; உபாலி ஆனந்த (நவம்பர் 8, 2007). "A’pura airbase attack: 10 aircraft destroyed, 16 damaged". டெய்லி மிரர். பார்த்த நாள் நவம்பர் 8, 2007.
  17. எஸ். மனோரஞ்சன் (அக்டோபர் 24,2007). "மாவீரர் வேள்விக்கு வளர்த்த வான் கரும்புலிக் கடாக்களும், அநுராதபுரத் தாக்குதலும், தமிழரும்" (html). தேனி இணையத்தளம். பார்த்த நாள் அக்டோபர் 26,2007.
  18. தினக்குரல் தலைப்புச் செய்தி (அக்டோபர் 23,2007). "புலிகள் தரை, ஆகாய மார்க்கத்தில் தாக்குதல்" (htm). தினக்க்குரல். பார்த்த நாள் நவம்பர் 1,2007.
  19. Jalaldeen, Rafik; Nimal Wijesinghe (அக்டோபர் 24 2007). "12 suspects quizzed over Air Base attack". டெய்லீ நிவ்ஸ். The Associated Newspapers of Ceylon Ltd. பார்த்த நாள் அக்டோபர் 29 2007.
  20. Phadke, Sushmita (அக்டோபர் 22,2007). "Sri Lanka consults India before launching severe retaliation to Tiger Air and ground attacks" (html). இந்தியா டெயிலி. பார்த்த நாள் அக்டோபர் 22,2007.
  21. Jayasiri, Sunil (அக்டோபர் 24,2007). "Army to coordinate security of airbases" (asp). டெயிலி மிரர். பார்த்த நாள் அக்டோபர் 24,2007.
  22. Gardner, Simon (அக்டோபர் 24, 2007). "Rebels slam Sri Lanka for showing naked war dead". ரொய்டர்ஸ். பார்த்த நாள் அக்டோபர் 25, 2007.
  23. தயாளினி, ப (அக்டோபர் 24, 2007). "கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் புலிகள் முறைப்பாடு". புதினம் இணையம். பார்த்த நாள் அக்டோபர் 25, 2007.
  24. Naked Black Tigers’ bodies displayed in A’pura sacred city
  25. Sri Lanka parades fallen Tigers’ naked bodies - தமிழ்நெற்
  26. கோத்தபாய அநுராதபுரத்திற்குச் சென்ற பின்னரே புனித உடல்கள் களங்கப்படுத்தப்பட்டன
  27. Sri Lanka furore over LTTE corpses - அல்ஜசீரா
  28. 20 கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு (புதினம்)
  29. (புதினம்)
  30. த.சுகுணன் (அக்டோபர் 25,2007). "உணர்வெழுச்சியோடு 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள்" (html). புதினம் இணையத்தளம். பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  31. TamilNet (அக்டோபர் 25,2007). "Tributes to Black Tigers draw parallels between Anuradhapura mission and IPKF times" (html). தமிழ்நெட். பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  32. தாயக செய்தியாளர் (அக்டோபர் 25,2007). "வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம்" (html). புதினம் இணையத்தளம். பார்த்த நாள் அக்டோபர் 25,2007.
  33. தாயக செய்தியாளர் (அக்டோபர் 25,2007). "உணர்வெழுச்சியோடு 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள்" (html). புதினம் இணையத்தளம். பார்த்த நாள் அக்டோபர் 25,2007.
  34. TamilNet (அக்டோபர் 25,2007). "Vanni prepares to commemorate 21 Black Tigers" (html). தமிழ்நெட். பார்த்த நாள் அக்டோபர் 25,2007.
  35. தாயக செய்தியாளர் (அக்டோபர் 23,2007). ""எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த பேராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள்" (html). புதினம் இணையத்தளம். பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  36. TamilNet (அக்டோபர் 22,2007). "LTTE releases names of Black Tigers in airbase raid" (html). தமிழ்நெட். பார்த்த நாள் அக்டோபர் 28,2007.
  37. Brave defenders' mortal remains taken to native places
  38. தாயக செய்தியாளர் (நவம்பர் 2,2007). "எல்லாளன் நடவடிக்கையில் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மதிப்பளிப்பு" (html). புதினம் இணையத்தளம். பார்த்த நாள் நவம்பர் 1,2007.
  39. தமிழ்நெட் (நவம்பர் 2,2007). "Pirapaharan decorates LTTE heroes of Anuradhapura" (html). தமிழ்நெட். பார்த்த நாள் நவம்பர் 2,2007.

வெளி இணைப்புகள்

படிமங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.