பேராதனை தாவரவியற் பூங்கா

பேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது.

பேராதனை தாவரவியற் பூங்கா
பேராதனை தாவரவியற் பூங்காவின் ஒரு தோற்றம்
வகைதாவரவியற் பூங்கா
அமைவிடம்பேராதனை, இலங்கை
ஆள்கூறு7°16′16″N 80°35′44″E
பரப்பு147 ஏக்கர்கள் (59 ha)
உருவாக்கப்பட்டதுசுமார் 1750ல்
Operated byதேசியப் பூங்காக்ககள் திணைக்களம்
நிலைOpen all year
WebsiteOfficial Website

மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மீ தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பலவு 147 ஏக்கராக இருப்பதுடன், விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

வரலாறு

14ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது. 1371 இல் மூன்றாம் விக்கிரமபாகு மன்னன் இவ்விடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டான். 1747–1780 வரை கண்டியை ஆண்ட இராஜாதிராஜசிங்கனும், இவ்விடத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்ததாக அறியப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர். இப்பகுதி அவர்கள் கைக்கு மாறியது.

1810 இல் கொழும்புக்கு அண்மையிலுள்ள கொம்பனித் தெரு என இன்று அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியர் ஒரு தோட்டத்தை அமைத்திருந்தனர். பின்னர் 1813 இல், இது களுத்துறை என்னும் இடத்துக்கு மாற்றப்பட்டது. இது பொருளாதாரத் தாவரங்களான கோப்பி, இறப்பர் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இடமாகவேயிருந்தது. 1814 இல் இதைப் பொறுப்பேற்ற அலெக்சாண்டர் மூன் என்பவரின் முயற்சியால் இது 1821 இல் தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கோப்பி, இறப்பர் போன்ற தாவரங்களே இங்கு காணப்பட்டன. பிற்காலங்களில் இதனைப் பொறுப்பேற்று நடத்திய அதிகாரிகள் பலரது முயற்சியால் எராளமான தாவர வகைகள் சேர்க்கப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. 1912 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களம் இந்தப் பூங்காவைப் பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது.

சிறப்பம்சங்கள்

இப் பூங்காவில் இன்று ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் உள்ளன. இங்குள்ள ஓக்கிட் பூங்கா புகழ் பெற்றது. இங்குள்ள வாசனைத் திரவியத் தோட்டம், கற்றாழையகம், அந்தூரியம் வளர்ப்பகம் என்பன இங்குள்ள சிறப்பம்சங்களாக உள்ளன. அத்துடன் பூங்காவிலிருந்து மகாவலி ஆற்றைக் கடந்து செல்லும் தொங்கு பாலமும் இந்தப் பூங்காவின் சிறப்பம்சமாகும். பூங்காவின் அனேகமான ஓரத்தை ஒட்டிச் செல்லும் மகாவலி ஆற்றின் கரையில், பூங்காவின் எல்லைபோல் மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவின் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு குளமும் பூங்காவில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.