லோவமகாபாய

லோவமகாபாய என்பது பண்டைக்கால இலங்கையின் தலைநகரமான அனுராதபுரத்தில் இருந்த ஒரு கட்டிடம் ஆகும். இது ருவன்வெலிசாய தாதுகோபுரத்துக்கும், சிறீ மகாபோதி எனப்படும் புனித அரசமரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் கூரை வெண்கலத்தால் அமைக்கப்பட்டிருந்ததால் இதை பித்தளை மாளிகை, "லோகப்பிரசாதய" போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. அக்காலத்தில் இக்கட்டிடத்தில் ஒரு உணவு மண்டபமும், ஒரு நோன்பு மண்டபமும் இருந்தன. இங்கே, பௌத்த மத குருமார், போயா நாட்களில் கூடி மத சுலோகங்களை ஓதும் "சீமமாலக்க" என்னும் மண்டபமும் இருந்தது.

லோவமகாபாய

இக்கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி (120 மீட்டர்) நீளமானது. இதில் ஒவ்வொன்றிலும் 40 தூண்கள் கொண்ட 40 தூண் வரிசைகள் இருந்தன. இதன்படி இக்கட்டிடம் மொத்தம் 1600 தூண்களைக் கொண்டிருந்தது. இதன் வடிவமைப்பு சுவர்க்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என்றும், இதைக் கட்ட ஆறு ஆண்டுகள் சென்றன என்றும் பௌத்தர்கள் நம்புகின்றனர். சத்தாதிஸ்ஸ மன்னனின் காலத்தில் இந்தக் கட்டிடம் முற்றாக அழிந்தது. இதன் நடுப்பகுதியில் உள்ள சிறிய கட்டிடம் பிற்காலத்தது. நோன்புக் காலத்தில் மக்கள் கூடுவதற்கான மண்டபமான இது இப்போதும் அதற்காகவே பயன்பட்டு வருகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.