வெண்கலம்
வெண்கலம் என்பது ஒரு செப்பு மாழைக் கலவை (உலோகக் கலவை). செப்புடன் சேர்ந்த பொருள் பெரும்பாலும் வெள்ளீயம் ஆகும், ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ், மாங்கனீசு, அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களும் கலந்திருப்பதுண்டு (கீழே பார்க்கவும்). இம் மாழைக் கலவை மிகவும் கெட்டியான பொருள். இதனால் இது பழங்காலத்தில் இருந்து பல பணிகளுக்குப் பயன்படுகின்றது. வெண்கலம், இரும்பைவிடவும் செப்பை விடவும், பல கல் கருவிகளைவிடவும் கெட்டியானது. இதனால் வெண்கலத்தைப் பல ஆயுதங்களிலும் போர்க்கவசம் போன்றவற்றிலும் பயன்படுத்தினர். பழங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரும்பி பெருக்கியதால், மாந்தர்களின் நாகரீக வளர்ச்சி நிலைகளை கற்காலம், இரும்புக் காலம் என்று அழைப்பது போல வெண்கலக் காலம் என்றும் அழைப்பதுண்டு. செப்பு என்பதற்கு பாரசீகச் சொல்லாகிய `பிரிஞ்ச் ("birinj,") என்பதில் இருந்து ஆங்கிலச் சொல்லாகிய `பிறான்ஸ் (Bronze) என்னும் சொல் உருவாகியது[1].
வெண்கலத்தின் வரலாறு
மாந்தர்களின் வரலாற்றில், நாகரீகப் பண்பாட்டில், வெண்கலம் ஒரு சிறப்பான மாழைக் கலவையாகும். பல வகையான கருவிகளும், ஆயுதங்களும், அழகுப் பொருட்களும் செய்யப்பட்டன. வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு ஆர்சனிக் கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது.
ஈரான் நாட்டில் உள்ள சுசா என்னும் இடத்திலும் இன்றைய ஈராக் நாட்டிலும் (மெசுப்பொடாமியாவிலும்) கி.மு நான்காம் ஆயிரத்தாண்டிலேயே வெள்ளீயம் கலந்த வென்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.