நரசிங்கமுனையரைய நாயனார்
“மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.
நரசிங்கமுனையரைய நாயனார் | |
---|---|
பெயர்: | நரசிங்கமுனையரைய நாயனார் |
குலம்: | முனையர் |
பூசை நாள்: | புரட்டாசி சதயம் |
அவதாரத் தலம்: | திருநாவலூர் |
முக்தித் தலம்: | திருநாவலூர் [1] |
தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையரையர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின் திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பணிந்தார். சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.
திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இகழ்ந்து அருவருத்து ஒதுங்கினர்.
நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.
நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைப் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றார்.