திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):சண்பக வனம், கிரிகன்னிகை வனம்
பெயர்:திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருநாகேச்சரம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்
தாயார்:1.பிறையணிநுதலாள், 2.கிரிகுஜாம்பிகை
தல விருட்சம்:சண்பகம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது.

கோயிலின் சிறப்பு

இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம், இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார், தான் பிறந்த சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார் என்றால், அவருக்கு இந்த ஆலயத்தின் மீது எந்த அளவுக்கு பக்தியும் மரியாதையும் இருந்திருக்கும் என்பதை உணரலாம். நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். சண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[1] பெரிய கோயில். நான்கு வாயில்கள். இறைவனுக்கு அருகில் உள்ளது பிரையணிநுதலாள் சந்நிதி. கிரிகுஜாம்பிகை சந்நிதி, தனிக்கோயிலாக விளங்குகிறது. சுதை உருவம். எனவே அபிஷேகம் கிடையாது. தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.

தொன்மை

ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

சிவராத்திரி தொடர்பு

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.[2]

புத்தமதம்

செண்பகராண்யேவரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயிலில் உள்ள அம்மன் சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் இரு சிலைகள் உள்ளதை களப்பணியின்போது காணமுடிந்தது. அவற்றில் ஒரு சிலை புத்தர் சிலையாகும். அச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சிலையில் மேல் காணப்படும் ஆடையமைப்பை வைத்து அச்சிலை புத்தர் எனக் கொள்ளலாம். தமிழகத்தில் பிற இடங்களில காணப்படுகின்ற புத்தர் சிலைகளைப் போல சிறந்த வேலைப்பாடு இச்சிலையில் காணப்படவில்லை. மற்றொரு சிலை சமண தீர்த்தங்கரர் சிலையாகும். இச்சிலையும் அமர்ந்த நிலையில் உள்ளது.

திருநீலக்குடி சப்தஸ்தானம்

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[3]

வழிபடும் முறை

மேற்கோள்கள்

  1. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
  2. கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015
  3. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.