வான்புலிகள்

வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.

சுலோகம்: "காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்"

வான்புலிகள் காலக்கோடு

  • 1985-86 காலப்பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள்[1].
  • நவம்பர் 27, 1998 - 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • 2000 - 'வான்புலிகள் ஆண்டு' என தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.
  • கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டு அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.[2]
  • ஜனவரி 26, 2005 - இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை.[3]
  • ஆகஸ்டு 11, 2006 - யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
  • சூலை 24, 2001 - அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 24ம் திகதி 2001 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது[4].
  • ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.[5]
  • ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின.[6][7]
  • அக்டோபர் 22, 2007 - எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர் கொல்லப்பட்டனர்.[8]
  • ஆகஸ்ட் 26, 2008: திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் இலங்கைக் கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டு 35 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்[9],[10]. இத்தாக்குதலில் 10 கடற்படையினர் காயமடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்தது[11].
  • செப்டம்பர் 9, 2008: வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்
  • அக்டோபர் 28, 2008: மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர்.[12],[13].
  • பெப்ரவரி 20, 2009:கொழும்பு வான் படையினரின் தலைமையகக் கட்டடம் அதற்கு அருகில் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீதும் வான்புலிகளின் கரும்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர்[14]. இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்தனர்[15].

வான்புலிகளின் வலு

வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது[16]. இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது.[17] இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.[18] இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தாக்குதல் முறை

தொடக்கத்தில், வான்புலிகள் ஐப்பானிய காமிகாசெ en:Kamikaze போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது. விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.[19] எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் en:Blitzkrieg முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

பெப்ரவரி 20, 2009 தாக்குதல்

விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் பெப்ரவரி 20, 2009 அன்று சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இத்தாக்குதலில் வான் புலிகளின் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரமரணம் அடைந்ததாக புலிகள் தெரிவித்தனர்[15]. ஆனாலும் இரண்டு வானூர்திகளும் சுட்டு வீழத்தப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவின் கூற்றை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது[20]. வானோடியின் உடலும் கைப்பெற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

விமானவியல் தொழில்நுட்பமும் விமான ஓட்டுனர் பயிற்சியும்

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்."

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.[21]

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.[22]

விமான ஓடுதளம்

இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம்.

வான்புலிகளின் அரசியல் சமூகத் தாக்கங்கள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை வான்புலிகளின் முதல்தாக்குதலை முன்வைத்து எழுதிய "முகிலைத் துளைத்த தமிழனும் இறக்கை முளைத்த கவிஞனும்" என்ற கவிதை பல தமிழர்களின் மனநிலையை பிரதிபலித்தது எனலாம்.

ஈழத்தமிழன் இறக்கை கட்டி

முகிலினுக்குள்
வாழத்தொடங்கிய வரலாற்று நாளிதுதான்.
உலகத் திசையாவும் உதைபட்டு
அகதியென
நிலத்திற் புல்லாகி நின்ற தமிழினத்தோன்
வானத்தில் ஏறி
வரிசையெனப் பெருமகிழ்வில்
கானத்தைப் பாடிக் களித்தான்.

—கவிஞர் புதுவை இரத்தினதுரை

இவை மட்டுமல்லாது இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவர் தனது குறிப்பில் 'இறக்கை கட்டிய பயங்கரவாதம்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. ஈழம்
  2. "According to a report submitted early this year to the President by the SLAF, during a routine reconnaissance by a UAV on January 12 2005, it found an airfield “estimated around 3,600 feet in length, with a paved surface that was sufficient to land quite an array of aircraft”-”medium lift aircraft and even aircraft such as C-130” - south east of Iranamadu irrigation tank."
  3. கட்டுநாயக்கா விமானைப் படைத் தாக்குதல்
  4. (பிபிசி)
  5. எண்ணெய் குதங்கள் தாக்குதல் - ரொய்டர்ஸ் செய்திகள்
  6. எண்ணெய் குதங்கள் தாக்குதல் - தமிழ்வெற்றி செய்திகள்
  7. Sirilal, Ranga; Shihar Aneez (அக்டோபர் 22,2007). "Sri Lanka Tiger rebel planes bomb air force base" (html). ரொயிடர்ஸ் (Reuters). பார்த்த நாள் அக்டோபர் 23,2007.
  8. திருமலை துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்: 18 கடற்படையினர் காயம்; ஜெட்லைனர் துருப்புக்காவி இலக்கு? (புதினம்)
  9. வானூர்தி தாக்குதலில் திருமலை துறைமுகத்துக்கு பாரிய அழிவு: விடுதலைப் புலிகள்
  10. 10 sailors injured in LTTE air strike in Trinco (சண்டே டைம்ஸ்)
  11. (ஏஎஃப்பி)
  12. புலிகளின் வானூர்தி தாக்குதலுக்கு இலக்கான அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீரமைக்க 6 மாதம் தேவை
  13. http://www.puthinam.com/full.php?2befD6Mee0ad4AmSI30ecd4YcO32cc4o0MtV24d24tVo0c4b33oOO4Ycd404KA4Aad0e0We1fDbe
  14. LTTE: Black Air Tiger attack on Colombo's Air Force HQ, Air Base
  15. ரொய்டர்ஸ் செய்திகள்
  16. Iqbal Athas. "Air Tiger thunderbolt jolts nation". The SundayTimes. ஏப்ரல் 01, 2007.
  17. Tamil Tiger planes raid Colombo
  18. Dr.T. Dorai, Principal of Advance Aeronautics Training Centre located in Perak as well as in Ipoh has been suggested as helping (inadvertently) with LTTE to develop aircraft maintenance technology.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.