ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி

ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (Eelam National Democratic Liberation Front, ENDLF) என்பது இலங்கையில் இந்தியாவின் ஆதரவுடன் இயங்கிய ஈழ இயக்கங்களில் ஒன்றாகும். இவ்வியக்கம் 1987 ஆம் ஆண்டில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய இயக்கங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டது.[1] இவ்வியக்கம் தற்போது இலங்கை அரசு ஆதரவில் இயங்கும் ஒரு துணை இராணுவப் படையும், அரசியல் கட்சியும் ஆகும். 2011 ஆகத்து மாதத்தில் இக்கட்சி தேர்தல் ஆணையத்தின் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[2]

Eelam National Democratic Liberation Front
நிறுவனர்ஞானப்பிரகாசம் ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)
செயலாளர்ஞானப்பிரகாசம் ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)
தொடக்கம்1987
பிரிந்தவைஈபிஆர்எல்எஃப், புளொட், டெலோ இலிருந்து பிரிவு
முன்னர்மூன்று நட்சத்திரங்கள்
தலைமையகம்315, கண்டி வீதி, கிளிநொச்சி
தேர்தல் சின்னம்
மாடு

வரலாறு

புளொட் அமைப்பின் ஒரு உறுப்பினராக செயல்பட்ட ஞானப்பிரகாசம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) அவ்வியக்கத்தில் இருந்து பிரிந்து, டெலோ, ஈபிஆர்எல்எஃப் இயக்கங்களில் இருந்து பிரிந்த சிலருடன் இணைந்து மூன்று நட்சத்திரங்கள்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் புளொட்டில் இருந்து பிரிந்த ஜோதீசுவரன் (கண்ணன்) தலைமையிலான குழுவினருடனும், ஈபிஆர்எல்எஃப் இலிருந்து பிரிந்த டக்ளஸ் தேவானந்தாவுடனும் இணைந்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி என்ற பெயரில் புதிய இயக்கத்தை இந்தியப் புலனாய்வுத்துறை ரோவின் ஆதரவுடன் ஆரம்பித்தனர். இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து டக்லசு தேவானந்தா இவ்வியக்கத்தில் இருந்து விலகி ஈபிடிபி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்தார்.

அரசியல்

1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இவ்வியக்கம் சுறுசுறுப்புடன் இயங்கி வந்தது. 1988 வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல், 1989 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டது. 1990 இல் இந்திய அமைதிப்படையினர் இலங்கையை விட்டு வெளியேறிய போது இக்கட்சியினரும், தமது செயற்பாடுகளைக் கைவிட்டு இந்தியா சென்றனர். 2004 ஆம் ஆண்டு வரை இவ்வியக்கத்தினர் செயலிழந்திருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்குத் தளபதி கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து கருணா ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணியில் இணைந்து அதன் தலைவரானார். இதனை அடுத்து இவ்வியக்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. கருணா பின்னர் இவ்வியக்கத்தில் இருந்து விலகினாலும், அரச-ஆதரவு இயக்கமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.

மேற்கோள்கள்

  1. "Sri Lanka". Leftist Parties of the World.
  2. "LTTE party to be dissolved". Daily Mirror.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.