தென்பெண்ணை ஆறு
தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1]

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ2 ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.[2]
நீர்த்தேக்க கட்டமைவுகள்
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருட்டிணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள்.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்கள்
காவேரிப்பட்டிணம், மஞ்சமேடு,இருமத்தூர், அகரம், நெடுங்கல், தொண்டமானூர் அகரம் பள்ளிப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை,திருக்கோவிலூர், பேரங்கியூர், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், ராம்பாக்கம், சொர்ணாவூர்,மற்றும் கடலூர் ஆகும்.