அமராவதி அணை

அமராவதி அணை இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 17இல் 25 கிமீ (15.53 மை) தொலைவில் உள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆழமான அணையால் பரந்த நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச்சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் (Mugger Crocodile) பண்ணை உள்ளது. பல்வகை மீன் இனங்களும் இயற்கையாக வளர பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது.[2]

அமராவதி அணை
அமைவிடம்இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா, திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு
ஆள்கூறுகள்10°24.64′N 77°15.6′E
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்துபம்பா ஆறுசின்னார் ஆறுஅமராவதி ஆறு
முதன்மை வெளிப்போக்குஅமராவதி ஆறு
வடிநில நாடுகள்இந்தியா
Surface area9.31 km2 (3.59 sq mi)
அதிகபட்ச ஆழம்33.53 m (110.0 ft)
நீர்க் கனவளவு(0.085 km3)[1]
கடல்மட்டத்திலிருந்து உயரம்427 m (1,401 ft)
References[1]

வரலாறு

அமராவதி அணை

திருமூர்த்தி அணையின் தெற்கே அமராவதி ஆற்றின் குறுக்கே 1957ஆம் ஆண்டு கு. காமராஜ் முதலமைச்சராக இருந்தபொழுது கட்டப்பட்டது. 4 டி. எம். சி இருந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு தற்போது தூர் சேர்தலால் 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது.[3] இந்த அணை வேளாண்மைக்காகவும் வெள்ளக்கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது. 2005 - 2006 நிதியாண்டில் இத்திட்டப் பகுதியில் வணிக விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 43,51,000 என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.[4] 2003-04 ஆண்டில், அணையின் பயன்பாட்டை கூடுதலாக்க தமிழ்நாடு மின்சார வாரியம் 4 மெகாவாட் திறனுள்ள நீர் மின் ஆற்றல் மின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டது;[5] இந்நிலையம் தற்போது இயங்கி வருகிறது.

மீன்வளம்

இங்கு உள்ளூரல்லாத திலாப்பியா வகை மீன்கள்1950களில் விடப்பட்டு 1970களில் மாநிலத்தின் மிக கூடுதலான மீன்பிடி இடமாக விளங்குகிறது.[2] தற்போது இங்கு பிடிக்கப்படும் மீன்களில் பெரும்பான்மையாக திலாப்பியா மீன்கள் உள்ளன.[6]. மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒருநாளைக்கு 20 கிலோ வரை மீன் பிடிக்க முடிகிறது.ஆண்டுக்கு 110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது.[7] 1972ஆம் ஆண்டில் ஆண்டொன்றிற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.[8]

மீன்வளத்துறை இங்குள்ள பழங்குடியினருக்கு மீன்பிடிக்க உரிமை வழங்குமுகமாக அமராவதிநகர் பழங்குடி மீனவர் கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 2007ஆம் ஆண்டு கரட்டுப்பதி பழங்குடி மக்கள் 50 பேர் இச்சங்கத்தில் இணைந்து அவர்களில் எட்டு பேருக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.[9]

முதலைகள்

முதலை வளர்ப்பு மையம்

சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள் இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை மீன்கள் பிற ஊர்வன மற்றும் சிறிய,பெரிய பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன.சிலநேரங்களில் மனிதர்களுக்கும் இவை தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37 சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.[10] இங்குள்ள மீனை உண்டு வாழும் பிற உயிரினங்கள்:சிறு ஓட்டர்கள் (Oriental Small-clawed Otter), இந்திய நீர் காகங்கள், இந்திய ஆமைகள்[2].

அணையிலிருந்து ஒரு கி.மீ முன்னரே அமராவதி சாகர் முதலைப் பண்ணை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு குட்டி முதலைகளை வளர்த்து பெரியவையானதும் இயற்கைச்சூழலில் விடப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம். இங்கு 98 முதலைகள் (25 ஆண்+ 73 பெண்)பிடிபடு நிலையில் பராமரிக்கப்படுகின்றன.[11],[12]

சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல்

அணையில் அழகான பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரமான படிகளில் ஏறி ஆனைமலை மற்றும் பழனிமலை பகுதிகளைக் காண இயலும். இது மாவட்ட சுற்றுலா மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.[13]

பூங்காவும் முதலைப்பண்ணையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துள்ளது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 50 காசுகளாகவும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு 25 காசுகளாகவும் உள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக 96 கிமீ (59.65 மை) தொலைவில் உள்ளது.முதலைப்பண்ணை அருகேயுள்ள வனத்துறை ஓய்வகத்தில் நான்கு பேர் தங்க இடவசதி உள்ளது. இருவர் தங்க ஒருநாளுக்கு ரூ.150 வாடகை வசூலிக்கப்படுகிறது.

குறிப்புகள்

  1. தமிழ்நாடு அரசு, நீர்த்தேக்க நிலை
  2. Whitaker Rom, Whitaker Zai (1989). Crocodiles, Their Ecology, Management, and Conservation. Madras Crocodile Bank, Madras, India.: IUCN/SSC Crocodile Specialist Group, Phil Hall, International Union for Conservation of Nature and Natural Resources. பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2880329876, 9782880329877. http://books.google.com/books?id=97oE6gTFW8EC&pg=PA278&lpg=PA278&dq=tilapia+%22Amaravathi+reservoir%22&source=web&ots=f-XkHZUttL&sig=V_rinXqD68jA9hYAxrqF-P_v6ZI&hl=en&sa=X&oi=book_result&resnum=6&ct=result#PPA276,M1. பார்த்த நாள்: 2008-09-30.
  3. "Farmers worried over low water level" Gunasekaran M., The Hindu, Feb 16, 2007
  4. Tamil Nadu Budget Summary, 2005 -2006
  5. Tamil Nadu State Planning Commission, Annual Plan, Chapter 11 Infrastructure Development & Tourism, 2004
  6. Gopalakrishnan, V. Ph.D., "Ethical, Legal and Social Issues Facing Capture Fisheries", Eubios Journal of Asian and International Bioethics 10 (2000), 77-81.
  7. M. Gunasekaran
  8. Sreenivasan, A., 1972. Energy transformations through primary productivity and fish production in some tropical freshwater impoundments and ponds. Pages 505–514 in Z. Kajak and A. Hillbricht-Ilkowska (editors) : Productivity problems in freshwaters. Polish Scientific Publishers, Warsaw, Poland. referred to in:Ecological Studies in Tropical Fish Communities By Ro McConnell, R. H. Lowe-McConnell, Cambridge University Press, 1987, p.277, ISBN 0521280648, 9780521280648, 382 pages.
  9. M. Gunasekaran, The Hindu, Coop. society for tribal fishermen formed, 2007-12-25
  10. Andrews
  11. Tamil Nadu Forest Dept, Amaravati Sagar Crocodile Farm , 2007
  12. Andrews,Harry V., Status and Distribution of the Mugger Crocodile in Tamil Nadu
  13. Around Pollachi- Anamalai Wildlife Sanctuary
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.