கே. பராசரன்
கே. பராசரன் (பிறப்பு: 1927) இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவர். அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் வாதாடுவதில் திறமையானவர் எனப் பெயர் பெற்றவர். ராம ஜென்மபூமி வழக்கில் ராம் லல்லா அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றவர்.[1]
வாழ்க்கை
பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். தன்னுடைய தாயின் ஊரான திருவரங்கத்தில் பிறந்த பராசரன், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி, மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பி.ஏ. படிப்பில் வடமொழிப் பாடத்தில் நீதிபதி சி. வி. குமாரசாமி சாஸ்திரி பதக்கம், சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி. பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றார்.
பணிகள்
1958இல் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞரானார். 1976 இல் தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலானார். 1977இல் அப்பதவியிலிருந்து விலகினார். 1980–1983 வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், 1983இல் அட்டானி ஜெனரல், 1986 மற்றும் 1989 இல் மீண்டும் அட்டர்னி ஜெனரல், 1984–1987 இல் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிமினாலஜியன் தலைவர், 1984–1987 பார் அசோசியேசன் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார்.
1984இல் இந்தியக் குழுவின் தலைவராக நியூயார்க் சென்று, ஐ.நா. அவை மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் அறிக்கையை அளித்தார். போபால் விஷவாயுப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட இந்தியக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
விருதுகள்
- 1989ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.[2]
- இவருக்கு 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[3]
குறிப்புகள்
- அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்
- தினமணி தீபாவளி மலர்,1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்95
- LEGAL LUMINARY – K. Parasaran