பரிட்சித்து

பரிசித்து (சமஸ்கிருதம்: परिक्षित्, IAST: Parikṣit, மாற்று வடிவம்: परीक्षित्, IAST: Parīkṣit) இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் தருமருக்குப் பின் அஸ்தினாபுரத்தை ஆண்ட மன்னனாவான்.

உத்தரையின் இறந்து பிறந்த மகனை (பரிட்சித்தை) கிருஷ்ணர் உயிர்ப்பித்தல்
பரீட்சித்து ஜாவனிய மொழியில் Wayang

பரீட்சித்து மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும் பிறந்தவன். குருச்சேத்திரப் போரில் கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது, பரிட்சித்து உத்திரையின் கருப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன் பிரம்மாசுரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணர் பரிட்சித்தை காப்பாற்றுகிறார். இந்நிகழ்ச்சியால் பரீட்சித்து "விஷ்ணுரதா" என அறியப்படுகிறார்.

வரலாறு

கலியுகத்தின் துவக்கத்தில் கிருஷ்ணரும் பாண்டவர்களும் உலகைவிட்டு நீங்கு பின் குரு நாட்டின் அரசாட்சியை ஏற்கும் பரீட்சித்து, கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். தனது ஆட்சிகாலத்தில் மூன்று அசுவமேத வேள்விகளை நடத்தினான்.

பரிசித்து ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, சமீகர் என்ற முனிவரின் குடிசையினுள் நுழைந்தான். பலமுறை அவரை வணங்கியும் தியானத்திலிருந்த அவரின் கவனத்தை தன் மீது திருப்ப இயலவில்லை. இதனால் வெறுப்புற்ற மன்னர் பரிசித்து, சொத்தப் பாம்பை சமீக முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றான். சற்று நேரம் கழித்து வந்த முனிவரின் மகன் சிரிங்கி, மன்னர் பரிசித்திற்கு, ஏழு நாளில் பாம்பு கடிபட்டு இறப்பான் என சாபம் இடுகிறான்.

முனி குமாரனின் சாபத்தை அறிந்த மன்னர் பரிசித்து[1] தனது மகன் ஜனமேஜயனை அத்தினாபுரத்தின் அரியணையில் அமர்த்தி, நாடு துறந்து தன் வாழ்வின் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம் பாகவதக் கதையை கேட்டறிகிறான். சாபத்தின்படியே பாம்பரசன் தட்சகன் பரிட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க, பரிசித்து மேலுலகம் செல்கிறான். [2]

இவ்வரலாற்றை பின்னர் கேள்வியுற்ற ஜனமேஜயன் துயரமடைந்து[3], அனைத்து பாம்புகளையும் அதே ஏழு நாட்களில் கொல்ல, உத்தங்கரின் தூண்டுதலால் நாக வேள்வியை மேற்கொள்கிறார். தட்சகன் சகோதரியின் மகனான ஆஸ்திகர் ஜனமேஜயனின் வெறித்தனமான பாம்பு வேள்வியை தடுக்கிறார். அதனால் தட்சகன் காப்பாற்றப்படுகிறான்.

மேற்கோள்கள்

  1. பரிக்ஷித்துக்கு செய்தி வந்தது! | ஆதிபர்வம் - பகுதி 42
  2. பரிக்ஷித்தைக் கொன்றான் தக்ஷகன்! | ஆதிபர்வம் - பகுதி 43
  3. ஜனமேஜயன் துயரம்|ஆதிபர்வம் - பகுதி 3 இ

வெளி இணைப்புகள்

முன்னர்
தருமர்
அஸ்தினாபுர மன்னன் பின்னர்
ஜனமேஜயன்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.