திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
ஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.[1] பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]
தேவாரம் பாடல் பெற்ற திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயில் திருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
பெயர்: | திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயில் திருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவொற்றியூர் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | படம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்) |
தாயார்: | வடிவுடையாம்பிகை (திரிபுரசுந்தரி அம்மன்),வட்டப்பாறையம்மன் |
தல விருட்சம்: | மகிழம், அத்தி |
தீர்த்தம்: | பிரம்ம, நந்தி தீர்த்தம் |
ஆகமம்: | காரணம், காமீகம் |
சிறப்பு திருவிழாக்கள்: | கார்த்திகை பௌர்ணமி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
கோயில் சிறப்புகள்
- இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்.
- திருவொற்றியூர் கலிய நாயனாரின் அவதாரத் தலம்.
- சுந்தரர் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்த தலம்[3]
- பட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.
- இத்தல இறைவனான ஆதிபுரீஸ்வரர் ஒரு சுயம்பு புற்று லிங்கம் ஆவார். ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும். அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். நடப்பு ஆண்டு 2018ல் 22.11.2018 வியாழக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 24.11.2018 சனிக்கிழமை இரவு கவசம் மூடப்படும்
தலவரலாறு
பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானின் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் வெற்றியால் யாகத்திலிருந்து சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,
ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!
என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார். [3]
மேற்கோள்கள்
- ஜி.எஸ்.எஸ் (2018 ஆகத்து 23). "அபிஷேகம் அற்ற ஆதிபுரீஸ்வரர்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 23 ஆகத்து 2018.
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9