அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்
அய்யர்மலை இரத்தினகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
தேவாரம் பாடல் பெற்ற திருவாட்போக்கி (அய்யர் மலை) இரத்தினகிரீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவாட்போக்கி(ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி, |
பெயர்: | திருவாட்போக்கி (அய்யர் மலை) இரத்தினகிரீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | அய்யர் மலை |
மாவட்டம்: | கரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர்), அரதனாசலேஸ்வரர், மாணிக்கஈசர், முடித்தழும்பர். |
தாயார்: | சுரும்பார்குழலி |
தல விருட்சம்: | வேம்பு |
தீர்த்தம்: | காவேரித்தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் |
பாடல் பெற்ற தலம்
இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். [2] மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.
பெயர் சிறப்பு
- மாணிக்கம் வேண்டிவந்த ஒரு ஆரிய மன்னனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நீரால் அதை நிரப்பச் சொன்னார், மன்னன் எவ்வளவோ முயன்றும் தொட்டி நிரம்பவில்லை, நீர்த் தொட்டி நிரம்பால் இருக்கக் கண்டு, மன்னன் கோபங் கொண்டு தனது உடைவாளை எடுத்து மாணிக்கக்கல் வியாபாரியை வெட்ட, உடன் இறைவனும் மாணிக்கத்தைத் தந்து மறைந்தார்.
- சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாட்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து மூலவர் மீது படுகிறது.
- சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
சிறப்புகள்
- இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
- மூலவர் சுயம்பு மூர்த்தி.
- கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
- இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
ஓம் நமச்சிவாய ஓம் பகவான் ரத்தினகிரி திரு தலம் ஆகிய சுரும்பார்குழலி அம்மன் ஆலயம்ஆகிய இந்த ஐவர் மலை(என்ற)அய்யர் மலை ஓம் நமச்சிவாய
திருத்தலப் பாடல்கள்
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் .
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. .
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே
நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே..
இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோயில்கள், தினகரன்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009