திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 48ஆவது சிவத்தலமாகும். ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமேயாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கடவூர் மயானம்,திருமெய்ஞ்ஞானம்
பெயர்:திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கடையூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரமபுரீசுவரர்
தாயார்:மலர்க்குழல் மின்னம்மை நிமலகுஜாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:காசி தீர்த்தம், அசுவினி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்

அமைவிடம்

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் பிரமபுரீசுவரர்,இறைவி மலர்க்குழல் மின்னம்மை.

அமைப்பு

பிரம்மபுரி, வில்வராண்யம், கடவூர் மயானம், பிரம்மபுரம், சிவவேதபுரி, திருமெய்ஞானம் என்ற பெயர்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது. தல மரமான கொன்றை மரம் கோயிலின் வட புற நுழைவாயிலில் உள்ளது. கோயிலின் தென் புறத்தில் கோயிலின் குளமான பிரம்ம தீர்த்தம் உள்ளது. [1] நுழைவாயிலை அடுத்து உள்ளே செல்லும்போது கோபுரம் உள்ளது. அடுத்து பலி பீடமும் நந்தியும் உள்ளன. அதற்கடுத்து முன்மண்டபம் உள்ளது. மூலவர் சன்னதியின் வட புறத்தில் தென் முகமாக சிங்காரவேலர் சன்னதி உள்ளது. அச்சன்னதியில் சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். அவருடைய கையில் வில்லும், வேலும் உள்ளது. இம்மண்டபத்தினை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அந்த சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, பைரவர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் பைரவர், காசி விசுவநாதர், நால்வர் ஆகியோர் உள்ளனர். சூரியன் உள் திருச்சுற்றின் கீழ் புறத்தில் மேற்கு முகமாக உள்ளார். சண்டிகேஸ்வரர் உள் திருச்சுற்றில் தனிச் சன்னதியில் உள்ளார். விநாயகர் சன்னதி திருச்சுற்றில் உள்ளது. அம்பாள், சுவாமி சன்னதிக்கு எதிர்ப் புறமாக கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் கொண்டுள்ளார்.

சிறப்பு

மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 107 வது தலம். இத்தலத்திலிருந்து திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில் இறைவனாரின் திருமஞ்சனத்திற்குரிய அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.[2] இத்தலத்தில் சிவன் பிரம்மனை நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் தேவாரம்

"பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே"

விழாக்கள்

மார்க்கண்டேயருக்காக நாள்தோறும் சிவபூஜை செய்ய காசி கங்கை தீர்த்தத்தை திருக்கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் திருமயானத்தில் வரவழைத்துக் கொடுத்து அருளினார். அந்த தீர்த்தம் வந்த நாள் பங்குனி மாதம் அமாவாசை கழித்த மூன்றாம் நாள் வளர்பிறை அசுபதி நட்சத்திரம் ஆகும். இந்த தீர்த்தத்தில் நீராடும் விழா இக்கோயிலில் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி அசுபதி புனித நீர் பெருவிழா உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

  1. ஸ்ரீமார்க்கண்டேயர் பூஜித்த திருக்கடவூர் மயானம் திருத்தல வரலாறு, தொகுப்பு சிவஸ்ரீ எம்.கே.கணேச குருக்கள், திருக்கடையூர், 2017
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 165,166

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.