கூலிம்
கூலிம் (Kulim) மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள மூன்றாவது பெரிய நகரம். இந்தப் பட்டணம் கூலிம் மாவட்டத்தில் இருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தில் உள்ள பட்டாணி எனும் பகுதியில் இருந்து மலாய்க்காரர்கள் இங்கு வந்து குடியேறினார்கள். 18 ஆம் நூற்றாண்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதும் நூற்றுக்கணக்கான சீனர்களும் குடியேறினர்.
居林 Kulim | ||
---|---|---|
| ||
நாடு | ![]() | |
மாநிலம் | ![]() | |
நகரத் தோற்றம் | 1850களில் | |
நகரத் தகுதி | 2001[1] | |
அரசு | ||
• யாங் டி பெர்துவா | துவான் அப்துல் அஜீஸ் அப்துல் கனி AMK, BCK | |
மக்கள்தொகை (2010[2]) | ||
• மொத்தம் | 2,28,662 | |
• அடர்த்தி | 590 | |
நேர வலயம் | மலேசிய நேரம் (MST) (ஒசநே+8) | |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை (ஒசநே) | |
அஞ்சல் குறியீடு | 09xxx | |
அனைத்துலக முன்னொட்டுக் குறி | +6044 (தரைவழித் தொடர்பு) | |
இணையதளம் | http://www.mpkk.gov.my |
கூலிம் என்பது ஒரு மரத்தின் பெயர் ஆகும். (அறிவியல் பெயர்: Scorocarpus Borneensis Becc.) கூலிம் மாவட்டம் 15 சிறிய துணை மாவட்டங்களை உள்ளடக்கியது.[3]
வரலாறு
18 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தில் இருக்கும் பட்டாணி எனும் இடத்தில் இருந்து 100 மலாய்க்காரர்கள் இங்கு வந்து குடியேறினர். 19 ஆம் நூற்றாண்டில் இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. 1890-இல் 400 சீனத் தொழிலாளர்கள் கூலிம் ஈயச்சுரங்கங்களில் வேலை செய்யத் தொடங்கினர். முதன் முதலில் கூலிமில் உள்ள பெலாக்காங் தாபோக் எனும் இடத்தில் தான் குடியேற்றம் நடந்தது.
தாமான் துங்கு புத்ரா, கம்போங் புக்கிட் பெசார், காராங்கான், தெராப், கிளாங் லாமா போன்ற இடங்களில் பெரிய ஈயச்சுரங்கங்கள் இருந்தன. 1854-இல் எட்டு பெரிய ஈயச்சுரங்கங்கள் இருந்ததாகவும், அவற்றில் 1500 தொழிலாளர்கள் வேலை செய்ததாகவும் வரலாற்றுச் சான்றுகளில் தகவல்கள் கிடைத்து உள்ளன.
கூலிம் கலவரம்
1888 ஆம் ஆண்டு கூலிமில் ஒரு கலவரம் நடைபெற்றது. இதை அழகிய முதிர்க் கன்னிப் போர் (Beautiful Nyonya War) அல்லது கூலிம் போர் என்று அழைக்கிறார்கள். மலாய் மொழி, கலாசாரப் பாரம்பரியங்களுடன் வாழும் சீனப் பெண்களை ‘நோஞ்ஞா’ (Nyonya) என்று மலேசியாவில் அழைக்கிறார்கள். ஆண்களை ‘பாபா’ என்று அழைக்கிறார்கள். இவர்கள் பெரானாக்கான் (Peranakan) என்று அழைக்கப் படுகின்றனர்.
கூலிமில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற பேரிளம் பெண்ணுக்காக ஈய சுரங்கத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களுடன் இருந்த வேலைக்காரர்களும் மோதிக் கண்டனர். இதுவே ஒரு பெரிய கலவரமாக மாறியது. சில ஆண்டுகள் வரை இந்த கலவரம் நீடித்தது. இதில் பலர் இறந்தும் போயினர்.
இரகசியக் கும்பல்களின் மோதல்கள்
இந்தக் கலவரத்தினால் 1890-இல் பி.இ.மிட்சல் எனும் ஒரு பிரித்தானிய காவல்த் துறை அதிகாரியை கெடா அரசர் நியமனம் செய்தார். பேராக் மாநிலத்தைச் சேர்ந்த லாருட், மாத்தாங், செலாமா, தைப்பிங், போன்ற இடங்களில் இருந்து வந்த ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள்தான் கூலிம் நகரை உருவாகியதாகவும் நம்பப் படுகிறது.
பேராக் மாநிலத்தில் அப்போது இரகசியக் கும்பல்களின் மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன.[4] அந்த மோதல்களில் இருந்து தப்பிக்கச் சில ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் கெடா பக்கமாக வந்தனர். காட்டு வழியாக பினாங்கிற்குச் செல்லும் வழியில் கூலிம் ஆற்றுப் படுகைகளில் தற்செயலாக ஈயத்தைக் கண்டனர். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல அவர்கள் அங்கேயே தங்கி ஈயத் தொழில்களில் ஈடுபட்டனர்.
கூலிம் தொழில்நுட்ப மையம்
1996 ஆம் ஆண்டு கூலிமில் ஓர் உயர் தொழில்நுட்ப மையம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. இது மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்ப மையமாகும். இந்த மையத்தின் பரப்பளவு 14.5 சதுர கீலோமீட்டர் ஆகும்.
இங்கே இன்டெல் (Intel), எந்தகிரிஸ் (Entegris), பூஜி (Fuji Electric), சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக் கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்கள் தத்தம் தொழிற்சாலைகளைத் தோற்றுவித்துச் செயல்பட்டு வருகின்றன.[5]
மேலும் பார்க்க
மேற்கோள்
- Kulim Granted City Status, கூலிம் உள்ளாட்சி மன்ற வரலாறு. அக்டோபர் 31, 2010.
- Helders, Stefan. "Malaysia: largest cities and towns and statistics of their population". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 2012-05-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-17.
- Kulim’s Background, Kulimkia website. Oct 31, 2010.
- 1850களில் கீ கின் - ஹாய் சான் இரகசியக் கும்பல்கள் இரண்டுக்கும் இடையே பேராக், தைப்பிங்கில் அதிகாரப் போர் நடந்து வந்தது.
- Kulim’s History, Kulim’s Municipal council website-Kulim’s Background. Oct 31, 2010.