குரூண்

குரூண் (Gurun) மலேசியா, கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.[1] தொழிற்துறையில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இந்த நகரத்தில் 1980களில் ஓர் உயர் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது. அந்தப் பூங்காவில் நாசா (Naza)[2] மொடெனாஸ் (Modenas)[3], பெர்வாஜா ஸ்டீல் (Perwaja Steel),[4] பெட்ரோனாஸ் கெடா உரத் தொழில் (Petronas Fertilizer Kedah) போன்ற முக்கியமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

குரூண்
Gurun
நாடு மலேசியா
மாநிலம் கெடா
நகரத் தோற்றம்1850களில்
நேர வலயம்மலேசிய நேரம் (MST)
([[ஒசநே+8 கிரீன்விச் இடைநிலை நேரம் (GMT)]])
  கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு08800
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6044 (தரைவழித் தொடர்பு)

சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தின் வடக்கே குவார் செம்படாக் நகரமும் தெற்கே பீடோங் நகரமும் உள்ளன. மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை அருகாமையில் உள்ளதால் இந்த நகரை மிக எளிதாகச் சென்றடையலாம்.

குரூணுக்கு மேற்கே குனோங் ஜெராய் (Gunung Jerai) என அழைக்கப்படும் ஜெராய் மலை உள்ளது. கெடா மாநிலத்தில் உள்ள மலைகளில் இந்த ஜெராய் மலை தான் மிக உயர்ந்த மலையாகும். இதன் உயரம் 1,175 மீட்டர் (3,854 அடி).[5] இந்த மலையைப் பற்றி நிறைய வரலாற்றுக் கருத்துகளும் புராணக் கதைகளும் உள்ளன.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கெடா மாநிலத்தில் இந்து - பௌத்தப் பேரரசுகள் கோலோச்சித் தடம் பதித்துள்ளன. அந்த வரலாற்றுக் காலகட்டத்தில் ஜெராய் மலையை ஒரு புனிதமான மலையாகப் போற்றி வந்துள்ளனர்.[6] அண்மைய காலத்தில் மலையின் அடிவாரத்தில் சிதைந்து போன இந்துக் கோயில்களின் கற்படிவங்களையும் சிலை வடிவங்களையும் மலேசியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்து உள்ளனர்.[7] முற்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த வணிகர்களுக்கு வழிகாட்டும் ஒரு திசைக்காட்டி மலையாகவும் இந்த மலை விளங்கி வந்துள்ளது.

வரலாறு

குரூண் எனும் சொல் கெரூண் என்கிற தாய்லாந்து மொழிச் சொல்லாகும். யானை என்பது அதன் பொருள். அந்தச் சொல் உருவானதற்கான ஒரு வரலாற்றுத் தகவலும் உள்ளது. 1874லிருந்து 1876 வரை சுல்தான் அப்துல்லா முகமட் ஷா II இப்னி சுல்தான் ஜாபார் முசாம் ஷா என்பவர் குரூண் நிலப்பகுதியை ஆட்சி செய்து வந்தார்.

அந்தக் காலகட்டத்தில் அருகாமையில் இருந்த பேராக் சுல்தானகத்தின் கண்காணிப்பில் கெடா அரசு இருந்து வந்தது. கெடாவின் வணிக வளர்ச்சியைத் தன்னகப்படுத்த தாய்லாந்து அரசு கெடாவின் மீது படை எடுத்தது.

அந்தப் படையெடுப்பில் சுல்தான் அப்துல்லா தோல்வி அடைந்தார். பின்னர் சிறைபிடிக்கப் பட்டார். சுல்தான் அப்துல்லாவினால் பிரச்சினைகள் வரலாம் என்று தாய்லாந்து அரசு கருதியது. அந்த ஆதங்கத்தில் அவரை ஒரு யானையினால் மிதிக்கச் செய்து கொலை செய்யப் பட்டார்.[8] இப்போது குரூண் போலீஸ் நிலையம் இருக்கும் இடத்தில் தான் அந்தத் துர்நிகழ்ச்சி நடந்தது.[9] அதன் விளைவாக பின்னர் அந்த இடத்திற்கு குரூண் எனும் பெயர் வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.