உவமையணி
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.
சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
"பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" [1]
திருக்குறள் உள்ள ஒரு குறளும் உவமை அணியை எடுத்து காட்டுவன. இத்தொடரில் வரும் உவமை உருபு அற்றே.
"இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்"
உவமையணியின் வகைகள்
உவமையணி 24 வகைப்படும். அவையாவன:
- விரி உவமையணி
- தொகை உவமையணி
- இதரவிதர உவமையணி
- சமுச்சய உவமையணி
- உண்மை உவமையணி
- மறுபொருள் உவமையணி
- புகழ் உவமையணி
- நிந்தை உவமையணி
- நியம உவமையணி
- அநியம உவமையணி
- ஐய உவமையணி
- தெரிதருதேற்ற உவமையணி
- இன்சொல் உவமையணி
- விபரீத உவமையணி
- இயம்புதல் வேட்கை உவமையணி
- பலபொருள் உவமையணி
- விகார உவமையணி
- மோக உவமையணி
- அபூத உவமையணி
- பலவயிற்போலி உவமையணி
- ஒருவயிற்போலி உவமையணி
- கூடா உவமையணி
- பொதுநீங்குவமையணி
- மாலையுவமையணி
என்பனவாகும். இவையன்றி
- பண்பு உவமையணி
- தொழில் உவமையணி
- பயன் உவமையணி.
- சந்தான உவமையணி
- ஒப்புவமையணி
- விலக்குவமையணி
எனப் பலவகையுண்டு
பண்பு உவமையணி
உதாரணம்: முத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
தொழில் உவமையணி
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம்.
பயன் உவமையணி
உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
உவமேயம்
ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவம உருபுகள்
ஒப்புவமைப்படுத்துவதற்காக போன்ற என்று பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும். உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய, அற்றே
(எ.கா.) உவம உருபு - தொடர்
- போல - கிளி போலப் பேசினாள்.
- புரைய - வேய்புரை தோள்.
- ஒப்ப - தாயொப்ப பேசும் மகள்.
- உறழ - முறவு உறழ் தடக்கை.
- அன்ன - மல்ரன்ன சேவடி.
- போலப் புரைய ஒப்ப உறழ
- மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
- நேர நிகர அன்ன இன்ன
- என்பவும் பிறவும் உவமத் துருபே.
- - நன்னூல், 367
பொதுத்தன்மை
இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)
சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இங்கு,
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
உவமைத்தொகை
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம் - மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1- எடுத்துக்காட்டு உவமையணி
2- இல்பொருள் உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
இதில் உவைமை உருபுகள் வெளிப்ப்ட வருவதில்லை.உவமை,உவமேயம் தனித்தனித் தொடர்களக வருகின்றன.
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்.
அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
இல்பொருள் உவமையணி
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
உதாரணம்:
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.
நாட்டார் பாடலில் உவமை
நாட்டார் பாடல்களிலும் உவமைகள் பொருத்தமுற, அழகாக, இயல்பாகக் கையாளப்பட்டுள்ளன. இவை ஏட்டுக் கவிதைகளில் புலவர்களால் பொதுவாகக் கையாளப்படும் உவமைகளிலும் பார்க்கச் சுவையுடைத்தாய் உள்ளன. ஓரிரு உதாரணங்கள் வருமாறு
- மாவிலங்கம் பட்டைபோல மானிறைச்சிச் துண்டுபோல
ஈச்சம் குருத்துப்போல இருந்துமுகம் வாடலாமா? (மாவிலங்க மரத்தின் பட்டையையும் மானிறைச்சியையும் ஈச்சம் குருத்தையும் நாட்டு மக்கள் வெயிலிலே காயவைத்து வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். இந்த இயற்கையான நிகழ்ச்சியையே நாட்டுப்புறக் கவிஞன் உவமையாகக் காட்டுகின்றான்)
- தேசிப் பழத்தழகி தேங்காய் முலையழகி
பாசிப் பழத்தழகி பக்கத்தில் நான் வந்திடுவேன்.