ஆர்வமொழியணி
ஆர்வம் = அன்பு, மகிழ்ச்சி. மனத்திற்குள் ஏற்படும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் சொற்கள் மிகுதியாக அமைந்து வருவது ஆர்வமொழி அணி ஆகும். இது மகிழ்ச்சி அணி எனவும் பெயர் பெறும்[1][2].
ஆர்வமொழியணியின் இலக்கணம்
நூற்பா
ஆர்வமொழி மிகுப்பது ஆர்வ மொழியே. --(தண்டியலங்காரம்,68)
(எ.கா.)
சொல்ல மொழிதளர்ந்து சோரும் துணைமலர்த்தோள் புல்ல இருதோள் புடைபெயரா - மெல்ல நினைவோம் எனின்நெஞ்சு இடம்போதாது எம்பால் வனைதாராய் வந்ததற்கு மாறு. --(தண்டியலங்கார மேற்கோள்)
பாடல்பொருள்:
தன்னை நாடிவந்த தலைவனின் செயலால் தனக்கேற்பட்ட மகிழ்ச்சியை ஆர்வம் மிக்க சொற்களால் தலைவி வெளிப்படுத்துவது இப்பாடல். அழகிய மாலையணிந்த தலைவனே! நீ என்னிடம் நாடி வந்ததற்கு நான் எவ்வாறு கைமாறு செய்வேன்? உன்முன் நின்று சொல்ல முயன்றால் என் சொற்கள் தடுமாறிச் சோர்கின்றன; உன் இரு தோள்களையும் தழுவிக்கொள்வோம் என முயன்றால் என் இரு தோள்களும் அந்த அளவு வளர்ந்தன அல்ல; மெல்ல உன்புகழை நினைக்க முயன்றால் என் உள்ளத்தில் அதற்கு இடம் போதாது.
இவ்வாறு தலைவி தன்மனத்தில் நிறைந்த மகிழ்ச்சியை ஆர்வமிக்க சொற்களால் வெளிப்படுத்தியிருப்பதால் இது ஆர்வமொழி அணி.
உசாத்துணைகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.