அல்வர் மாவட்டம்

அல்வார் மாவட்டம் (ஆங்கிலம்: Alwar District) வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். இம்மாவட்டத்தின் தலைநகர் அல்வார் நகரம் ஆகும். இம்மாவட்டமானது மொத்தம் 8,380 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டதின் எல்லைகளாக ரேவாரி மாவட்டம், பரத்பூர் மாவட்டம், மேவாட் மாவட்டம், தௌசா மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டம் ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டம் ராஜஸ்தானின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது.[1]

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம்

நிர்வாகம்

அல்வர் மாவட்டத்தில் அல்வார், பன்பூர், பெஹ்ரர், கோவிந்த்கர், கதுமார், கிஷன்கர் பாஸ், கோட்காசிம், லக்ஷ்மங்கர், முண்டவர், ராஜ்கர், ராம்கர், தனகாசி, திஜாரா, நீம்ரானா, ரெனி, மலகேரா ஆகிய 16 தெஹ்சில் பிரிவுகள் காணப்படுகின்றன.[2]

தொழிற்துறைகள்

இந்தமாவட்டத்தின் அல்வார், பிவாடி, நீம்ரானா, பெஹ்ரர், ஷாஜகான்பூர் போன்ற தொழிற்துறை வளாகங்களில் ஜி.எஸ். ஃபார்ம்பூட்டர், அசோக் லேலண்ட், பெப்சி, பாரிவேர், கஜாரியா செராமிக்ஸ் மற்றும் ஹோண்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளன.

விவசாயம்

ராஜஸ்தானில் விவசாய உற்பத்தியில் அல்வர் மாவட்டத்திற்கு முக்கிய இடம் உண்டு. மாவட்டத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 7,83,281 ஹெக்டேயர் ஆகும். இது மாநிலத்தின் 2.5 சதவீதமாகும். 2010–2011 ஆம் ஆண்டில் நிகர சாகுபடி பகுதி 5,07,171 ஹெக்டேயர் ஆகும். அதில் 4,51,546 பரப்பளவில் (சுமார் 83%) பாசன வசதி உண்டு. மீதமுள்ள 82,903 (17% வீதம்) நீர்ப்பாசனம் செய்யப்படவில்லை. இரட்டை பயிர் செய்கை பரப்பளவு 252 ஹெக்டேயர் ஆகும். காரீப் பருவத்தில் பஜ்ராவில் மக்காச் சோளம், ஜோவர், காரிஃப் பருப்பு வகைகள், அர்ஹர், எள், பருத்தி, குவார் போன்றவை சுமார் 3,29,088 ஹெக்டேயரில் (42%) விதைக்கப்படுகின்றன. மேலும் ரபி பருவத்தில் கோதுமை, பார்லி, கிராம், கடுகு, தரமிரா, ராபி பருப்பு வகைகள் சுமார் 4,52,527 ஹெக்டேயரில்  (58%) பயிரிடப்படுகின்றது. நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரம் கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் ஆகும். பத்து ஆண்டுகளில் சராசரி மழைவீழ்ச்சி 724 மி.மீ ஆகும். மாவட்டத்தின் மழைப்பொழிவு சீரற்றது. சீரற்ற மழைவீழ்ச்சியின் காரணமாக விவசாய உற்பத்தியும், பயிர் முறைகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால், மாவட்டத்தின் விவசாயம் மழைப் பரவலைப் பொறுத்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சராசரி மழை வீழ்ச்சி 217 மி.மீ ஆகும்.

பிரபலமான இடங்கள்

அல்வர் கோட்டை
நீல்காந்த் கோயில்

அல்வர் மாவட்டத்தில் ஆரவலி மலையில் அமைந்துள்ள பாலா கில்லா (அல்வர் கோட்டை) ராஜஸ்தானில் உள்ள சிறந்த கோட்டைகளில் ஒன்றாகும். இந்த கோட்டை எந்தவொரு மன்னராலும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னால் நிகும்ப் மஹால் உள்ளது. நகரத்தில் பல சிறிய அரண்மனைகள் மற்றும் ஓவியங்கள், கவசங்கள் மற்றும் பழைய ஆயுதங்களின் தொகுப்புடன் ஒரு பழைய அருங்காட்சியகம் உள்ளன. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான நீல்காந்த் கோயில் அமைந்துள்ளது.

பங்கர் கோட்டை எனப்படும் பேய் கோட்டை அமைந்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கோட்டை வாயிலில் ஒரு பலகையை அமைத்துள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றும் சூரிய உதயத்திற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகள் கோட்டை பகுதிக்குள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது.[3]

300 வருட பழமையான நிசாம் நகரின் (லக்ஷ்மங்கர்) ராயல் ராவ் ஹவேலி எனும் இடம் கெஸ்ரோலி கோட்டையில் இருந்து அகாரா-டெல்லி சாலையில் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. அல்வர் மன்னரான எச்.எச். யஷ்வந்த் சிங்கின் உறவினராக இருந்த எச்.எச்.ராவ் பெரோ சிங் (ரியாஸ்டார்) இதை நிறுவினார்.

இந்த மாவட்டத்தில் சரிஸ்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மேலும் இந்த மாவட்டத்தின் வழியாக அர்வாரி நதி பாய்கிறது.

புள்ளிவிபரங்கள்

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி அல்வர் மாவட்டத்தில் 3,671,999 மக்கள் வசிக்கின்றனர்.[1] சனத்தொகை அடிப்படையில் இந்தியாவின் 640 மாவட்டங்களில் 77வது இடத்தை பெறுகின்றது.[1] மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு 438 மக்கள் அடர்த்தி (1,130 / சதுர மைல்) உள்ளது.[1] அல்வர் மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 71.68% ஆகும்.[1] 2011 ஆம் ஆண்டின் இந்திய சனத்தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 96.08% மக்கள் இந்தி மொழியையும், 2.00% வீதமானோர் பஞ்சாபி மொழியையும், 1.02% பிலி மொழி ஆகியவற்றை முதன்மை மொழிகளாக பேசினர்.[4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.