திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம்.திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் நித்தியசுந்தரர்; இறைவி ஒப்பிலா நாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள எட்டாவது சிவத்தலமாகும்.

தேவாரம்[1], திருப்புகழ் பாடல் பெற்ற
திருநெடுங்களம் நெடுங்களநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருநெடுங்களம், ஒளிமதிச்சோலை
பெயர்:திருநெடுங்களம் நெடுங்களநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருநெடுங்குளம்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்
தாயார்:மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
தல விருட்சம்:வில்வம். கஸ்தூரி, அரளி
தீர்த்தம்:அகத்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்[2], திருப்புகழ்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,அருணகிரிநாதர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை:சோழர் காலக் கல் உரல்
கல்வெட்டுகள்:30 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள்

தல வரலாறு

  • தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றி கந்தர்வ மணம் செய்ய முற்பட , அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம் என்பதால் ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

வந்தியச் சோழன் எனும் மன்னனுக்கு சிவபெருமான் அருள் பாலித்த திருத்தலம்.[3]

இத்திருத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் மூலம் ஆதித்த சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விஜயநகர பேரரசின் மன்னர்கள், படைத்தலைவர்கள் முதலானோர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளது அறியப்படுகின்றது.[3]

சிறப்புக்கள்

  • இத்தலத்திலுள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.
  • மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.
  • நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  • மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.
  • இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.
  • இக்கோயிலின் நவக்கிரக சந்நிதியில் (பதினொன்று திருவுருவங்கள்) சூரியனாரின் திருவுரு தமது இரு மனைவியரோடு மேற்கு திசை நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களின் திருவுருவங்கள் சூரியனாரை நோக்கியும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
  • ஆண்டுதோறும் சிவபெருமான் மீது ஆடி மாதத்தில் சூரியக்கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பு கொண்டது.[3]
  • இக்கோவிலிலுள்ள கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும், இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
  • இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன
  • மக்கள் கொச்சையாக பேசும்போது மட்டும் இத்தலத்தை 'திருநட்டாங்குளம்' என்கின்றனர்.

பெருமாள்

திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் சன்னதி அமைந்துள்ளது

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே..

ராஜகோபுரம்

பழைமையான ராஜகோபுரம் பகைவர்களால் இடிக்கப்பட்டுவிட்டதால் உழவாரப்பணிக் குழு அமைத்து பக்தர்களால் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டது.[3]

படத்தொகுப்பு

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

  1. http://www.tamilvu.org/slet/l4110/l4110son.jsp?subid=1580
  2. http://www.tamilvu.org/slet/l4110/l4110son.jsp?subid=1580
  3. குமுதம் ஜோதிடம்; 24.02.2012; பக்கம் 2-6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.