பெருந்தேவபாணி

பெருந்தேவபாணி பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.

இதன் காலம் 10ஆம் நூற்றாண்டு; ஆசிரியர் நக்கீரதேவ நாயனார். இவர் சிவபெருமான்மீது ஈடுபாடுடையவர் எனபதை இவரது பிற நூல்களாலும் அறியலாம்.

பெருந்தேவன் என்பவன் சிவன். பாணி என்பது பாடல்.

கதைக்கு அடிப்படை

தருமி கொண்டுவந்த பாட்டில் குற்றம் காட்டிய நக்கீரனைச் சிவன் சபித்தார் என்பது திருவிளையாடல் புராணத்தில் உள்ள ஒரு கதை. இந்தக் கதை பெருந்தேவபாணி என்னும் இந்த நூலின் அடிப்படையில் தோன்றியது.

இந்த நூலில் நக்கீரதேவ நாயனார் சிவபெருமானைப் புகழ்ந்து பாடுகிறார். இந்த நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள வெண்பா மேலே சொன்ன கதையை நினைவூட்டுகிறது. [1]

நூலின் அமைப்பு

பெருந்தேவபாணி முதலில் சிவன் புகழை 49 அடிகளில் அடுக்கிக்கொண்டே செல்கிறது.[2]

பின்னர் முன்னிலைப்படுத்தி 13 அடிகளில் புகழ் பாடுகிறது.[3]

முடிபு
அதனால், கூடலாலவாய்க் குழகன் ஆவது அறியாது அருந்தமிழ் பழித்தனன் அடியேன். அருளல் வேண்டும் என மன்னிப்புக் கேட்டுப் பாடல் முடிகிறது.

பா வகை

இந்தப் பாடலைச் செய்யுள் வடிவில் இணைக்குறள் ஆசிரியப்பா எனலாம். கலிப்பா எனவும் காட்டும் வகையில் அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் உறுப்புகளுடன் திகழ்கிறது.

சிவபுராண அமைப்போடு ஒப்புமை உடையது.

அடிக்குறிப்பு

  1. விரைந்தேன்மற்(று) எம்பெருமான் வேண்டியது வேண்டா(து)
    இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் – விரைந்தென்மேல்
    சீற்றத்தைத் தீர்த்தருள்க தேவாதி தேவனே
    ஆற்றவும்நீ செய்யும் அருள்.

  2. சூல பாணியைச் சுடர்தரு வடிவனை
    நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை
    பால்வெண்ணீற்றனை பரம யோகியை
    காலனைக் காய்ந்த கறைமிடற்று அண்ணலை ...

  3. வேதமும் நீயே வேள்வியும் நீயே
    நீதியும் நீயே நிமலம் நீயே
    புண்ணியம் நீயே புனிதம் நீயே ...

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.