மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

மூத்தநாயகர் திருவிரட்டைமணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

96 வகையான சிற்றிலக்கியங்களில் இரட்டைமணிமாலை என்பதும் ஒன்று.

10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கபிலதேவ நாயனார் என்னும் புலவர் இதன் ஆசிரியர்.

கடலில் பிறக்கும் முத்தும் பவளமும் இரண்டு மணிகள். இந்த இரண்டு மணிகளும் அடுத்தடுத்து மாறி மாறி வரும்படி மாலையாகக் கோக்கப்பட்டது இரட்டைமணிமாலை. இந்த மாலை போல இந்த நூலில் வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய இரு பாடல்களைக் கோத்து அமைத்துப் பாடப்பட்டது இந்த நூல்.

மூத்தநாயனார் என்பவர் பிள்ளையார். இவரைப் போற்றிப் பாடிய 20 பாடல்களைக் கொண்டது இந்த நூல்.

பாடல்

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் [1] பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவார்தம் கை.

என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.

நல்லார் பழிப்பில் எழில்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மே[2]புரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னே[3]என்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டான் இருக்க [4] மலர்த்திருவே.

என்பது இந்நூலின் கடைசியிலுள்ள கட்டளைக் கலித்துறைப் பாடல்.

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. வாயிலே நல்ல தமிழ் வரும்
  2. யானை
  3. வி+நாயகன் = மூத்த நாயனார்
  4. விநாயகன் என்று மகிழவல்லார் மனத்தில் மட்டுமே இருப்பான்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.