உத்தராகண்டம்

உத்தராகண்டம் [1] (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் 9 நவம்பர் 2000-இல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவானது [2]. 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் உத்தராஞ்சல் [3] என அழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான இந்து கோயில்களும் புனிதத்தலங்களும் காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் இம்மாநிலத்தை தேவபூமி என்றும் கடவுள்களின் நிலம் என்றும் கருதுகிறார்கள் [4]. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது.

இந்திய வரைபடத்தில் உத்தராகண்டம்

வடக்கில் சீனாவின் திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையும் இம்மாநிலத்திற்கு எல்லைகளாக உள்ளன. கார்வால் கோட்டம். குமாவுன் கோட்டம் என்ற இரண்டு கோட்டங்களாக உத்தராகண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. தேராதூன் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே இப்பகுதியில் மனிதர்கள் இருந்துள்ளார்கள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. பண்டைய இந்தியாவின் வேத யுகத்தில் இப்பகுதி உத்தரகுரு இராச்சியத்தின் ஒரு பகுதியாக உருவாகியிருந்த்து. குமாவோன் பேரரசின் முதல் பெரிய வம்சங்களில் கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனிந்தர்கள் இருந்தனர். அவர்கள் சைவ மதத்தின் ஆரம்ப வடிவத்தை கடைப்பிடித்தனர். கல்சியில் உள்ள அசோகரின் கட்டளைகள் இந்த பிராந்தியத்தில் புத்தமதத்தின் ஆரம்பகால இருப்பைக் காட்டுகின்றன. இடைக்காலத்தில் குமாவோன் இராச்சியம் மற்றும் கார்வால் இராச்சியத்தின் கீழ் இப்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில், நவீன உத்தராகண்டின் பெரும்பகுதி சுகாலி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கார்வால் மற்றும் குமாவோனின் முந்தைய மலை இராச்சியங்கள் பாரம்பரிய போட்டியாளர்களாக இருந்தபோதிலும், வெவ்வேறு அண்டை இனக்குழுக்களின் அருகாமையும் அவற்றின் புவியியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகளின் பிரிக்கமுடியாத நிரப்பு தன்மை ஆகியன இரு பிராந்தியங்களுக்கிடையில் வலுவான பிணைப்புகளை உருவாக்கியது.1990 களில் மாநிலத்தில் நிகழ்ந்த உத்தரகண்ட இயக்கங்கள் இப்பிணைப்பை மேலும் வலிமையாக்கின. இம்மாநிலத்தின் பூர்வீகவாசிகள் பொதுவாக உத்தரகாண்டி என்று அழைக்கப்படுகிறார்கள், அல்லது இன்னும் குறிப்பாக கார்வாலி அல்லது குமாவோனி என்று அழைக்கப்படுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மக்கள் தொகை 10,086,292 ஆகும், இது இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 20 வது மாநிலமாக திகழ்கிறது [5]. முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

பெயர்க்காரணம்

உத்தராகண்டம் என்ற பெயர் வடக்கு என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான உத்தரா (उत्तर) என்பதன் அர்த்தம் 'வடக்கு', மற்றும் நிலம் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான கண்டம் என்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக 'வடக்கு நிலம் என்று பொருளில் வருவிக்கப்பட்டுள்ளது. .ஆரம்பகால இந்து வேதங்களில் "கேதர்கண்ட்" (இன்றைய கார்வால்) மற்றும் "மனாசுகண்ட்" (இன்றைய குமாவோன்) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தராகண்டம் என்பது இந்திய இமயமலையின் மைய நீட்சிக்கான பண்டைய புராணச் சொல்லாகும் [6]. இருப்பினும், 1998 ஆம் ஆண்டில் ஒரு புதிய சுற்று மாநில மறுசீரமைப்பைத் தொடங்கியபோது பாரதீய சனதா தலைமையிலான ஒருங்கிணைந்த அரசாங்கமும் உத்தராகண்ட மாநில அரசும் இப்பிரதேசத்திற்கு உத்தராஞ்சல் என்ற பெயரைக் கொடுத்தன. இப்பெயர் மாற்றம் பல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அலுவல்பூர்வமாக உத்தராஞ்சல் என்ற பெயர் புழக்கத்திலிருந்தாலும் மக்கள் மத்தியில் உத்தாகண்டம் என்ற பெயரே பயன்பாட்டில் உலாவியது.

ஆகத்து மாதம் 2006 இல்[7], உத்தராஞ்சல் மாநிலத்தை உத்தராகண்டம் என மறுபெயரிட முன்வைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உத்தராகண்ட மாநில இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்தது. அதற்கான சட்டம் 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரஞ்சல் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, மத்திய அமைச்சர்கள் சபை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2006 டிசம்பரில் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கையெழுத்திடப்பட்டது, மேலும் சனவரி 1, 2007 முதல் இந்த மாநிலம் உத்தராகண்டம் என்று அறியப்படுகிறது[8].

ஆட்சிப் பிரிவுகள்

53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம் கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம் என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களும்; குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களும் கொண்டுள்ளது. அவைகள்;

  1. அரித்துவார்
  2. உத்தரகாசி
  3. சமோலி
  4. ருத்ரபிரயாக்
  5. டெக்ரி கர்வால்
  6. டேராடூன்
  7. பௌரி கர்வால்
  8. பித்தோரகர்
  9. பாகேஸ்வர்
  10. அல்மோரா
  11. சம்பாவத்
  12. நைனித்தால்
  13. உதம்சிங் நகர்

இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.[9]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 10,086,292 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,137,773 மற்றும் பெண்கள் 4,948,519 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 963 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.40 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,355,814 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது.[10]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 8,368,636 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 1,406,825 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 37,781 ஆகவும், சீக்கியர்களின் மக்கள்தொகை 236,340 ஆகவும், பௌத்த சமய மக்கள்தொகை 14,926 ஆகவும், சமண சமய மக்கள்தொகை 9,183 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 993 ஆக உள்ளது.

இந்து ஆன்மீகத் தலங்கள்

நான்கு சிறு கோயில்கள்
கேதாரிநாத் பத்ரிநாத்
கங்கோத்ரி யமுனோத்திரி

தேசியப் பூங்கா & காட்டுயிர் காப்பகம்

மலை வாழிடங்கள்

2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்

சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் கேதார்நாத்துக் கோயில் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத்துக் கோயில், கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்தது. கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, மே 2014-இல் திறக்கப்பட்டது.[11].[12]

நிவாரணப் பணிகள்

இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது.[13]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Define Uttarakhand at Dictionary.com". Dictionary.com. மூல முகவரியிலிருந்து 22 September 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 August 2013.
  2. "About Us". Government of Uttarakhand. மூல முகவரியிலிருந்து 13 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 July 2012.
  3. "Uttarakhand – definition of Uttarakhand in English from the Oxford dictionary". மூல முகவரியிலிருந்து 12 May 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 May 2015.
  4. Chopra, Jaskiran (21 June 2017). "Devbhumi Uttarakhand: The original land of yoga". The Daily Pioneer. Archived from the original on 3 March 2018. https://web.archive.org/web/20180303145846/http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html. பார்த்த நாள்: 3 March 2018.
  5. "Uttarakhand Population, Sex Ratio, Literacy Rate Uttarakhand". மூல முகவரியிலிருந்து 5 May 2017 அன்று பரணிடப்பட்டது.
  6. Kandari, O. P., & Gusain, O. P. (Eds.). (2001). Garhwal Himalaya: Nature, Culture & Society. Srinagar, Garhwal: Transmedia.
  7. "Uttaranchal becomes Uttarakhand". UNI. The Tribune (India) (13 October 2006). மூல முகவரியிலிருந்து 11 May 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 January 2013.
  8. Chopra, Jasi Kiran (2 January 2007). "Uttaranchal is Uttarakhand, BJP cries foul". TNN. The Time of India. மூல முகவரியிலிருந்து 10 May 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 January 2013.
  9. About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India
  10. http://www.census2011.co.in/census/state/uttarakhand.html
  11. "கேதார்நாத் சிவன் கோவில் வழிபாட்டிற்கு திறப்பு". http://temple.dinamalar.com/news_detail.php?id=30810.
  12. உத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு
  13. http://www.rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.