திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து காவேரி நதியைக் கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர் ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

தேவாரம் பாடல் பெற்ற
திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை
அமைவிடம்
ஊர்:திருஈங்கோய்மலை
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மரகதாசலேஸ்வரர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர், மரகத நாதர்
தாயார்:மரகதாம்பிகை, லலிதா
தல விருட்சம்:புளியமரம்
தீர்த்தம்:அமிர்த தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
திருஈங்கோய்மலை
மலையில் ஏறல்
மலையிலிருந்து இறங்கல்

இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.

நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர் இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.

திருத்தல வரலாறு

இத்தல நாதர் மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர் ஆதிசேஷனும் வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.

ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.

பெயர்ச் சிறப்பு

  • அகத்திய மாமுனிவர் ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.
  • பார்வதி தேவி இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.

திருத்தலச் சிறப்புகள்

  • மரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள் இம்மரகத நாதர் மீது படிவது இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு.
  • கார்த்திகை மாதத்து திங்கட் கிழமையன்று இத்திருத்தலத்தினையும், மற்றும் இதன் அருகே அமைந்துள்ள வாட்போக்கி மலை (சொக்கர்) மற்றும் கடம்பந்துறை (கடம்பர்) ஆகிய திருத்தலங்களையும் ஒரு சேர தரிசிப்பது பெரும் பயன் விளைக்கும் என்பர். இவற்றினை தரிசிக்கும் முறைமையும், 'காலையில் கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளை ஈய்ங்கோ நாதர்' என வழங்குகிறது.

வரலாற்றுச் சிறப்புகள்

  • இக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.
  • திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
  • சோழ மன்னர்கள் இத்திருக்கோயிலுக்கு இறையிலி அளித்ததாக கூறப்படுகினறது.

திருத்தலப் பாடல்கள்

63 நாயன்மார்களில் முதன்மையானவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றினைக் கீழே காணலாம்:

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

இத்திருத்தலத்தின் மீதான பிறிதொரு தேவாரப் பதிகம் கீழே தரப்பட்டுள்ளது:

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.

இவற்றையும் பார்க்க

குறிப்புதவிகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.