மார்க்சியம்

மார்க்சியம் (Marxism, மார்க்சிசம்) என்பது ஓர் சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வர்க்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்டத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட உலகப்பார்வை ஆகும்.

இது இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரை. இதனை இற்றைப்படுத்தி, விரிவாக்கி, மேம்படுத்த உதவுங்கள்.

மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் கருதப்படுகிறது.

மார்க்சிய முறையியல் தொடக்கத்தில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற பொருளாதாரத்தையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.

மார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்;[1] அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும்,[2] அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர்.[3] இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பருந்துப் பார்வை

மார்க்சியப் பகுப்பாய்வு சமூகப் பொருள் தேவைகளைச் சந்திக்கும் பொருளாயத நிலைலைகளையும் பொருளியல் நடவடிக்கைகளையும் ஆய்வதில் இருந்து தொடங்குகிறது. பொருளியல் ஒருங்கமைப்பு அல்லது பொருளாக்க உறவுகள் நேரடியாக மற்ற சமூக உறவுகளையும், அரசியல்,சட்ட அமைப்புகள், அறநெறிமுறைகள், கருத்தியல் போன்ற அனைத்து சமூக உணர்வுகளையும் உருவாக்குகிறது அல்லது தாக்கம் செலுத்துகிறது எனக் கொள்கிறது. பொருளியல் அமைப்பும் சமூக உறவுகளும் சமுகத்தின் அடித்தளமாக அமைகின்றன. சமூகத்தின் பொருளாக்க விசைகள் வளரும்போது அதாவது குறிப்பாகத் தொழில்நுட்பம் வளரும்போது நிலவும் சமூகப் பொருளாக்க வடிவங்கள் திறமற்றுப் போகின்றன. அதனால் அடுத்துவரும் சமூக முன்னேற்ரத்தை அவை தடுக்கின்றன. காரல் மார்க்சு கூறுகிறார்: "At a certain stage of development, the material productive forces of society come into conflict with the existing relations of production or – this merely expresses the same thing in legal terms – with the property relations within the framework of which they have operated hitherto. From forms of development of the productive forces these relations turn into their fetters. Then begins an era of social revolution."[4]

இந்தப் பொருளியல் விசைகளுக்கும் பொருளியல் உறவுகளுக்கும் இடையில் எழும் முரண்பாடுகள் வருக்கப் போராட்ட வடிவத்தில் சமூக உறவுகளின் முரண்பாடாக முகிழ்க்கிறது.[5] முதலாளியப் பொருளாக்க முறைமையின் கீழ், இப்போராட்டம் பொருளாக்க அமைப்பை தம்முரிமையில் வைத்திருக்கும் சிறுபான்மை முதலாளிகளுக்கும் பொருள்களையும் சேவைகளையும் உருவாக்கும் பெரும்பான்மை பாட்டாளிகளுக்கும் இடையில் தோன்றுகிறது.இவ்வாறு சமூக மாற்றம், தம்முள் முரண்பட்ட சமூக வகுப்புகளுக்கிடையில் எழும் வருக்கப் போராட்டத்தால் உருவாகிறதெனவும் முதலாளியம் பாட்டாளிகளைச் சுரண்டி அடக்குகிறதெனவும் இதனால் பாட்டாளி வருக்கப் புரட்சி உருவாகிறதெனவும் என மார்க்சியர்கள் கூறுகின்றனர்.

உழைப்பாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும்

மார்க்சியத்தின்படி உலக மக்கள் அவர்கள் செய்யும் வேலைகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக வர்க்கங்களாக பிரிக்கப்படுகின்றனர்.

முதலாளிகளின் எதிரி பாட்டாளிகள் = பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மை பண்ணைகளில் ஊதியத்திற்காக வேலை புரிவதால் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" (அல்லது "பாட்டாளி வர்க்கம்") எனப்படுகின்றனர்.

பாட்டாளி வர்க்கத்தினரை விட சிறுபான்மையினரான மற்றொரு பிரிவினர் "முதலாளி வர்க்கம்" (அல்லது "பூர்சுவாக்கள்") எனப்படுகின்றனர். இவர்கள் தொழிற்சாலைகள், நிலம், மற்றும் தொழிலாளர்கள் பணி புரியும் கட்டிடங்களுக்கு உரிமையாளர்கள். தவிரவும் பணியாளர்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகளும் இவர்களுக்கு உரிமையானது. பாட்டாளிகளின் வேலைத்திறனால் பிழைப்பதால் மார்க்சு இவர்களை "ஆளும் வர்க்கத்தினர்" என்கின்றார். தவிரவும் ஆளும் வர்க்கத்தினர் அரசாங்கம், படைத்துறை, மற்றும் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகின்றனர்.

மார்க்சியப் பார்வைகளில், மூலதனம் "உற்பத்திக்கான வழிமுறை" ஆகும்; முதலாளிகள் பணத்தை பல வணிக முயற்சிகளில் முதலீடு செய்து, "இலாபம்" அடைந்து தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.

பெரும்பாலான தொழிலாளர்கள் முதலாளிகளின் அல்லது "பெடிட்-பூர்சுவா"க்களின் (சிறு வணிக உரிமையாளர்கள்) நிறுவனங்களில் பணி புரிகின்றனர். முதலாளிகள் தொழிலாளர்களின் வேலை நேரத்திற்கு மாற்றாக கூலி தருகின்றனர். முதலாளி தொழிலாளியின் நேரத்தை வாங்கியுள்ளதால் அந்த நேரத்தை முதலாளிக்கு வேலை செய்வதில் செலவிட வேண்டியுள்ளது. மார்க்சிய கருத்துக்களின்படி, விளைபொருள் ஒன்றிலிருந்து கூடுதல் பணம் பெற முதலாளிக்கு இதுவே ஒரே வழி. முதலாளிகள் தொழிலாளியின் நேரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவாக சுரண்டுகின்றனர். முதலாளிக்கு பணியாளர் தயாரித்த பொருளுக்கு குறிப்பிட்ட விலை கிடைக்கின்றது. இந்த விலையை விட பணியாளரின் வேலைநேரத்திற்கு குறைவாக விலை கொடுப்பதால் முதலாளிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்கின்றனர். இவ்விதமாக தொழிலாளியின் வேலைத்திறனை சுரண்டுகின்றனர்:

  • அவர்கள் செய்த வேலைக்கு சரியான கூலி கொடுக்காது
  • தொழிலாளருக்குக் கொடுக்காத கூடுதல் பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுதல்
  • தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான கூலி கொடுப்பதால் எவ்வளவு வேலை செய்தாலும் அவர்கள் வறியவர்களாகவே இருப்பது

தொழிலாளர் சுரண்டப்படுவதால் சிறுபான்மை வர்க்கத்தினரான முதலாளிகள் வேலை செய்யாமலே வாழ முடிகின்றது எனவும் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கம் முதலாளிகள் வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியுள்ளது எனவும் மார்க்சு கருதினார்.

மார்க்சியத்தின்படி தொழிற்சாலைகள், கருவிகள், மற்றும் பணியிடங்கள் தாங்களாகவே எவ்வித மதிப்பையும் தரவியலாது. அவைகள் ஒரு அவுரிநெல்லி புதர் போன்றது: புதருக்கு தனியே மதிப்பில்லை. மக்கள் தங்கள் பணிநேரத்தை செலவிடுவதாலேயே மதிப்பு விளைகின்றது.எவரேனும் ஒருநாளை செலவழித்து அவுருநெல்லிகளைப் பறிக்கின்றனர். பறிக்கப்பட்ட அவுரிநெல்லிகளைத் தான் விற்கவும் உண்ணவும் முடியும்.

வர்க்கப் போராட்டம்

மார்க்சியக் கருதுகோளின்படி முதலாளிகளும் தொழிலாளிகளும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவர்கள் "நியாயவாத பொருண்மியம்" என்கின்றனர். இதனிலிருந்தே மனித வரலாறு பல்வேறு சமூக வர்க்கங்களுக்கிடையேயான பிணக்குகளின் வரலாறு என்ற கருத்து எழுந்துள்ளது. வெவ்வேறு முடிவுடைய வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையே விவாதங்களும் சண்டைகளும் மூளுகின்றன. சமூக மாற்றமே இதன் தீர்வு.

முதலாளித்துவம் தொழிலாளிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டும் எனவும் அவர்களது கூலியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கும் எனவும் மார்க்சியம் கூறுகின்றது. தங்களுக்கு கிடைக்கும் இலாபம் கூட வேண்டும் என்பதற்காகவும் இலாபத்தை விரைவாக அடைய வேண்டும் என்பதற்காகவும் முதலாளிகள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் கூலிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டியுள்ளது; "சுரண்டல் வீதத்தை" குறைத்து தங்கள் வாழ்க்கை அமைதியாகச் செல்லப் போராடுகின்றனர். இதனையே மார்க்சியம் "வர்க்கப் போராட்டம்" என்கின்றது: தொழிலாளர்களும் அவர்களது மேலாளர்களும் தங்கள் தன்னலம் காக்க தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

மார்க்சியவாதிகள் அனைத்து எழுதப்பட்ட வரலாறும் பொருளியல் வர்க்கத்தினரால் பிரிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். காட்டாக நில மானிய முறைமை (நடுக்கால சமூகம் நிலக்கிழார்களாலும் உயர்குடியாளர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆளும் வர்க்கத்தினரின் செல்வமும் அதிகாரமும் விவசாயிகளின் தொழிலால் விளைந்தவை. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் மேலும் மேலும் உயர்ந்ததால் சிறு வணிகர்களும் அங்காடிகளும் தோன்றலாயின. இவர்கள் தங்களுக்குள் சங்கங்கள் அமைத்துக் கொண்டு பணியாளர்களை அமர்த்திக் கொள்ளத் தொடங்கினர். இந்த தொழிலாளர்கள் இப்பணிகளால் செழிக்கத் தொடங்கினர். இவையே முதலாளித்துவம் உருவானதற்கான வரலாறாகும்.

இதேமுறையில், வர்க்கப் போராட்டத்திலிருந்து பொதுவுடைமை (அல்லது சமூகவுடைமை) உருவாகும் என மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். இருப்பினும் தொழிலாளர் போராட்டம் வலுப்பெற்று புரட்சி வெடித்தால் முதலாளித்துவத்திற்கு மாற்றாக பொதுவுடமை தோன்றும் எனக் கருதிகின்றனர்.

மார்க்சிய நூல்கள்[6]

  1. அதிகாரத்திற்கு எதிராகப் போராடுவோம்!-சோ என்லாய்
  2. சோசலிஸ்ட் புரட்சி- காரல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சு
  3. கம்யூனிஸ்ட் சமூகம்- ஒ
  4. கம்யூனிசத்தின் கோட்பாடுகள்- பிரெட்ரிக் எங்கெல்சு
  5. தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- மார்க்சு, எங்கெல்சு, லெனின்
  6. என்ன செய்ய வேண்டும்? - லெனின்
  7. இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும்- இமயவரம்பன்
  8. இயக்கவியல் பிரச்சனை பற்றி- லெனின்
  9. இயக்கவியல் பொருள்முதல்வாதம்- மார்க்சு, எங்கெல்சு, லெனின்
  10. ஜனநாயகத்திற்கு அப்பால்- பாப் அவேக்கியான் (Bob Avakian)
  11. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்- மார்க்சு, எங்கெல்சு, லெனின்
  12. கூலியுழைப்பும் மூலதனமும்- மார்க்சு
  13. லெனின் நூல் திரட்டு-1, லெனின்
  14. லெனின் நூல் திரட்டு-2, லெனின்
  15. லெனின் நூல் திரட்டு-3, லெனின்
  16. லெனின் நூல் திரட்டு-4, லெனின்
  17. சோவித் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்கள் நிலையும்- லெனின்
  18. சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்- லெனின்
  19. சோசலிசப்புரட்சியும் சுயநிர்ணய உரிமையும்-வி.இ. லெனின்
  20. அக்டோபர் புரட்சியின் ஆண்டு விழாக்களை ஒட்டி- லெனின்
  21. லெனின் உரை-வி.இ. லெனின்
  22. லெனினும் அரசியலும்- த.துரை சிங்கம்
  23. தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- லெனின்
  24. மார்க்சிமும் புரட்சி எழுச்சியும்- லெனின்
  • மாஓ சேதுங் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப்படைப்புகள்
  1. மகளிர் விடுதலை இயக்கங்கள்- கிளாரா ஜெட்கின்
  2. மக்கள்தொகைத் தத்துவத்தின் அடிப்படைகள்- பேரா.இ.தே.வலென் தேய்
  3. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை- மார்க்சு, எங்கெல்சு
  4. கூட்டு அரசாங்கம்பற்றி- மா சே துங்
  5. நடைமுறை பற்றி- மா சே துங்
  6. ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வு அறிக்கை, மார்ச் 1927- மா சே துங்
  7. சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்- மா சே துங்
  • மாபெறும் விவாதம்
  1. தேர்வு நூல்கள்-1- மார்க்சு, எங்கெல்சு
  2. தேர்வு நூல்கள்-2- மார்க்சு, எங்கெல்சு
  3. தேர்வு நூல்கள்-4- மார்க்சு, எங்கெல்சு
  4. தேர்வு நூல்கள்-9- மார்க்சு, எங்கெல்சு
  5. தேர்வு நூல்கள்-10- மார்க்சு, எங்கெல்சு
  6. தேர்வு நூல்கள்-11- மார்க்சு, எங்கெல்சு
  7. தேர்வு நூல்கள்-12- மார்க்சு, எங்கெல்சு
  8. மார்க்ஸ் முதல் மா சே துங் வரை- ஜார்ஜ் தாம்சன்
  9. மார்க்சியமும் புரட்சி எழுச்சியும்- லெனின்
  10. மார்சிமும் திருத்தல்வாதமும் – லெனின்
  11. மார்க்சியத்தின் அடிப்படைப்பிரச்சனைகள் - கி.வ.பிளெஹானவ்
  12. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சில சிறப்பியல்புகள்– லெனின்
  13. மூலதனத்தின் பிறப்பு - மார்க்சு
  14. கூலியுழைப்பும் மூலதனமும் - மார்க்சு
  15. கார்ல் மார்க்ஸ்மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்று – தியாகு
  16. கார்ல் மார்க்ஸ்மூலதனம் முதல் பாகம் புத்தகம் இரண்டு – தியாகு
  17. கார்ல் மார்க்ஸ்மூலதனம் இரண்டாம் பாகம் – தியாகு
  18. கார்ல் மார்க்ஸ்மூலதனம் மூன்றாம் பாகம் புத்தகம் இரண்டு – தியாகு
  19. தேர்வு நூல்கள்-5- மார்க்சு, எங்கெல்சு
  20. தேர்வு நூல்கள்-6- மார்க்சு, எங்கெல்சு
  21. தேர்வு நூல்கள்-7- மார்க்சு, எங்கெல்சு
  22. நாட்டுப்புற ஏழைமக்களுக்கு – லெனின்
  23. ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்- எட்கார் ஸ்னோ
  24. பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம்-ஒரு தொகுப்பு- லெனின், ஸ்டாலின், மாவோ
  25. போர்த்தந்திரம் பற்றிய கடிதங்கள் – லெனின்
  26. பொதுக்கல்வி – லெனின்
  27. புரட்சித்தலைவன் மா சே துங் நடந்த புரட்சிப்பாதை- ச.கலியாணராமன்
  28. புரட்சியில் இளைஞர்கள் கடிதம் உரை நாட்குறிப்பு
  29. புரட்சிகரமான வாய்ச்சொல் – லெனின்
  30. ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் - மா சே துங்
  31. சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும் – லெனின்
  32. சர்வாதிகாரப் பிரச்சனையின் வரலாற்றைப்பற்றி – லெனின்
  33. சிலந்தியும் ஈயும் – லீப்னெஹ்ட்
  34. தொழிலாளி வர்க்கம் – கட்சி - இயல்பு பற்றி- ஸ்டாலின், சென்யுன்
  35. தாய் – மக்சீம் கார்க்கி
  36. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை – லெனின்
  37. தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியமும் – லெனின்
  38. தேசியப்பொருளாதாரத்தில் சோஷலிஸ்ட்டு நிர்மாணத்தைப்பற்றிய பிரச்சனைகள்-வி.இ. லெனின்
  39. தூக்குமேடைக்குறிப்பு- ஜூலிஸ் பூசிக்
  40. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு
  41. வெகு ஜனங்களிடையே கட்சியின் பணி - லெனின்

சான்றாதாரங்கள்

  1. Bridget O'Laughlin (1975) Marxist Approaches in Anthropology Annual Review of Anthropology Vol. 4: pp. 341–70 (October 1975) எஆசு:10.1146/annurev.an.04.100175.002013.
    William Roseberry (1997) Marx and Anthropology Annual Review of Anthropology, Vol. 26: pp. 25–46 (October 1997) எஆசு:10.1146/annurev.anthro.26.1.25
  2. S. L. Becker (1984) "Marxist Approaches to Media Studies: The British Experience", Critical Studies in Mass Communication, 1(1): pp. 66–80.
  3. See Manuel Alvarado, Robin Gutch, and Tana Wollen (1987) Learning the Media: Introduction to Media Teaching, Palgrave Macmillan.
  4. A Contribution to the Critique of Political Economy, Introduction 1859
  5. Comparing Economic Systems in the Twenty-First Century, 2003, by Gregory and Stuart. P.62, Marx's Theory of Change. ISBN 0-618-26181-8.
  6. "மார்க்சிய நூல்கள்". www.thamizhagam.net (தமிழ்) (2013-16). பார்த்த நாள் 2016-08-25.

தொடர்புடைய பக்கங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.