மா. ராமலிங்கம்
மா.இராமலிங்கம் (பி. 5. 10. 1939 ) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் 1981ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். எழில்முதல்வன் என்ற பெயரில் அறியப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமலிங்கம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். இவர் 1964ல் தமிழக அரசு கல்வித்துறையில் பணியில் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப்பின் இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் தமிழ் இலக்கிய விமர்சனம் குறித்து ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது நவீன தமிழ் உரைநடை பற்றிய இலக்கிய விமர்சன நூலான புதிய உரைநடை 1981ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.[1][2]
இவர் உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், தமிழ் இளங்கலைப் பட்ட வகுப்பினைக் கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்றவர். முதுலைப் பட்ட வகுப்பினைச் சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இதற்காகப் பல பரிசில்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1975 இல் முனைவர் பட்டம் பெற்றவர். 1964 முதல் 1974 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு மன்னார்குடி, இராமநாதபுரம், கோயமுத்தூர், இராசிபுரம், பொன்னேரி, கும்பகோணம் கல்லூரிகளில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 1985 முதல் 2000 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி ஓய்வு பெற்றவர்.
வெளிவந்த நூல்கள்
- நாவல் இலக்கியம் (1972)
- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்(1973)
- புனைகதை வளம்(1973)
- அகிலனின் கலையும் கருத்தும்(1974)
- விடுதலைக்குப்பின் தமிழ்ச்சிறுகதைகள்(1977)
- புதிய உரைநடை(1978)
- இலக்கியத் தகவு(1979)
- திறனாய்வுநெறி(1983)
- நோக்குநிலை(1984)
- உரைகல்லும் துலாக்கோலும்(1989)
- பனிப்பாறையும் சில தீப்பொறிகளும்(1990)
- கவண்கற்களும் சிறகுகளும்(2000)
கவிதைகள்
- இனிக்கும் நினைவுகள்(1966)
- எங்கெங்கு காணினும்(1982)
- இரண்டாவது வருகை(1985)
- யாதுமாகி நின்றாய்(1986)
- தமிழ்க்கனல்(1987)
- எழில்முதல்வன் கவிதைகள்(2000)
புனைகதை நூல்கள்
- பொய்யான இரவுகள்(1973)
- அதற்கு விலையில்லை(1974)
- நாளைக்கும் இதே கியூவில்(1985)
- வாழ்க்கை வரலாறு
- பேராசிரியரியப் போராளி(2013)
மொழிபெயர்ப்பு நூல்கள்
- மகாகவி உள்ளூர்(1986)
- ஜதீந்திரநாத் சென்குப்தா(1992)
- பாபா பரீத்(1994)
- நிச்சய தாம்பூலம்( 2008)
- பொழுது புலர்ந்தது(2009)
- பாகிஸ்தான் கதைகள்(2010)
- கபீரின் நூறு பாடல்கள்(2011)
- கிழக்கு- மேற்கு பாகம்1(அச்சில்)
பதிப்பித்த நூல்கள்
- Selected Poems of Bharathidasan( in English)
- Bharathidasan Centenary Souvenir(1991)
- Velvi (வேள்வி) A Collection of seminar Papers in Tamil(1991)
- Medieval Indian Literature in English Translation, Tamil Literature(1100-1800).
- உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்(2000)
- உலகத் திருக்குறள் மாநாட்டு மலர்
- பகவத் கீதை வெண்பா(2004)
மேற்கோள்கள்
- Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
- An Album of Indian writers: issued on the occasion of Frankfurt World Book Fair. Sahitya Akademi. 1986. http://books.google.com/books?cd=1&id=zNxjAAAAMAAJ&dq=m+ramalingam+critic&q=m+ramalingam+#search_anchor.