உரைநடை
உரைநடை என்பது ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஒரு எழுத்து வடிவம் ஆகும். கவிதை போல அணிகள் இன்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். உரைநடை பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும், ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது. இதனால் இது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சியங்கள், ஒலிபரப்பு ஊடகங்கள், திரைப்படம், கடிதங்கள், வரலாறு, மெய்யியல், வாழ்க்கை வரலாறு, போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த தொடர்புகளுக்குப் பயன்படுகின்றது.
உரைநடைக்குக் குறிப்பான வடிவமோ, எதுகை, மோனை போன்ற அணிகளோ இருப்பதில்லை எனினும், உரைநடைகளில் அடுக்கு மொழிகள் போன்ற கவிதைப் பாங்கு காணப்படுவது உண்டு. கவிதை, உரைநடை ஆகிய இரண்டு இலக்கிய வடிவங்களையும் கலந்து உருவான ஒன்று வசன கவிதை என அழைக்கப்படுவது உண்டு. கவிதை ஓரளவு செயற்கைத்தன்மை கொண்டது. உரைநடையோ இயல்பான ஒழுங்கில் அமைவது.