சக்கரி தைலர்
சக்கரி தைலர் (நவம்பர் 24, 1784 - சூலை 9, 1850) அமெரிக்காவின் 12வது அதிபர் ஆவார். இவர் மார்ச்சு 1849 முதல் சூலை 1850 வரை பதவியில் இருந்தார். பதவியில் இருக்கும் போதே இறந்துவிட்டார். அதிபர் ஆவதற்கு முன் அமெரிக்க படையில் தளபதியாக (மேசர் செனரல்) இருந்தார். மெக்சிக்கோ-அமெரிக்க போரின் போது இவர் பெற்ற வெற்றிகளால் மக்களால் இவர் கொண்டாடப்பட்டு அதன் காரணமாக அமெரிக்க அதிபர் பதவியை அடைந்தார், அதிபராக இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டு குழப்பம் நேராமல் நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதே இவரின் தலையாய கடமையாக கருதினார். அமெரிக்க காங்கிரசில் அடிமை முறை குறித்து பெரும் கொந்தளிப்பு இருந்தது. ஆனால் அதில் அச்சிக்கலுக்கு முன்னேற்றமோ தீர்வோ காண்பதற்குள்ளேயே பதினாறு மாதத்தில் இவர் இறந்துவிட்டார்.
சக்கரி தைலர் | |
---|---|
![]() | |
12வது அமெரிக்க அதிபர் | |
பதவியில் மார்ச் 4, 1849 – சூலை 9, 1850 | |
துணை குடியரசுத் தலைவர் | மில்லர்டு பில்மோர் |
முன்னவர் | ஜேம்சு போல்க் |
பின்வந்தவர் | மில்லார்டு ஃவில்மோர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 24, 1784 பார்பர்சுவில், வர்ஜீனியா |
இறப்பு | சூலை 9, 1850 65) வாசிங்டன் டி.சி. | (அகவை
அடக்க இடம் | சக்கரி தைலர் தேசிய இடுகாடு லாயிசுவில் கென்டக்கி |
அரசியல் கட்சி | விக் |
வாழ்க்கை துணைவர்(கள்) | மார்கரட் சிமித் |
பிள்ளைகள் | மார்கரட் சிமித் சாரா நாக்சு ஆன் மாக்கெல் ஆக்டேவிய பான்னல் மேரி எலிசபத் ரிச்சர்டு |
தொழில் | படைத் தளபதி |
சமயம் | எபிகோபல் (Episcopal) (கிறித்துவம்) |
கையொப்பம் | ![]() |
தைலர் தோட்டம் வைத்திருந்த புகழ்வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் குடும்பம் வர்ஜீனியா மாநிலத்திலிருந்து கென்டக்கிக்கு இவர் இளமையாக உள்ள போது குடிபெயர்ந்தது. 1808ல் அமெரிக்க இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்து படைத்தலைவனாக (கேப்டனாக) 1812ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் அதன் குடியேற்ற நாடுகளுக்கும் எதிரான போரில் கலந்துகொண்டார். இவர் இராணுவத்தில் பல படிகள் உயர்ந்து மிசிசிப்பி ஆற்றங்கரையில் பல கோட்டைகளை அமைத்து கலோனலாக 1838ம் ஆண்டு அமெரிக்க தொல்குடிகளுக்கு எதிரான போரில் கலந்து கொண்டார். புளோரிடா மாநிலத்தில் இருந்த பல அமெரிக்க தொல்குடிகள் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய போரில் இவர் பெற்ற வெற்றியால் தேசிய அளவில் இவருக்கு புகழ் கிடைத்தது.
1845ல் அமெரிக்காவுடன் டெக்சாசு இணைந்ததை அடுத்து மெக்சிக்கோவுடன் போர் மூளும் என எதிர்பார்த்ததால் அதிபர் ஜேம்சு போல்க் தைலரை ரியோ கிரேண்டே பகுதிக்கு டெக்சாசின் எல்லையை பாதுகாக்க அனுப்பினார். 1846ல் மெக்சிக்கோ-அமெரிக்க போர் மூண்டது. அப்போரில் தைலர் பல வெற்றிகளை அமெரிக்க படைக்கு பெற்றுக்கொடுத்ததால் அவர் தேசிய அளவில் கொண்டாடப்பட்டார். மெக்சிக்க-அமெரிக்க போரின் போது பெற்ற புகழாலயே இவர் அமெரிக்க அதிபராகவும் ஆனார்.