குறளடி

குறளடி என்பது இரண்டு சீர்கள் அமைந்த ஓரடியைக் குறிக்கும் பாக்களுக்கான அடியாகும்.

"பார்த்தேன் சிரித்தேன்;

பக்கம்வரத் துடித்தேன்!"[1]

என்ற பாடலில் ஓரடியில் இரண்டே சீர்கள்வந்துள்ளன. எனவே குறளடியாகும்.

"திரைத்த சாலிகை

நிரைத்த போல்நிறைந்

திரைப்ப தேன்களே

விரைக்கொள் மாலையாய்"[2]

என்னும் இப்பாடல் வஞ்சித்துறைப் பாடலாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ‘திரைத்த சாலிகை’ முதலடி; ‘நிரைத்தபோல் நிறைந்’-இரண்டாம் அடி; ‘இரைப்ப தேன்களே’- மூன்றாம் அடி; ‘விரைக்கொள் மாலையாய்’- நான்காம் அடி. ஒவ்வொரு அடியும் இரு சீர்களைக்கொண்டு இயங்குகின்றது. இரு சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, குறளடி.

தளையால் பெற்ற பெயர்

மேற்கண்ட பாடலில் பயின்று வரும் தளை நேரொன்றிய ஆசிரியத் தளையாகும். நேரொன்று ஆசிரியத்தளை என்ற ஒரு தளை தோன்ற இருசீர்கள் தேவைப்பட்டன. இருசீர்களும் இணைந்து ஓரடியாய் நின்றன. செய்யுள் இலக்கணத்தில் மிகக்குறைந்த அடி இதுவே. ஆகையால் குறளடி எனப்பெற்றது. எனவேதான், ஒருதளையான் வந்த அடியினைக் குறளடி என்று கூறுவர்.

மேற்கோள்

  1. கண்ணதாசன் திரைப்படப்பாடல்
  2. சூளாமணி, சீயவதை. பா.172.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.