யோபு (நூல்)
யோபு (Book of Job) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

நூல் பெயர்
யோபு என்னும் விவிலிய நூலின் கதைத் தலைவர் பெயர் யோபு ஆகும். எபிரேய மொழியில் இது אִיוֹב ʾ iyov என வரும்.
யோபு நூலின் கருப்பொருள்
விலியத்திலுள்ள ஞான இலக்கியங்களுள் யோபு என்னும் இந்நூல் தலைசிறந்தது. உலக இலக்கியங்கள் வரிசையிலும் இடம்பெறும் நூல் இது.
ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் (= எதிரி) யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.
பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு.
துன்பத்திற்கு விடை தேடிய யோபு, இறுதியில் கடவுளின் திட்டத்தைத் துருவி ஆய்ந்து, அனைத்திற்கும் விளக்கம் கண்டிட மனித அறிவால் இயலாது என்னும் முடிவுக்கு வருகிறார்.
இவ்வாறு, "நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?" என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இந்நூல்.
யோபு நூல் தொகுக்கப்பட்ட காலம்
யோபு நூல் எக்காலக் கட்டத்தில் தொகுக்கப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இந்நூல் பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர். எனவே, இந்நூல் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
யோபு நூலின் உட்கிடக்கை
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முகவுரை | 1:1 - 2:13 | 766 - 768 |
2. யோபும் அவர்தம் நண்பர்களும்
அ) யோபின் முறையீடு
|
3:1 - 31:40
3:1-26
|
768 -797
768 - 769
|
3. எலிகூவின் உரைகள் | 32:1 - 37:24 | 797 - 804 |
4. யோபுக்கு ஆண்டவரின் பதில் | 38:1 - 42:6 | 804 - 810 |
5. முடிவுரை | 42:7-17 | 810 -811 |