நார்மாண்டி படையிறக்கம்
நார்மாண்டி படையிறக்கம் அல்லது நார்மாண்டி தரையிறக்கம் (Normandy landings) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த படையிறக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இப்படையெடுப்பின் முதல் நடவடிக்கையான பிரான்சு கடற்கரையில் படைகளைக் கரையிறக்கும் நடவடிக்கைக்கு நெப்டியூன் நடவடிக்கை (Operation Neptune) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதுவே நார்மாண்டிப் படையிறக்கம் என அழைக்கப்படுகிறது.
நார்மாண்டி படையிறக்கம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி | |||||||||
ஒமாகா கடற்கரையில் தரையிறங்கும் அமெரிக்கப் படைகள் (ஜூன் 6, 1944) |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பலம் | |||||||||
175,000 | 10,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
10,000 (மாண்டவர், காயமடைந்தவர், காணாமல் போனவர்) | 4,000 ~ 9,000 [1] |
இந்தக் குறியீடு நார்மாண்டி படையெடுப்பு மற்றும் ஓவர்லார்ட் நடவடிக்கை, டி-டே போன்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது. பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு ஓவர்லார்ட் நடவடிக்கை எனப்படுகிறது. இது ஜூன் 6 முதல்-ஆகஸ்ட் 25ல் பாரிசு வீழ்ந்தது வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதன் ஆரம்பக கட்ட தரையிறக்கம் ”நார்மாண்டி படையிறக்கம்”/”நெப்டியூன் நடவடிக்கை”, இது நிகழ்ந்த ஜூன் 6, 1944 டி-டே என்றழைக்கப்படுகிறது. நார்மாண்டி படையெடுப்பு என்பது இந்த படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற ஜூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
நார்மாண்டியில் படையிறக்கம் இரு கட்டங்களாக நடைபெற்றது. வான்வழியாக 24,000 பிரிட்டானிய மற்றும் அமெரிக்கப் படையினர் ஜுன் 5 பின்னிரவிலும், ஜூன் 6 அதிகாலையிலும் தரையிறங்கினர். பின் ஜூன் 6 காலை 6.30 மணியளவில் தரைப்படைகள் கடல்வழியாகத் தரையிறங்கத் தொடங்கின. தரையிறக்கம் நிகழ்ந்த 80 கிமீ நீளமுள்ள நார்மாண்டி கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இவ்வைந்து கடற்கரைகளிலும் ஜூன் 6 இரவுக்குள் 1,60,000 படையினர் தரையிறங்கினர். இந்த நடவடிக்கையில் 5000 கப்பல்களும் 1,75,000 மாலுமிகளும் ஈடுபட்டிருந்தனர். இதுவே போர் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும்.