சீனத் தமிழர்
சீனத் தமிழர் என்போர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு சீனாவில் வாழும் தமிழர்களாவர். இவர்களில் அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்து சீனா சென்றவர்களாவர். இவர்கள் பணியின் நிமித்தம் சென்று அங்கேயே குடியேறியவர்களாவர். சீனாவில் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் இல்லையென்பதால் ஏனைய நாடுகளில் புகலிடம் பெற்றது போன்று சீனாவில் இலங்கைத் தமிழர் எவரும் புகலிடம் பெற்றவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் வாய்ப்பின் அடிப்படையில் சென்றோர் சிலர் மட்டுமே உள்ளனர்.
சீனாவில் தமிழ் மொழி
சீனாவில் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் சீன வானொலியில் தமிழ் மொழி ஒலிப்பரப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.[1] தமிழ் வழி சீனம் கற்பித்தல், இணைய வழி செய்திகளை வழங்குதல் எனும் முன்னெடுப்புகளும் காணப்படுகின்றன. தமிழ் மொழியைக் கற்று, சூ சுவெங் வா எனும் தனது பெயரை கலையரசி என தமிழாக மாற்றிக்கொண்டு சீனத் தமிழ் வானொலியில் தமிழ் ஒலிப்பாளராக பணியாற்றும் சீனப் பெண் ஒருவரும் உள்ளார்.[2] தமிழருக்கும் சீனருக்கும் உள்ள நெருக்கத்தினால் சீனர்களில் சிலர் தமிழ் மொழியைக் கற்று பேசவும்,[3] தமிழ்ப் பாடல்கள் பாடவும்,[4] பாடல்களுக்கு ஆடவும் கூட செய்கின்றனர்.[5]
வாழும் இடங்கள்
சீனாவில் வாழும் தமிழர்கள் அநேகமானோர் சீனாவின் தலைநகரான பீஜிங் பகுதியில் வசிக்கின்றனர். அதனைத் தவிர்ந்து ஹொங்கொங்கிற்கு அண்மித்த சீன மாநிலமான, குவாந்தோங் மாநிலத்தின் சென்ஞேன் பகுதிகளில் வசிக்கின்றனர். இங்கு ஈழத் தமிழர்கள் சிலரும் வசிக்கின்றனர்.
சீனா ஹொங்கொங் தரைவழி போக்குவரத்து
சென்ஞேன் நிலப்பரப்பின் எல்லை நகரங்களான லோ வூ மற்றும் லொக் மா சாவ் ஆகிய இரண்டு இடங்களுக்கு ஹொங்கொங்கில் இருந்து எம்டிஆர் அதிவேக தொடருந்து சேவையூடாக 45 நிமிடங்களில் சென்றடையக்கூடிய தரைவழி போக்குவரத்து வசதி உள்ளது.[6] எனவே சீனாவில் சென்ஞேன் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அடிக்கடி ஹொங்கொங் வந்து செல்வதும், ஹொங்கொங் தமிழர்கள் சென்ஞேன் சென்று வருவதும் சாதாரண விடயங்களாகும். இந்தியா, இலங்கை வணிகர்கள் ஹொங்கொங் வழிமாற்று வீசாவுடனோ அல்லது ஹொங்கொங் வந்து, ஹொங்கொங்கில் சீனா வீசா பெற்றோ தமது வணிகத்திற்காக சென்ஞேன் செல்வது வாடிக்கையான நிகழ்வுகளாகும். ஹொங்கொங்கை விட சீனாவில் பொருட்களின் விலை பன்மடங்கு மலிவாக இருப்பதே ஹொங்கொங் தமிழர் சென்ஞேன் நகருக்கு அடிக்கடி பயனம் மேற்கொள்வதற்கான காரணியாகும்.