குறிஞ்சி (திணை)
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு சேயோன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
- இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறிய, குறிஞ்சிச் செடி என்னும் கட்டுரையை பார்க்கவும்
குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள்
கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: சேயோன்
- மக்கள்: குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, கானவர்
- மரங்கள்: வேங்கை, அகில், சந்தனம், மூங்கில்
- விலங்குகள்: குரங்கு, கரடி,புலி, பன்றி
- பறவை : கிளி, மயில்
- பறை : தொண்டகம், வெறியாட்டு
- பண்: குறிஞ்சி யாழ்
- மலர்கள்: குறிஞ்சி, காந்தள், வேங்கை
- தொழில்: கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல், வெறியாடல், தினைகாத்தல்
- நீர் நிலை : அருவி, சுனை
- உணவு : தினை, மலைநெல், மூங்கிலரிசி
- ஊர் : சிறுகுடி
குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : புணர்தல்
- புற ஒழுக்கம் : வெட்சி
குறிஞ்சி நிலப்பகுதிகளில் குரங்கு, கரடி, சிறுத்தை, புலி, யானை, காட்டுப்பன்றி, காட்டு ஆடு போன்ற விலங்குகளும் வேங்கை, திமிசு, தேக்கு,சந்தனம், அகில், அசோகு, மூங்கில், நாகம், கடம்பு, கருங்காலி, பலா போன்ற மரங்களும், குறிஞ்சி, காந்தள், வேங்கை போன்ற மலர் வகைகளும் காணப்படுகின்றன.
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |