அசாகான் சுல்தானகம்

அசாகான் சுல்தானகம் என்பது பொ.கா. 1630 முதல் பொ.கா. 1946 வரை நிலைத்திருந்த ஒரு மலாய சுல்தானகம் ஆகும். இது சுமாத்திராவின் வடகிழக்கில், இன்றைய இந்தோனேசியாவின் அசாகான் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் அமைந்திருந்தது.

அசாகான் சுல்தானகம்
1630–1946
அசாகான் சுல்தானகம் அமைவிடம்
தலைநகரம் குறிக்கப்படவில்லை
மொழி(கள்) அச்சே, மலாயு மொழி, அரபு, பதக் மொழி
சமயம் இசுலாம்
அரசாங்கம் முடியாட்சி
சுல்தான்ராஜா அப்துல் ஜலீல்
அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ்
வரலாறு
 - முதலாவது சுல்தானின் முடிசூடல் 1630
 - இந்தோனேசியாவின் விடுதலை 1946
Warning: Value specified for "continent" does not comply
இது இந்தோனேசிய வரலாறு
தொடரின் ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
குத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமாநகாரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திரர் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுண்டா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கேடிரி (1045–1221)
சிங்காசாரி (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முஸ்லிம் அரசுகளின் எழுச்சி
இஸ்லாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தன் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)

வரலாறு

இவ்வரசு அச்சே சுல்தானகத்தின் சுல்தான் இசுக்கந்தர் முடாவின் மகன் ராஜா அப்துல் ஜலீலினால் பொ.கா. 1630 அளவில் உருவாக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை இது அச்சே சுல்தானகத்துக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாகவே இருந்தது.

அசாகானின் சுல்தான் ராஜா மூசா ஷாஹ் 1808 இல் இறந்த பின்னரே அவரது மகன் பிறந்தான். எனினும், அசாகான் சுல்தானகத்தின் ஆட்சித் தொடர் விதிகளின்படி, முன்னைய ஆட்சியாளர் இறந்து ஒரு நாளைக்குள் அடுத்த ஆட்சியாளரை அறிவிக்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக, அவரது தம்பியாகிய ராஜா அலீ ஷாஹ் ஆட்சிக் கட்டிலேறினார். எனினும் அங்கிருந்த பிரமுகர்கள் பலர், குறிப்பாக அசாகான் பிராந்தியத்தில் வாழும் பதக் இனத்தைச் சேர்ந்தோர் இப்புதிய ஆட்சியாளரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக, ராஜா மூசா ஷாஹ்வின் கைக்குழந்தை ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டு, அப்போதைய பதில் ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டது.

பின்னர், ராஜா அலீ ஷாஹ்வின் மகன் அச்சே சுல்தானகத்திலிருந்து விடுதலை பெற்ற தனியரசாக அசாகான் சுல்தானகத்தை அறிவித்ததுடன், சுல்தான் முகம்மது ஹுசைன் ரஹ்மத் ஷாஹ் என்னும் பெயரில் ஆட்சியாளரானார். நாற்பத்தாறு ஆண்டுகள் நடைபெற்ற அவரது ஆட்சியின் போது ஐரோப்பியருடனான வணிகத் தொடர்புகள் கூடின. அப்போது அசாகான் சுல்தானகம் நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகளின் அரசுடனும் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. 1859 இல் அவர் இறந்தபோது ராஜா மூசா ஷாஹ்வின் சந்ததியினருக்கும் ராஜா அலீ ஷாஹ்வின் சந்ததியினருக்கும் இடையில் யார் ஆட்சியாளராவது என்பது தொடர்பில் சிக்கல் எழுந்தது.

ஒல்லாந்தர் தலையீடு

சுல்தான் முகம்மது ஹுசைன் இரண்டாம் ரஹ்மத் ஷாஹ் (ஆட்சிக் காலம் 1888-1915)

பின்னர் ஆட்சியாளரான சுல்தான் அஹ்மத் ஷாஹ் ஒல்லாந்தருடன் நல்லுறவைப் பேணாமல் இருந்தமை அவருக்குப் பாதகமாக முடிந்தது. அவர்கள் 1865 இல் அவரைப் பதவியிறக்கி விட்டு, ராஜா மூசா ஷாஹ்வின் பேரனான சுல்தான் நிஉமத்துல்லாஹ் ஷாஹ்வை ஆட்சியாளராக்கினர். எனினும், அது ஒல்லாந்தர்களுக்கும் நன்மையானதாக அமைந்து விடவில்லை. சுல்தான் நிஉமத்துல்லாஹ் ஷாஹ் தன்னுடைய தலைநகரை நாட்டின் உட்பகுதியை நோக்கி நகர்த்தி, ஒல்லாந்தர்களின் பீரங்கிப் படகுகளின் தாக்குதல் தொலைவுக்கு அப்பால் அமைத்துக் கொண்டார். அப்படியிருந்தும், சுல்தான் நிஉமத்துல்லாஹ்வால் தன்னுடைய அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை. 1868 இல் ஒல்லாந்தர்கள் அவரைப் பதவியிலிருந்து அகற்றினர்.

அப்போது சுல்தான் நிஉமத்துல்லாஹ்வுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து குவாலுஹ் அரசு என்னும் பெயரில் ஓர் அரசை நிறுவின. இருபத்து மூன்றாண்டுகளாகத் தொடர்ந்த சிறு சிறு சண்டைகளுக்கும், போர் நிறுத்தங்களுக்கும் பிறகு மூன்று தரப்பினரும் சேர்ந்து 1886 இல் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். நெதர்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகளின் அரசாங்கம் சுல்தான் அஹ்மத் ஷாஹ்வை அசாகானின் ஆட்சியாளராக மீண்டுமொரு தடவை அலுவல் முறையாக அங்கீகரித்தது.

வீழ்ச்சி

அஹ்மத் ஷாஹ் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் சுல்தான் முகம்மது ஹுசைன் இரண்டாம் ரஹ்மத் ஷாஹ் ஆட்சியாளரானார். அவரது ஆட்சியின் போது அசாகான் சுல்தானகம் மிகச் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டது. 1915 இல் அவர் இறந்ததும், அவரது மகன் சுல்தான் ஷாஇபுன் அப்துல் ஜலீல் ஆட்சியாளரானார். அப்போது அசாகான் சுல்தானகம் இறப்பர் ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறந்தது.

அந்நிலை பெருங்காலம் நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலத்தினுள் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்ட போது அசாகான் சுல்தானகமும் பொருளாதாரப் பாதிப்புக்களைக் கொண்டிருந்தது. அப்போது இந்தோனேசியத் தீவுகளை ஆக்கிரமித்த யப்பானியர்கள் மிகக் கொடூரமாக நடந்து கொண்டனர். எங்கும் குருதி பெருக்கெடுத்தோடியது. அதன் காரணமாக, மக்களிடம் ஒரு "சமூகப் புரட்சி" தேவையெனும் உளப்பாங்கு கூடியது.

அப்போதைய கொடுமைகள் விரைவாக நீங்கிவிடவில்லை. அச்சே மற்றும் சாவகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் குடியரசொன்றை நிறுவுவதற்காக ஒல்லாந்தரை வெளியேற்றிவிட முயன்று கொண்டிருந்த அதேவேளை, ஒல்லாந்தர்கள் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவ முனைந்தனர். அதன் போது இந்தோனேசியத் தீவுகளெங்கிலும் ஏராளமான கொடுமைகள் அரங்கேறின. யப்பானியர் ஒரு பக்கமும் ஒல்லாந்தர் மறு பக்கமுமாக மக்களைக் கொடுமைப்படுத்தினர். எத்தனையோ சிற்றரசுகள் அதிகாரம் செலுத்த முடியாதளவு ஒடுங்கி விட்டிருந்தன. அவற்றின் இறுதியில், இந்தோனேசியத் தீவுகளைச் சேர்ந்த சுல்தானகங்கள் பலவும் மீளமைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்தோனேசியக் குடியரசினுள் உள்வாங்கப்பட்டன. அசாகானின் அப்போதைய சுல்தான் மேலும் முப்பத்து நான்கு ஆண்டுகள் உயிரோடிருந்தார். அவரது காலமே இவ்வரச மரபின் மிகக் கூடிய ஆட்சிக் காலமாகும்.

இந்தோனேசிய விடுதலையின் பின்னர்

இந்தோனேசியாவின் ஏனைய பகுதிகளிலிருந்த மரபுவழி ஆட்சியாளர்களைப் போலன்றி, சுமாத்திராவின் சுல்தானகங்கள் மீளமைக்கப்படாத அதேவேளை, அவற்றின் ஆட்சியாளர்கள் தங்களது பதவி நிலைகளைப் பயன்படுத்துவதும் அனுமதிக்கப்பட்டதாக இருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், அவ்வரசுகளை மீண்டும் நிறுவுவதனால் தாம் பெறும் எண்ணெய் வருமானத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டியேற்படுமென, இந்தோனேசிய அரசாங்கம் அச்சமுற்ற போதிலும், அவற்றை மீள நிறுவுவதற்காக மலாய சமுதாயத்தினர் பெரிதும் பாடுபடுகின்றனர்.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.