2 குறிப்பேடு
2 குறிப்பேடு (2 Chronicles) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் முன்னே அமைந்துள்ள 1 குறிப்பேடு என்னும் நூல் தாவீது அரசர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறுகிறது; எருசலேமில் கோவில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாவீது அரசரே செய்தார் என்று விளக்குகிறது.

நூலின் பெயர்
"1 & 2 குறிப்பேடு" என்னும் நூல்கள் மூல மொழியாகிய எபிரேயத்தில் "Divrei Hayyamim" (= நாள் நிகழ்வுகள்) என அறியப்படுகின்றன. அதாவது, யூதா-இசுரயேல் நாடுகளை ஆண்ட அரசர்களின் "காலத்தில்" ("நாள்களில்") நிகழ்ந்தவை அங்கே குறிக்கப்பட்டுள்ளன. இதனால், பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் "குறிப்பேடு" என்பது "நாளாகமம்" என்று அறியப்பட்டது.
கிரேக்க மொழியில் "குறிப்பேடுகள்" Paralipomenon (Παραλειπομένων) என்னும் பெயரால், அதாவது "விடுபட்டவை" அல்லது "பிற", அல்லது "வேறு" என்னும் பொருள்படும் வகையில் அழைக்கப்பட்டன.
2 குறிப்பேடு நூலின் மையக் கருத்துகள்
"இரண்டாம் குறிப்பேடு" என்னும் இந்நூல் "முதலாம் குறிப்பேட்டின்" தொடர்ச்சியாகும்.
இதன் முற்பகுதி சாலமோனது ஆட்சியின் தொடக்கம் முதல் அவரது இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறது.
நூலின் இரண்டாம் பகுதி அரசர் சாலமோனின் மகனும் அவருக்குப்பின் வந்தவனுமான ரெகபெயாமுக்கு எதிராக எரொபவாமின் தலைமையில் வடநாட்டுக் குலங்கள் கிளர்ந்தெழுந்ததை விளக்குகிறது.
மூன்றாம் பகுதி எருசலேம் வீழ்ச்சியுற்ற கி.மு. 586 வரையிலான தென்னாட்டுக் குலங்கள் பற்றிய வரலாற்றைக் கொண்டுள்ளது.
1 குறிப்பேடு நூலின் உட்கிடக்கை
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. சாலமோனின் ஆட்சி
அ) முற்பகுதி
|
1:1 - 9:31
1:1-17
|
658 - 671
658 - 659
|
2. வடநாட்டுக் குலங்களின் கலகம் | 10:1-19 | 671 - 672 |
3. யூதாவின் அரசர்கள் | 11:1 - 36:12 | 672 - 711 |
4. எருசலேமின் வீழ்ச்சி | 36:13-23 | 711- 712 |