அட்டவீரட்டானக் கோயில்கள்
அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும்.[1] சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
- திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
- திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
- திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
- திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்
- திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்
- திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
- திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
- திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும்
பிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக, இவை எட்டும், தமிழ் மரபில் சொல்லப்படுகின்றன.
திருக்கண்டியூர்

ஈசன், படைப்பின் முதல்வன் தானே என்று அகந்தையுற்றிருந்த பிரமனின் தலையைத் துண்டித்த திருத்தலம் இங்குள்ள திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ஆகும். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.
- கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
- தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
- நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
- தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)
மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை;
திருக்கோவலூர்
உலகுயிரையெல்லாம் துன்புறுத்தி வந்த அந்தகன் எனும் அசுரனை, சக்கராயுதத்தால், ஈசன் அழித்த தலம் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவில் ஆகும். திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம், தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. திரு அண்ணாமலைக்கு அருகில் உள்ளது. கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
- வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
- வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்
- குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே(திருமந்திரம் 339)
மூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி!
திருவதிகை
ஈசன் முப்புரம் அழித்த திருத்தலம். பண்ருட்டிக்கும் சீர்காழிக்கும் இடையே அமைந்திருக்கிறது.
- அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
- முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
- முப்புரமாவது மும்மல காரியம்
- அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமந்திரம் 343)
மூலவர்:வீரட்டானேஸ்வரர்
திருப்பறியலூர்

தக்கன் சிரங்கிள்ளி அவன் அகந்தை அடக்கிய தலம் திருப்பறியலூர் ஆகும். மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும். அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும். திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும். மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்; மூலவளின்பெயர்: இளங்கொம்பனையாள்
திருவிற்குடி
சலந்தரன் எனும் அசுரனை அழித்த தலம் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில். திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.
- எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
- தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
- பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
- அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமந்திரம் 341)
மூலவர்:ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி
வழுவூர்
கயமுகாசுரனைக் கொன்டு அவன் யானைத் தோலைப் போர்த்த திருத்தலம், வழுவூர் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீ. தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது. இந்த நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம். சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.
திருக்குறுக்கை

காமதகனத் திருவிளையாடலை ஈசன் புரிந்த தலம், திருக்குறுக்கை.
- இருந்த மனத்தை இசைய இருத்திப்
- பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
- திருந்திய காமன் செயலழித்தங்கண்
- அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம் 346)
மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது. மூலவர்: வீரட்டேஸ்வரர் மூலவள்: ஞானாம்பிகை
திருக்கடவூர்
மார்க்கண்டேயனுக்காக இயமனை அழித்த தலம், திருக்கடையூர்.
- மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
- மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
- காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
- ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமந்திரம் 345)
இந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம். மூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி
- கொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,மான்
- கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்
- என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே (தேவாரம்)
பிற தகவல்கள்
இந்த எட்டுத் தலங்களையும் ஒருதனிப்பாடலானது வருமாறு பாடுகின்றது.[2]
பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர் காமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே