வருமுலையாரித்தி

வருமுலையாரித்தி சங்ககாலப் பெண் புலவர்களுள் ஒருவர். இவரது பெயரை வருமுலை ஆரித்தி என்று பிரித்துப் பார்த்தால் பருத்த முலையை உடையவர் எனப் பொருள் வரும். இற்றி என்பது சங்ககாலப் பெயர்களில் ஒன்று. இந்த வகையில் வருமுலையார் இற்றி என்று பொருள் படும்படியும் பிரித்துப் பார்க்கலாம்.

இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது குறுந்தொகை 176 எண்ணிலுள்ள பாடலாக அமைந்துள்ளது.

பாடல் சொல்லும் செய்தி

அவன் ஒருநாள் மட்டும் வந்தானா? இரண்டு நாள் மட்டும் வந்தானா? இல்லை இல்லை. பலநாள் வந்தான். பணிவுள்ள சொற்களால் என்னுடன் பேசினான். என் நெஞ்சை நன்றாக நெகிழச் செய்துவிட்டான். அதன் பின் போய்விட்டான்.

(உன் தேனைப் பருகிவிட்டு) வரையில் கட்டியிருக்கும் தன் கூட்டுக்குச் செல்லும் தேனீ போலச் சென்றுவிட்டான்.

உனக்கு இனி ஆசு(பற்றுக்கோடு) அவன்தான். அவன் எங்கு இருக்கிறானோ தெரியவில்லை.

எங்கோ இடியுடன் பெய்த மழையால் இங்குள்ள ஆற்றில் வெள்ளம் வருவது போல இங்கு உன் நெஞ்சில் (காம)வெள்ளம் பாய்கிறது. அதனால் உன் நெஞ்சு அழுகிறது.

(அவன் வந்தால் அவனைக் கடிந்துகொள்ளாது ஏற்றுக்கொள் என்று தோழி தலைவியிடம் சொல்லித் தலைவனுக்கு வாயில் நேர்கிறாள்.)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.